• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

💘காதல்💘15

நித்திலம்NMR

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
231
20
28
Netherlands
காலையில் முதலில் கண்விழித்தது ஆழி தான். அருகில் உறங்கிக் கொண்டிருப்பவனின் தூக்கம் கலையாத படி அவன் கை அரணிலிருந்து நழுவி நகர்ந்து வந்தவளை தூக்கக் கலக்கத்தில் மீண்டும் தன்னோடு சேர்த்து அணைத்து படுக்க வைத்திருந்தான் அவள் அன்பிற்குரியவன்.

இதழ் முனுமுனுத்து தன் அன்பனை திட்டித் தீர்த்தவள், ஒருமுறை அம்புதியைத் திரும்பிப் பார்த்தாள். முன்னிரவில் போலவே இப்போதும் சீரான சுவாசம் அவனிடம். உறங்கிக் கொண்டு தான் இருக்கிறானா என்று அறிந்து கொள்ள, மெல்லமாக அவன் மீசை முடியைப் பிடித்து இழுத்தாள்.... இல்லை இல்லை பிடிங்கி எடுத்தாள்.

"ஸ்ஸ்ஸ்" என்ற சத்தத்தோடு மெல்லிய இதழ் சுளிப்பிற்கு பின்னால் மீண்டும் அதே சீரான சுவாசம். அதிலிருந்தே அவன் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறான் என்பதை அறிந்து கொண்டவள், "காஞ்ச மிளகா" என்று சிரித்துக் கொண்டே பழித்துவிட்டு, கீழ் நோக்கி வளைந்திருந்த அவன் மீசையை சற்றே மேல் நோக்கி முறுக்கி விட்டு ரசித்தாள்.

திடீரேன உணர்வு வந்தவளாய் அவன் கையை மெதுவாக நகர்த்தி, ஒருவழியாக அவனிடமிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டு, எழுந்து குளியலறை சென்று தன் காலைப் பணியை கவனிக்கத் தொடங்கினாள்.

இங்கே அம்புதியோ ஆழி எழும்போதே விழித்துக் கொண்டான்‌. ஆனாலும் ஒரு கிடுக்கு பிடி பிடித்து தன்னோடு அணைத்து அவளைத் திணறவிட்டு மகிழ்ந்தவன், அவள் தன்னிடம் செய்யும் சேட்டைகளை மெய்த்தீண்டல் மூலம் உணர்ந்து, அதனை ரசித்தபடி கண்மூடி தூங்குவது போல் நடித்து பாசாங்கு செய்து கொண்டிருந்தான்...

முகம் கழுவி முடித்து ஆடிப்பாவையில் தன் முகம் கண்ட ஆழியோ அதில் தெரிந்த தனது பிம்பமே தன்னை கேலி செய்து எள்ளி நகையாடுவது போல் தோன்றிட, இதயத்தில் புதுவிதமான இதம் பரவ, தயக்கம் கொண்டு தன் முகம் காண நாணி கையிலிருந்த துவாலைத் துணியை வயங்கல் மீது வீசிவிட்டு குளியலறை விட்டு வெளியே வந்தாள்.

குளியலறைக் கதவு திறக்கும் சத்தம் கேட்டவுடன் அம்புதியோ, "ஆழிஈஈஈ" என்று வாய்விட்டு புலம்பியபடி தலையணையுடன் கட்டி உருண்டு கொண்டிருந்தான். அதனைக் கண்டவளது விழிகள் கோலிக்குண்டைப் போல் உருண்டு, இதழ்கள் தானாக "ஏதே!" என்று சற்றே சத்தமாக அதிர்ந்திருந்தது.

தன்னவளை வம்பு செய்ய நினைத்த அவளது அகவாளனோ அப்போது தான் விழித்துப் பார்ப்பது போல் கண்களை அதிரடியாகத் திறந்து இடப்பக்கம் வலப்பக்கம் என திரும்பிப் பார்த்து குளியலறை வாசலில் நிற்கும் தன்னவளைக் கண்டு, நிதானமாக தலையணையை மேலும் கொஞ்சம் இறுக்கி கட்டிக் கொண்டு "குட் மார்னிங் டி கருவாடு" என்று கூறி ஒற்றைக் கண் சிமிட்டினான்.

