• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராக நந்தனம் -2

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
161
54
28
Tiruppur
அத்தியாயம்-2

இரவு நேரத் தென்றல் குளுமையாக வீசிக் கொண்டிருந்தது. காந்திபுரம் அவிநாசி சாலையில் சரவணன் வாகனத்தை ஓட்ட, அவன் பின் ஒரு கோன் ஐசுடன் பின்னால் அமர்ந்திருந்தாள் ராக வர்ஷினி. பானி பூரி, தஹி பூரி, தட்டுவடை செட்டைத் தொடர்ந்து, ஐஸ்கீரிமில் நிறுத்தி இருந்தாள். அவள் கோபம் காற்றுப் போன பலூனாய் இறங்கி இருக்க அந்த இரவை அனுபவித்தப்படியே வந்தாள். கோபத்தைக் காட்டி விட்டு, எதாவது சாப்பிட்டு பின்பு அதை மறந்து அடுத்த வேலையில் மூழ்கி விடுவாள்.

வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று மகிழ்வாய் இருப்பது என்பாள்.

ஹோப்ஸ் தாண்டி, சித்ராவில் வண்டியை விட்டான். அமைதியான தெருவில் அவள் வீடு இருக்க, அவளை இறக்கி விட்டான்.

“சரி சரோ. குட் நைட். நாளைக்குப் பார்க்கலாம். இரண்டு நாள் லீவ். ஜமாய்க்கிறோம்.”

தலையை இடம் வலமாக ஆட்டியபடி, “குட் நைட். குட்டிப் பிசாசு. போய் உங்கப்பாவை இம்சை பண்ணாமல் தூங்கு.”
உதடுகளை சுழித்து அழகு காட்டியவள் ஒரு பாடலை முனு முனுத்தப்படியே கேட்டைத் திறந்து கொண்டு உள் சென்றாள்.

“டாடி.. டாடி ஓ மை டாடி.” எனப் பாடிக் கொண்டு ஆடியபடியே சென்றாள்.

“மிஸ்டர். ராஜ சுந்தரம். மிஸ்டர். ராஜ சுந்தரம்."
கேஸ்கட்டில் முழ்கி இருந்த அவளுடைய தந்தையை வம்பிழுத்தாள். தன் செல்ல மகளை முறைத்தப்படி தலையை நிமிர்த்தினார் ராஜ சுந்தரம்.

“இன்னும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்களே? தோசை சுடட்டா?”

“ஏதே? நீ சுடற தோசையாமா? அதுக்குப் பேரு தோசை இல்லை. கருப்பு அடைனு சொல்லு.”

“டாடி என்னோட குக்கிங்க் ஸ்கில்லை அண்டர் எஸ்டிமேட் பண்ணாதீங்க. நான் எவ்வளோ பெரிய குக்காக்கும்.”

“உண்மைதான்மா. ஆனால் உனக்கு சுட்டுப் போட்டாலும் தோசை சுட வராதே.”
முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டபடி அமர்ந்தாள் ராகவர்ஷினி. மகளின் செய்கையில் சிரிப்பு வரவும், கேஸ்கட்டை வைத்தப்படி எழுந்தார்.

“உனக்கென்னமா வேணும்?”

“நான் சாப்பிட்டேன் டாடி. இனி தூங்கப் போகனும்.”
ராகாவின் அன்னை சிறு வயதிலேயே தவறி விட ஒரே மகளை செல்லத்தைக் கொட்டி வளர்த்திருந்தார். தாயில்லா பிள்ளை தைரியம் குறைவாக இருக்கக் கூடாது என தற்காப்புக் கலைகள் அனைத்தும் கற்றுக் கொடுத்து வளர்த்தார்.

வக்கில் பிள்ளை என்பதால் சட்டமும், வழக்கையும் பார்த்து வளர்ந்தவள். சிறு தவறு என்றாலும் தட்டிக் கேட்டு விடும் பழக்கத்தை உடையவள். அவளுக்கு ஆதரவே அவளுடைய தந்தைதான்.

