• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

ராக நந்தனம்-9

Meenakshi Rajendran

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jun 22, 2024
161
54
28
Tiruppur
அத்தியாயம் -9

சமையல் அறையில் நின்று வெங்காயத்தை வெட்டிக் கொண்டிருந்தான் சரவணன்.

'ராகா கிட்ட சொல்லணும். வம்சி பத்தி அவளுக்கு தெரியுமான்னு கேக்கணும். நான் வம்சியை காலேஜ் படிக்கும் போது பார்த்த ஞாபகம் இல்ல. இந்த ரவுடி பார்த்துருக்க வாய்ப்பு இருக்கு. இதுக்குத்தான் ஊரெல்லாம் தெரியுமே.'
கைபேசி எடுத்தவன் ராகவர்ஷினிக்கு ஒரு வாய்ஸ் நோட்டை தட்டி விட்டான்.

ராகவர்ஷினி உறக்கத்திலிருந்து அவன் தெரியாமல் அழைத்து விட்டால் அதற்குப் பிறகு பேயாட்டம் ஆடுவாள். அதனால் வாட்ஸ்அப் வாய்ஸ் நோட்டே வசதி. அவள் எழும்போது பதில் அனுப்புவாள்.

வம்சிக்கு தேவையான பல்துலக்கி முதற்கொண்டு தேவையான அத்தியாவசிய பொருட்கள் எல்லாம் சரவணன் ஆர்டர் போட்டு வாங்கி விட்டதால் வம்சி அதை உபயோகப்படுத்திக் கொண்டான்.
மெதுவாகக் குளித்தும் விட்டான். சரவணன் தனது உடைகளை கொடுத்திருந்தான். அதை அணிந்து கொண்டு தலையை துவட்டியபடி வெளியே வந்தான்.

சரவணன் தினமும் காலையில் ஜிம் சென்று உடலை முறுக்கேற்றி வைத்திருந்தான். ஒல்லி பிச்சான் வம்சிக்கு சரவணன் உடைகள் தொள தொளவென்று இருந்தது.

சரவணன் ட்ராக் பேண்ட் மட்டும் அணிந்து , தோளில் ஒரு துண்டை மட்டும் போட்டபடி சமைத்துக் கொண்டிருந்தான். சமையலறை வழியே சூரிய ஒளி கசிந்து கொண்டிருந்தது. அடுப்பங்கரையில் நின்றாலே வேர்க்கும். ஏற்கனவே சரவணனுக்கு பித்த வகை உடல். உடலில் அதிக வெப்பம் இருக்கும். வேர்த்து கொட்டியது அவனுக்கு. துண்டில் அவ்வப்போது முகத்தை துடைத்தபடி சமைத்துக் கொண்டிருந்தான்.

வம்சிகோ சரவணனைப் பார்த்து கண்களை திருப்ப முடியவில்லை. அவன் மனதில் சிறுசலனம் உருவாகி இருந்தது. கூடவே ஈர்ப்பும் சேர்ந்து கொண்டது.

'அவர பாத்து அப்படி நினைக்காத. அவரு ஸ்ட்ரெயிட். ஏதோ உன்ன பாவம் பார்த்து காப்பாத்தி இருக்காரு. இது வெறும் அட்ராக்சன் தான்.' வம்சி தறி கெட்டுப் பயணம் தன் மனதை கட்டுப்படுத்திக் கொண்டான்.

'பொண்ணுங்க பசங்க எல்லாமே இவரை பார்த்து கிரேஸ் ஆவாங்க. ஆனா அவர் ராகவர்ஷினி சீனியர் கூட மட்டும் தான் இருப்பாரு.' அப்படியே சரவணனை பார்த்து நின்று கொண்டிருந்தான் வம்சி.

"வம்சி வந்துட்டியா? உட்காரு காஃபி தரேன்."

சரவணன் குரலில்‌ சிந்தனை கலைய மெதுவாக அவனை நோக்கி நடந்தான் வம்சி. சமையலறை மேடையின் அருகில் வந்து நின்று கொண்டான்.

"நான் ஏதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?"

"நீ ரெஸ்ட் மட்டும் எடு."

அங்கும் இங்கும் எதையோ கண்களால் தேடிய சரவணன், சட்டென்று வம்சியின் அருகில் வந்து அவனுக்கு நேர் எதிரே மேலிருக்கும் அலமாரியைத் திறந்தான்.
வம்சிக்கு இதயம் பட படவென அடித்துக் கொண்டது.