அவனது கருவாடு என்ற அழைப்பிற்கு கோபமும், தன்னைக் கண்டு கண்ணடித்ததற்கு சிறு நாணமும், அவன் தூங்குவதாக நினைத்து தான் செய்த சேட்டைகளை கண்டு கொண்டானோ என்ற பயமும் என ஆழியின் உணர்வுகள் நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்க அது அவளது முகத்திலும் பிரதிபலித்தது.

அதனைக் கண்டு அவளது அகவாளன் கள்ளச் சிரிப்பு சிரிக்க, அதில் பெண்ணவள் வதனம் நாணத்தில் சூடேற, அதனை தன் அகவாளனிடம் இருந்து மறைக்க நினைத்து கோபம் கொண்டது போல் முகத்தை உர்ரென வைத்துக் கொண்டு அவனை முறைத்துவிட்டு அறைக்கதவு நோக்கிச் சென்றாள்.

அவசரமாக அவளைத் தடுத்து நிறுத்த நினைத்து, "ஏய் பொண்டாட்டி!" என்று போதையேறிய குரலில் அழைத்தான் அம்புதி.

திரும்பி நின்று முறைத்தவளிடம், "இப்படியேவா வெளியே போகப் போறே!" என்றான்.

"ஏன்? போனா என்ன இப்போ!" என்று பதில் கேள்வி எழுப்பினாள் ஆழி.

"என் மாமன் பெத்த மரிக்கொழுந்தே! குளிச்சிட்டு போடி" என்று அவளை சொக்கும் பார்வை பார்த்தபடி கூறினான்...

ஆடை விலகாத போதும் கூட, ஆடவனின் பார்வைக்கு, ஆழியின் கைகள் அனிச்சையாக உடையை சரி செய்ய மனமோ 'இன்னைக்கு என்ன பார்வையும், பேச்சும் எல்லை மீறி போகுதே! என்னவாம்!!! நீ சொல்றதெல்லாம் கேட்க முடியாது போடானு சொல்லிடலாமா!' என்று பொய் கோபமாய் திட்டிய படி அவன் கேள்விக்கு பதில் யோசிக்க, அதனைப் படித்த அவளது பத்தனோ,

"காலங்கார்த்தால என் மாமியாரை டென்ஷன் பண்ணி திட்டுவாங்கிட்டுத் திறியாதே! சொல்றது சொல்லிட்டேன்... இனி உன் விருப்பம்" என்று தோள் குலுக்கி திரும்பிப் படுத்துக் கொண்டான்.

ஆழிக்கும் அப்போது தான் தனது மரமண்டையில் உரைத்தது போல் தலையைத் தட்டிக் கொண்டு, 'அம்மாவை எப்படி மறந்தேன்' என்று தன்னைத் தானே திட்டிக் கொண்டாள். அன்னையின் திட்டிலிருந்து தப்பிக்க தன் அபுவின் பேச்சைக் கேட்பது தான் உசிதம் என்றே தோன்ற, உடைகளை எடுத்துக் கொண்டு மீண்டும் குளியலறைக்குள் சென்றாள்.

குளித்து முடித்து உடை மாற்றி வந்தவள், நிலை கண்ணாடி முன் நின்று சிறிய ஒப்பனைகளை செய்து கொண்டிருக்க, அன்று போல் இன்றும் அம்புதி அவள் பின்னால் வந்து நின்றான் சிரித்த முகமாக. அவனைக் கண்டவுடன், நெற்றிப் பொட்டு மட்டும் வைத்துக் கொண்டு நகரப் பார்த்தவளை, பின்னால் இருந்தபடியே தன் சீமாட்டியின் புஜங்களை பிடித்து நிறுத்தி, வயங்குமணியைப் பார்த்தபடியே குங்குமம் எடுத்து அவளது உச்சி வகிட்டில் வைத்துவிட்டான் ஆழியின் அபு.