இருவரும் அழகான கூட்டுப் பறவைகள். எது நடந்தாலும் தந்தையிடம் கூறி விடுவாள். அவருக்கு அடுத்து சரவணன் அவளுக்கு எப்போதும் துணை. இவளுக்கு மாறான அமைதியான குணம். ராதாவுக்கு சமைக்கத் தெரியும். யூ டியூப் பார்த்து ஓரளவு அனைத்தும் கற்றுத் தேர்ந்திருந்தாள்.

ராஜசுந்திரத்தின் அளவுக்கெல்லாம் அவளுக்கு சமைக்க வராது என்பதே உண்மை.

“டாடி குட் நைட். நான் தூங்கப் போறேன்.”

“பிரஷ் பண்ணிட்டு தூங்குமா.”

“ஓகே டாடி.”
தன்னுடைய அறைக்குள் சென்றவள் பேக்கை வைத்து விட்டு மெத்தையில் தொப்பென்று விழுந்தாள். சில நிமிடங்கள் படுத்திருந்தவள், பின்பு இரவு உடை மாற்றிவிட்டு விளக்கை அணைத்து விட்டு படுத்துக் கொண்டாள்.

இரவு ஒரு மணி சட்டென்று எழுந்தாள் ராகா.

“அய்யோ பசிக்குதே.” பசி எடுத்துவிட உறக்கம் தொலைந்தது.

“இப்ப எதாவது சாப்பிடனுமே?” படுக்கையில் இருந்து எழுந்தவள் கைப்பேசியை எடுத்தப்படி கிட்சனுக்குச் சென்றாள். விளக்கை ஒளிர விட்டவள் குளிர்பதனப் பெட்டியை நீக்கிப் பார்க்க பழங்கள் தீர்ந்து போயிருந்தது. முட்டை மட்டும் இருக்க அதில் இரண்டை எடுத்தாள். வெங்காயம் ஒன்றை எடுத்து வேகமாக வெட்டினாள்.
முட்டையை ஒரு பாத்திரத்திற்குள் ஊற்றுவதற்குள் அவள் காதைப் பிடித்தார் ராஜ சுந்தரம்.

“டாடி பசிக்குது."

“நினைச்சேன். இந்தப் பக்கம் வாம்மா. நான் ஊத்தறேன்.”

அவள் கையில் இருந்த முட்டையை வாங்கியவர் அதை உடைத்து ஊற்றி வெங்காயத்தையும், மிளகாயையும் போட்டார். மிளகும் உப்பும் சேர்த்து அடித்துக் கல்லில் ஊற்றிக் கொடுக்கும் முன்னரே கிட்சன் கவுண்ட்டரில் ஏறி அமர்ந்து கொண்டாள். தட்டை எடுத்துக் கொள்ள அதில் ஒரு ஆம்லெட்டைப் போட்டார் சுந்தரம்.

“சூப்பர்ப்பா. “ என சுவைத்தப்படியே உண்டாள் ராகா.
அவரும் ஒன்றை சாப்பிட்டார்.

“டாடி எப்போதும் நீங்கதான் பெஸ்ட்.”
இப்போதும் சிறு பிள்ளை போல் இருக்கும் மகளைப் பார்க்க அவருக்கு இவளுக்கு ஏற்ற ஒருவனைத் திருமணம் செய்து விட வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
ஆனால் அவள் மகளின் திருமணத்தில் அவரே இருக்கமாட்டார் என்பதை அவர் அறிய வாய்ப்பில்லை. அதற்குள் மகள் ஏதோ சொல்ல அதில் சிரிக்க ஆரம்பித்தார். இருவரும் உண்டபின்னர் திரும்ப அறைக்குச் சென்று மீண்டும் உறங்கினர்.

சுந்திரம் எழுந்து ஜாக்கிங்க் சென்று விட வழக்கமாக அவருடன் வருபவள் உறங்கி விட அவளை விட்டுச் சென்று விட்டார்.
அன்று எட்டு மணிக்குத்தான் விழிப்புத் தட்டியது ராகாவுக்கு. வெளியில் வர தக்காளிச் சோறு மணந்து கொண்டிருந்தது.

“குட் மார்னிங்க் டாடி.”

“குட் மார்னிங்க் ராகாம்மா.”