சரவணன் தாடை லேசாக வம்சியின் முன்னுச்சி முடியின் மீது ஒரு உரசியது. அலமாரியில் இருந்து தேனீர் அருந்தும் பீங்கான் கப்பை எடுத்த சரவணன் காஃபியை ஊற்றிக் கொடுத்தான்.

"இந்த குடி."
வம்சி அதை தயக்கத்துடன் வாங்கிக் கொள்ள, சரவணன் அவன் பாட்டுக்கு சமையலில் மும்முரமாக ஈடுபட ஆரம்பித்தான்.

வம்சி காபியுடன் சேர்த்து சரவணனின் ஒவ்வொரு செய்கையையும் ரசித்து பார்த்துப் பருகிக் கொண்டிருந்தான். சரவணனை தூரத்தில் இருந்து மட்டும்தான் பார்த்திருந்தான் இதுவரைக்கும் . பக்கத்தில் அவன் கூட இன்னமும் அழகாக தெரிந்தது. ராகவர்சினியையும் அவனுக்கு பிடிக்கும். சீனியர் என்றாலும் எந்த பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் பேசுவார்கள் அவர்கள் இருவரும்.
அப்போது சரவணனின் கைப்பேசி வாய்ஸ் நோட் வர பீப் என்ற சத்தம் எழுப்பியது. சரவணன் அதை அப்படியே ‌ கேட்க ஆரம்பித்தான் .

'சரோ குட் மார்னிங் டா. உனக்கு நைட் இங்க என்ன நடந்தது தெரியுமா? பாத்ரூம் ஷவர் பைப் பிளாஸ்ட். அவுட் ஹவுஸ் ஃபுல்லா தண்ணி. பயங்கரமா நனைஞ்சிட்டேன். நானும் அந்த பைப் அடைக்க ரொம்ப போராடி பார்த்தேன். என்னால முடியல. இந்த கோட்டு போட்ட குரங்கு வந்து என்னை இழுத்துட்டு போயிடுச்சு. அந்த ஊட்டி குளிர்ல பசிய மறந்துட்டு போய் தூங்கிட்டேன் . மிட் நைட்ல செம பசி. சாப்பாடு இல்லைனா எனக்கு தூக்கம் வராது. இது வேலைக்கு ஆகாதடா குமாருனு நானே கிச்சனுக்கு போயிட்டேன். அங்க நான் உருட்ட , சாரே வந்து சமைச்சு கொடுத்தார். செம ஆம்லெட். என்ன கைப்பக்குவங்கற! அட அட. இப்படின்னு தெரிஞ்சிருந்தா நான் சண்டையே போட்டு இருக்க மாட்டேன். தேங்க்ஸ் சொன்னேன். அதுக்கு எம்ப்ளாய்ஸ்க்கு எல்லாம் அப்படித்தான் பண்ணுவாங்கலாம். இந்த குரங்கு திருந்தாது அப்படி நினைச்சுட்டேன்."
ராகவர்ஷினி குரலைக் கேட்டு வம்சியும் அடக்க முடியாமல் சிரித்து விட்டான். சரவணனுக்கும் சிரிப்புதான்.

"இதுல ஹைலைட் என்னன்னா வம்சி? ஒரு வானரமே இன்னொரு ஆள பாத்து வானரம்னு சொல்றதுதான். அதுல என் பிரண்டுக்கு ரெட்டவால்."

"ராகா சீனியர் இன்னும் மாறவே இல்லை . அவங்கள மாதிரி ஒருத்தங்கள பார்க்கவே முடியாது. நான் அப்பவே அவங்களுக்கு ஃபேன்."

"வானரப் படையா நீ?"

"சீனியர் அவங்களை நிறைய பேருக்குப் பிடிக்கும்."

பேசிவிட்டு அவளுக்கு பதில் அனுப்ப கைப்பேசியை தன் உதடுகளுக்கு அருகில் வைத்து, விரலால் மைக்ரோபோனை அழுத்திப் பிடித்தான்.

"ஓகே ராக்ஸ். டேக் கேர். ஈவினிங் கால் பண்ணு."என பதிலை அனுப்பி விட்டு கைப்பேசியை ஓரம் வைத்தான்.

" ஏன் சீனியர் கால் பண்ணிப் பேசுங்க?"

"அவ பிசி. இல்லைனா கால் பண்ணி என் காதில் இரத்தம் வர பேசி இருப்பாள்."