ஆடவனின் விரல் பட்டவுடன் உடல் சிலிர்த்து பரவசம் அடைந்தாள் அவனது சரிபாதியானவள். கண்கள் மூடிய நிலையிலேயே பின்னால் சரிந்து அவன் நெஞ்சில் சாய்ந்து நிற்பதைக் கூட அறிந்திடாமல் நின்றிருந்தவளிடம், செவி மடலில் மீசை உரசும்படி குனிந்து நின்று புன்னகை முகத்துடன் "தேங்க்ஸ் டீ பொண்டாட்டி" என்றான்.

"எதுக்கு?" என்றாள் மெய் மறந்த பரவச நிலையிலேயே.

கடந்து சென்ற இரவை நினைத்து மெல்லிய புன்னகையை சிந்திவிட்டு, "எல்லாத்துக்கும்.... முக்கியமா நேத்து நைட் என்னை சகிச்சுகிட்டதுக்கு... அன்ட் சாரி... என்னை சகிச்சுக்க வேண்டிய கட்டாயத்தையும், கஷ்டத்தையும் உனக்கு கொடுத்துட்டேன்" என்று குறும்பு நகையுடன் உரைக்க, அவள் சட்டென அவனிடம் இருந்து பிரிந்து அவனைவிட்டு நகர, அதனை அவன் தடுத்து நிறுத்த என இருவருக்கும் இடையே ஏற்பட்ட மெய் தீண்டலில் அவள் நெற்றியில் வைத்தக் குங்குமம் அவனது சட்டைக்கு இடம் மாறிப் போனது.

அதனை இருவரும் கவனிக்காமல் போனதில் தான் ஆழியின் ஏடாகூடமே ஆரம்பம் ஆனது. கோபத்தைத் தாண்டிய குழப்பங்கள் அவளது முகத்திலும், அகத்திலும் கூடத் தெரிய அதனை அவளும் அறிந்திடாமல், தானும் உணர்த்திடாமல் ரசித்து நின்றான் அம்புதி. ஆழியோ குழப்பத்திலும் கோபம் குறையாது முறைத்தபடியே வாசல் நோக்கி சென்றாள்.

கதவைத் திறந்தபின் ஒருமுறை அம்புதியை திரும்பிப் பார்க்க, அவனோ அவளைப் பார்த்து புன்னகைத்தபடி தனது டீ-சர்ட்டின் மேல் பட்டனை கையில் திருகிக் கொண்டிருக்க, ஆழியோ 'அட பைத்தியமே!' என்று நினைத்தபடி தன் முன்னந்தலையில் அடித்துக் கொண்டு 'ஒரு ஜென் இப்படி வெட்கப்பட்டு இப்போ தான் பார்க்குறேன்!' என்று முனுமுனுத்தபடி வெளியேறிச் சென்றாள்.

அறையைவிட்டு வெளியேறி வந்தவள் நேரே அடுக்களை நுழைய எங்கே தனது அன்னை ஜாடைமாடையாக ஏதேனும் கேட்டுவிடுவாரோ என்ற அச்சத்தில் அவரை நேருக்கு நேர் காண்பதை தவிர்த்தாள் ஆழி. ஆனால் அதுவே வெங்கடேஸ்வரிக்கு காட்டிக் கொடுத்துவிட, ஆழியை அருகே அழைத்து நெட்டி முறித்து முத்தமிட்டார்.

வெட்கத்தில் ஆழியின் முகம் செங்காந்தளாய் சிவக்க, அதனை அருகிலிருந்து கண்டு கொண்டிருந்த ஈஸ்வரியின் முகம் ரௌத்திரத்தில் ரத்தமென சிவந்திருந்தது.

ஞானபாண்டியன் வெங்கடாவை அழைத்திடவே, தான் கேட்க நினைத்ததைக் கூட கேட்காமல், "இரு வர்றேன்" என்று கூறி அங்கிருந்து சென்றுவிட்டார் வெங்கடேஸ்வரி....

அடுத்த நொடியே "மாமா எனக்கு தான்னு சொல்லி சொல்லி என்னை ஏமாத்திட்டேல ஆழி! என்னை பலி வாங்கிட்டேல!!" என்று கோபமுமாக வினவினாள் ஈஸ்வரி.