“அப்பா நான் டிரஸ் எல்லாத்தையும் வாஷிங்க் மெஷினில் போட்டு, வேக்யூம் போட்டறேன். நீங்க டைம் ஆச்சுனா கிளம்புங்க. நான் இன்னிக்கு சரோ கூட வெளியில் போறேன்.”

“சரிம்மா.”

அவள் வேலையை முடித்து விட்டு அடுத்த முக்கால் மணி நேரத்தில் குளித்துக் கிளம்பி இருந்தாள். இடையில் சுந்தரம் விடை பெற்றுச் சென்றிருக்க, அன்று காலை உணவு தனியாகச் சாப்பிட்டு விட்டு சரவணனுக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.

அவன் வரவும் வீட்டைப் பூட்டியவள், கேட்டையும் பூட்டிக் கொண்டு கிராப் டாப், ஜீன்ஸூக்குப் பொருத்தமாக ஒரு ஸ்லிங்க் பேக்கை மாட்டிக் கொண்டு சரவணனின் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.

“குட் மார்னிங்க் சரோ.”

“குட் மார்னிங்க் ராக்ஸ். எங்க போறது?”

“தியேட்டர். அப்புறம் லூலு மால். பார்பிகியூ நேசன்.”
தியேட்டரில் நேரம் செலவளித்தப் பின்னர், லூலு மாலில் சிலவற்றை ஷாப்பிங்க் செய்து கொண்டு பார்பிகியூ நேசனுக்குச் சென்றனர்.
பார்க்கிங்கில் வண்டியை நிறுத்து விட்டு வரும் முன் ஒரு அழைப்பு சரவணனுக்கு வர அவளை முன்னே போகும்படி கை அசைக்க, ராகாவும் ஷாப்பிங்க் பைகளை இரு கைகளிலும் பிடித்தப்படி நடந்தாள். கதவைத் திறந்து உணவகத்தின் உள்ளே செல்லும் போது தன் நண்பன் வருகிறானா எனத் திரும்பிப் பார்த்து விட்டுத் திரும்ப நேராக அவள் எதிரே வந்தவுடனும் மோதிக் கொண்டாள்.

தீடிரென மோதியதில் அவளுடைய இரண்டு பைகளைத் தவறவிட்டாள்.

“ச்சோ.. ஐம் சாரி.” என முனு முனுத்தப்படியே தன் பைகளை எடுத்து விட்டு நிமிர அங்கு ரூத்ர மூர்த்தியாய் நின்று கொண்டிருந்தான் ரகு நந்த வர்மன்.

அவனைப் பார்த்ததும் எதிரில் இருந்தவள் அதற்கு மேல் பத்ர காளியாகிவிட்டாள்.
ரகு நந்தன் அவள் முகத்தைப் பார்த்தது இல்லை.

ஆனால் அவள் பார்த்திருக்கிறாள் அல்லவா! விளைவாக பார்பிகியூ நேசனில் அவனை பார்பிகியூ செய்யும் நிலையில் இருந்தாள் ராக வர்ஷினி.

“கண்ணு இல்லை. பார்த்து வரத் தெரியனும்.” என தான் இருக்கும் இடத்தை எண்ணி அடிக்குரலில் அவன் சீற, “அது முதல்ல பேசறவங்களுக்கு இருக்கனும்.” என்றாள் இவள்.

இன்று அவள் ஹீல்ஸ் அணிந்திருக்க அவள் உயரமாக இருந்ததால் ரகு நந்தனும் அவள் தான் என உணரவில்லை.

“வாட்ச் யுவர் வோர்ட்ஸ்.” மீண்டும் அதே சீற்றம்.

“உங்கிட்டயே வாட்ச் பண்ணற மாதிரி எதுவும் இல்லை. இதுல நான் வார்த்தையை வேற கவனிக்கனுமாம். முடியாது போடா.”
அவன் போடா என்றதில் ரகுவின் கோபம் ஏகத்திற்கும் எகிறியது. அவர்களுக்குள் வாக்குவாதம் அதிகமாகும் உணவகத்தின் பணியார்கள் இருவர் அவர்களிடம் வந்து விட்டனர்.

“ஆர் யூ ஒகே மேம்?”

“ஓகே. ஓகே.”