" எனக்கென்னவோ அவங்கள விட நீங்கதான் கலாய்க்கிற மாதிரி இருக்கு."
வாய்விட்டு சிரித்தான் சரவணன்.

"என்னோட பிரண்டு எப்படியோ அப்படித்தானே நானும்."

சமைத்துவிட்டு ஒன்றாக அமர்ந்து இருவரும் சாப்பிட்டனர். அதன் பிறகு சரவணன் வேலைக்கு சென்று விட்டான்.
***

மருத்துவரிடம் பேசி முடித்துவிட்டு அமைதியாக மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வெளியே வந்தாள் ராகவர்ஷினி. அப்போது அவள் மீது யாரோ மோதினார்கள்.

"சாரி .. நீயா?"
தன் மருத்துவ அறிக்கைகளை எடுத்துக் கொண்டு நிமிர்ந்தவள் எதிரில் நின்றவனை பார்த்ததும் முகத்தை சுளித்தாள்.

"என்ன ராகவர்ஷினி உடம்புக்கு என்ன? ஏதாவது சீக்கா? இல்ல உன்ன அந்த சரவணன்.." வயிற்றுத் தொட்டு அரைவட்டம் போல் கையால் சைகை செய்தவன், "ஆக்கிட்டானா?" என்றான்.
அவன் முகத்தில் அவ்வளவு வண்ணம் கொட்டி கிடந்தது.

ராகவர்ஷினிக்கு அவனிடம் பேச விருப்பமில்லை. அதற்குள் ரகு அங்கு வந்து சேர்ந்திருந்தான்.

"ராகவர்ஷினி என்ன இங்க நிக்கிறீங்க?"

"ஓ இதுதான் உன்னோட புது பார்ட்டியா? அதான் ஒருத்தருக்கும் தெரியாம இங்க வந்து இருக்கியா? காலேஜ் படிக்கும்போது பெரிய உத்தமி மாதிரி பேசுவ?"

"இங்க பாரு. உன்னை மாதிரி வன்மம் புடிச்ச முட்டாள் கிட்ட எல்லாம் பேசுவதற்கு எனக்கு டைம் இல்ல. வழியை விட்டு இடியட்."

"நீ அபார்ட் பண்ண வந்ததை நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்."

ராதா சரியாக மகப்பேறு மருத்துவர் அரைக்க அருகில் நின்று கொண்டிருந்தாள் அப்போது. ரகுநந்தனுக்கு இப்போது முழு விஷயம் புரிந்து விட்டது. எதிரில் இருந்தவனின் சட்டையை பிடித்து விட்டான்.

"மைன்ட் யுவர் வோர்ட்ஸ். யாரைப் பார்த்து என்ன பேசுற?"

"பார்ரா.. இவளை மாதிரி ஒருத்தி கூட எல்லாம் எப்படி?"

"இடியட் பப்ளிக்ல ஒரு பொண்ண பத்தி என்ன பேசிட்டு இருக்க?"

ரகுநந்தன் தலையிட்டு இருக்க மாட்டான். அந்தப் பெண்ணுடன் தன்னையும் இணைத்து வைத்து பேசுவதும், அத்தோடு உடல் நலமில்லாமல் இருப்பவளிடம் இப்படி பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை.
அடிக்க கையை ஓங்கி விட்டான்.

"ரகு ஸ்டாப்." அவன் இரு கைகளையும் பிடித்து தடுத்து நிறுத்தினாள் ராகவர்ஷினி.

"ரகு இவனெல்லாம் ரீசைக்கிள் பண்ண முடியாது குப்பை. அவனைத் தொட்டு உன்னை நீ அசிங்கப்படுத்திக்க வேண்டாம். உனக்கு என்னைப் பத்தி தெரியும் இல்லை. நானே இவனை எல்லாம் ஒரு மனுஷனா கூட மதிக்காம தான் பேசாம இருக்கேன். என்னை கூட்டிட்டு போ ரகு. நான் ரெஸ்ட் எடுக்கணும். "

ராகவர்ஷினி முகத்தை ஏறிட்ட ரகு அவன் சட்டையை விடுவித்து தள்ளி விட்டான்.

பின்பு ராகவர்சினியின் கையை இழுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தான். பார்க்கிங் வந்தும் ரகநந்தனின் கோபம் மட்டுப்படவில்லை.
கோபத்துடன் காரில் உள்ள நீரை எடுத்துப் பருகினான்.

ராகா அமைதியாக அவனை பார்த்தாள்.

"யார் அவன்?"