"நான் என்னடா ஏமாத்தினேன்! உன்னை எதுக்கு நான் பலிவாங்கனும்! என்னாச்சு உனக்கு! அக்கா உன்னை ஏமாத்துவேணா சொல்லு!" என்று பிற்பிறந்தாளை நெருங்கி கன்னம் தொட்டு கொஞ்சியபடி ஐஸ் வைத்தாள் மூத்தவள்.

"என்னை தொடாதே டி... இன்னமும் நீ சொல்றதை நம்புறதுக்கு என்னை பார்த்தா முட்டாள் மாதிரி தெரியுதா!" என்று ஆழியின் கையைப் பிடித்து தட்டிவிட,

"நீயா!!! முட்டாளா!!! ஈஷ் என்னடா பேசுறே நீ! நான் போய் உன்னை அப்படியெல்லாம் நெனப்பேனா?" என்று நக்கலாக ஆரம்பித்து ஈஸ்வரி தன்னை காண்பதற்குள் தன் முகபாவனையை அன்பொழுக மாற்றியிருந்தாள் ஆழி.

"சொன்ன வார்த்தையை காப்பாத்துறதுக்காகனாலும் என் அக்காவா மட்டும் தான் ரூமைவிட்டு வெளியே வருவேனு நெனச்சேன். ஆனால் இப்போ தானே தெரியிது! நீ Mrs.அம்புதியா மாறி பல மணி நேரம் ஆச்சுன்னு...

நீ போட்ட வாழ்க்கை பிச்சைல தான் நான் வாழனுமா? அப்படி ஒரு எண்ணம் உன் மனசுல இருந்தா அதை இப்போவே மாத்திக்கோ... உண்மைய சொல்லனும்னா மாமா மனசுல முதல்ல இடம் பிடிச்சது நான் தான். மாமாவோட முதல் காதலியா, மனம் விரும்பியா என்னைக்கும் கடைசி காலம் வரை இருக்கப் போறதும் நான் தான். நீ எப்பவும் இரண்டாவது தான். நான் போட்ட பிச்சைல தான் நீ உன் வாழ்க்கைய ஆரம்பிச்சுட்டு வந்திருக்கே நியாபகம் வெச்சிக்கோ!" என்று பொறிந்து தள்ளினாள்.

ஆழியோ ஏதோ ஒன்றை நினைத்து உள்ளூரச் சிரித்தவள் வெளியே, "இப்போ ப்ஸ்ட் நைட் நடந்திடுச்சுனு தான் இந்த குதி குதிக்கிறேயா! இதெல்லாம் ஒரு விசயமா என்ன! அதெல்லாம் ஒன்னும் இல்லே!" என்று ஈஸ்வரியை சமாதானம் செய்வதற்காக கூறினாள்.

"என்னது!!! ப்ஸ்ட் நைட்லாம் ஒரு விசயமே இல்லேயா? உனக்கு வேணும்னா அப்படி இருக்கலாம்... ஆனா எனக்கு அப்படி இல்லே! அது ஒரு புனிதமான பந்தம். வெறும் ஆசைக்காக மட்டும் இல்லாம உண்மையான அன்போடையும் காதலோடையும் ஆணும் பெண்ணும் ஒன்னா சேரனும்...

காதல் வயப்பட்டவுடனேயே காமம் செய்ய எங்களுக்கு பல தனிமைகள் கிடைச்சது... ஆனாலும் ஒழுக்கத்தோடேயும், சுய கட்டுப்பாட்டோடேயும் பத்து வர்ஷம் நான் காத்திருந்தேன்... ஆனா உன்னால அது முடியலேல!! என்ன தான் மாமா உன்னை அப்ரோச் பண்ணியிருந்தாலும் நீ நெனச்சிருந்தா எதுவும் நடக்காம தடுத்திருக்கலாம். இருந்தும் மாமா எனக்கு கிடைக்கவே கூடாதுன்றதுக்காகத் தானே இப்படி செய்துட்டு வந்திருக்கே!!" என்று ஈஸ்வரி தாம்பத்தியத்தின் விளக்கத்தில் ஆரம்பித்து ஏதேதோ கூறிக் கொண்டிருக்க ஆழியோ,

'நான் என்ன சொல்ல வர்றேன்! இவ என்ன பேசிட்டு இருக்கா!!! ஓ மை காட், மீ பாவம், ப்ளீஸ் ஹெல்ப் மீ!!! நான்ஸ்டாப்'ஆ ஒரு மணி நேரம் பேசிட்டு இருக்காளே! என் அபு இந்த அரை லூசை எப்படி விரும்பினார்!!! அது சரி... அந்த முழு லூசுக்கு இந்த அரை லூசு பரவா இல்லேன்னு தோனியிருக்கும்... அதான் இவ லவ்'வே அக்ஸெப்ட் பண்ணிட்டார் போல....' என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்தாள்.