“நீங்க வாங்க மேம். அந்த டேபிள்.” என வழியைக் காட்டவும், தன் எதிரில் நிற்பவனை நோக்கி ஒரு முறைப்பை இலவசமாக வழங்கி விட்டு சென்றாள் ராகா.

“இந்த சிலுவண்டுக்கு என்ன தைரியம்?” எனப் பொறுமியவனைப் பணியாளார் பார்க்க, “சார் வாங்க.” எனக் கதவைத் திறந்து விட்டான்.

இப்படி இருவரும் பார்த்த இரண்டு சந்திப்புகளிலும் மோதிக் கொண்டிருக்க விதியோ இவர்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது.

மேசையில் இரு கன்னங்களுக்கும் கை வைத்து அமர்ந்து கொண்டிருந்தாள் ராகா. அப்போதுதான் வந்து சேர்ந்தான் சரவணன்.

சட்டென அவள் மாற்றம் புரிய அதற்குள் என்ன நடந்திருக்கும் என்று யோசித்தப்படி அவள் எதிரில் அமர்ந்தான்.

“ஏய் ராக்ஸ். இப்ப எதுக்கு மூஞ்சியைத் தூக்கி வச்சுட்டு இருக்க?”

“டேய் கோட் போட்ட குரங்கை மறுபடியும் பார்த்தேன்டா.”

“ஏதே? அவரா? உங்கிட்ட இருந்து உயிரோட தப்புச்சு போயிட்டாரா? பார்பிகியூ நேசனில் நீ அவரை கிரில் பண்ணி இருக்க மாட்ட? எப்படி தப்பிச்சாரு?”
அவன் கேட்ட தொனியில் அவனைக் காதில் புகை வராத குறையாக முறைத்தாள் ராகா.

“ராகா கூல். நாம இங்க வந்தது எஞ்சாய் பண்ண. யாரு வந்தால் நமக்கென்ன? அவனுக்கும் நமக்கும் என்ன சம்மந்தம்? நமக்கு சாப்பாடு முக்கியம்.”

ராகாவும் வழக்கம் போல் சிந்திக்க ஆரம்பித்தாள்.
‘ஆமா நான் ஏன் கண்டவனைப் பத்தி யோசிச்சு என்னோட ஹேப்பி டேவை கெடுத்துக்கனும். ஜாலியா சாப்பிட்டு ஜாலியா சுத்தனும். இன்னர் பீஸ். ஹக்குனா மட்டாட்டா.’ என மனதில் சொல்லிக் கொண்டாள்.

“சரிடா. ஆர்டர் பண்ணலாம்.”
இருவரும் ஆர்டர் செய்து நன்றாக மதிய உணவை வெளுத்துக் கட்டினர்.

வெளியே வந்ததும், “அப்பாடா வயிறு நல்லா புஃல்லாகிருச்சு. வாடா. போலாம். இனி வீட்டுக்குப் போயிட்டு செமையா ஒரு தூக்கம். வேற என்ன வேணும்?”

அவள் கூறியதில் சரவணனும் கலகலவென சிரித்தான்.

“நீ எல்லாம் சான்சே கிடையாது. நீ ஒரு தனி பீஸ்.”

“ஆமா இந்த அகில உலகத்திலும் என்னை மாதிரி ஒரு ஆள் இல்லைனு பேசிக்கிறாங்க தெரியுமா? அக்காவோட வொர்த் அப்புடி. நீ இப்ப வண்டி எடு.”
தன் நண்பி அடங்கவே மாட்டாள். அன்றும் இன்றும் என நினைத்துக் கொண்டவன் வண்டியைக் கிளப்பினான்.

இப்படி இருப்பவள்
திருமணத்திற்குப் பிறகு எப்படி இருப்பாள் என்ற கவலை அவனுக்குள்ளூம் இருந்தது. அவளுடைய குணத்தைப் புரிந்து கொள்பவன் கிடைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

“என்னடா யோசிக்கற?”

“ஒன்னுமில்லை பக்கி. உன்னைக் கட்டிகிட்டு எவன் பாடுபடப் போறானோ? அதைப் பத்தி யோசிச்சேன்.”

பின்னந்தலையில் அவனை அடித்தவள், “வண்டியை ஓட்டு. அதை நடக்கும் போது பார்த்துக்கலாம்.” என்றாள்.