"அதான் சொன்னேனே அது ஒரு குப்பை."

"இதான் சும்மா ஒரு வார்த்தை சொன்னாவே அப்படி சண்டை போடுவ. அவன் எப்படி சும்மா விட்ட?"

"வெரி சிம்பிள் ரகு. அதெல்லாம் சண்டை போட்டாலும் திருந்தாத ஜென்மம். நம்ம எனர்ஜி டைம் தான் வேஸ்ட்."

"இருந்தாலும் அவனை சும்மா விடக் கூடாது."

"சார் மட்டும் என்னமோ ரொம்ப என்னலப் பார்த்தப்ப நல்ல விதமா பேசுன மாதிரி? அந்த பார்ட்டில கூட .."

"சி.. அப்ப நா ரொம்ப கோவமா இருந்தேன். இவன் என்னையும் சேர்த்து வைத்து அசிங்கமா பேசுறான்."

"விடு ரகு. காலேஜ்ல என் பின்னாடி சுத்தி ப்ரபோஸ் பண்ணா. நோ சொன்னதும் கைய புடிச்சு இழுத்தான். நான் கன்னத்துல நாலு அறை விட்டேன். அதிலிருந்து வன்மத்தோடு திரிஞ்சிட்டு இருக்கான். வா போலாம். தேங்க்ஸ் என கூட்டிட்டு வந்ததுக்கு."

எப்போதும் படபடவென்று பேசும் ராகா அன்று வழக்கத்திற்கு மாறாக மிகவும் அமைதியாக பேசினாள். ரகு அவள் உடல் நலக் குறைவால் அப்படி இருக்கிறாள் என நினைத்துக் கொண்டான்.

அவர்களுக்கு என்ன சண்டை இருந்தாலும், தற்போது அவனுக்காக அவள் வேலை செய்கிறாள். அத்தோடு அவனை நம்பி அந்த ஆடிட்டர் இவளை அனுப்பி இருக்கிறார். அவர் பேசும்போதே ராகவர்சினி அவருக்கு மிகவும் முக்கியம் என தெரிந்தது.

"நான் உன்னை கோயம்புத்தூர் அனுப்பி விடட்டா? இந்த வொர்க் வேற ஆளை வச்சு பாத்துக்கலாம்."

"ஜஸ்ட் நத்திங். ஆபீஸ் போயிட்டு அங்க இருக்கிற சில பைல்ஸ் மட்டும் எடுத்துட்டு வீட்டுக்கு போலாம். எனக்கு ஒரு கேப் கிடைச்சாலும் ஓகே."

"நானே டிராப் பண்றேன்."

"தேங்க்ஸ்."

"டாக்டர் என்ன சொன்னாங்க?"

"நான் ரொம்ப வீக்கா இருக்கேன்னு சொன்னாரு. அனிமியா. வேற ஒன்னும் இல்ல. "

காரின் பின் பக்கத்தை திறந்து அமர்ந்து கொண்டு விழிகளை மூடிக்கொண்டாள். ரகுவுக்கும் அவளிடம் மீண்டும் எதுவும் பேசத் தோன்றவில்லை. மீண்டும் அவன் அலைபேசி ஒலிக்க ப்ளூடூத்தில் பேசியபடி காரை ஓட்ட ஆரம்பித்தான்.
பின் சீட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்த வர்சினியின் மனதில் ஒரு கேள்வி ஓடிக்கொண்டிருந்தது.

"அடுத்து என்ன செய்யலாம்?"

***

ராஜசுந்தரம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார்.

"ரொம்ப சந்தோஷங்க. கண்டிப்பா முடிச்சிடலாம். ராகாவும் நான் சொன்னா மறுக்க மாட்டாள். என் ஒத்த பொண்ணு நிம்மதியா வாழ்ந்தால் போதும் . அதுவும் தெரிஞ்ச இடம் தான் எனக்கு பிரச்சனையே இல்லை. நான் சொல்றத ராகா கேட்டுப்பா."

மகளுக்கு சொந்தத்திலேயே வரன் பேசி முடித்து இருந்தார் ராஜசுந்தரம். தன்மகள் நிம்மதியாக வாழ்வாள் என்ற நம்பிக்கை அவருக்கு மலையளவு இருந்தது. அவள் இங்கு வரும்போது அந்த மகிழ்ச்சியான செய்தியை கூறிக் கொள்ளலாம் என எண்ணிக்கொண்டார். அவர் எண்ணம் ஈடேறுமா?



.