"என் நெனப்புல அவரும், யாரோ நெனப்புல நீயும் ஒன்னு சேர்ந்தா இப்படித் தான் ப்ஸ்ட் நைட்லாம் ஒன்னுமே இல்லேன்னு தான் தோனும்" என்ற ஈஸ்வரியின் வார்த்தைகளில் நிகழ்விற்கு வந்த ஆழி, அக்னி கண் கொண்டு ஈஸ்வரியை நோக்கிட, ஆழிக்கு ஏற்றார் போல் பேச்சை மாற்றினாள் ஈஸ்வரி.

"ந்நீஈஈ வேணும்னா மாமாவே விரும்பிஈஈஈ அ...அவரையே நெனச்சிருக்கலாம்... ஆனா மாமா என்னை தானே விரும்பினார்... பின்னேஏஏஏ எப்படிடிஇஇஇ உன்னை நெனச்சிர்ர்உஉ?" என்று ஆழியின் கோபக் கொந்தளிப்பில் வார்த்தைகளை முழுங்கி முழுங்கி இறுதியில் பாதியிலேயே நிறுத்தியும் இருந்தாள் ஈஸ்வரி.

இதுநாள் வரை ஆழியின் ரௌத்திரத்தையே கண்டிராத ஈஸ்வரிக்கு அவளது கோபம் உள்ளுக்குள் கிலிபரப்ப, கால்கள் தானாக நடனமிடத் தொடங்கியது. ஆழியின் ஆர்கலிப்பின் முன்னால் நிலை கொண்டு நிற்க முடியாமல் விலகிச் செல்ல நினைத்த ஈஸ்வரியை சொடுக்கிட்டு அழைத்து நிறுத்தி வைத்தாள் ஆழி.

"என்னைப் பத்தியும், மாமாவைப் பத்தியும் எதுவும் தெரியாம வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிட்டு இருந்தே வாய ஒடச்சிடுவேன்... இனி ஒரு வார்த்தை என் அபு பத்தி தப்பா பேசினே இந்த ஆழி யாருன்னு முழுசா பார்க்க வேண்டியிருக்கும். இந்த ஆழி யார் தெரியும்ல! ஞானபாண்டியன் மக... கொன்னு புதைச்சிடுவேன்..." என்று உறுமியவள், கண் பார்வையாலேயே மீண்டும் ஒருமுறை இளையவளை எச்சரித்துவிட்டு, அங்கிருந்து போகச் சொல்லி கண்களாலேயே கட்டளையிட்டாள்.

முற்பிறந்தவளின் புது அவதாரத்தைக் கண்டு பேச்சு மூச்சற்று நின்றிருந்த ஈஸ்வரி, சிலையென மாறிப்போன தன் கால்களை நகர்த்தி ஒரு அடி எடுத்து வைப்பதற்குள், ஆழி நான்கு அடிகள் பக்கவாட்டில் எடுத்து வைத்து அதிவேகத்தில் அதீத பாரத்தின் மேல் "ஆஆஆவ்..." என்ற சத்தத்தோடு மோதி நின்றாள். ஈஸ்வரியும் கூட ஆழியின் கத்தலில் ஒரு நொடி பயந்து பின்னால் நகர சமயலறை சுவற்றில் கதவின் பின்னால் பல்லியைப் போல் ஒட்டிக் கொண்டாள்.

'என்னவாயிற்று இந்த ஆழிக்கு! தன்னை இங்கிருந்து பின்னங்கால் பிடரியில் இடிக்க ஓடும் அளவிற்கு மிரட்டி, விரட்டி நின்றவள் மந்திரம் போட்டதைப் போல் எங்கே மாயமாக மறைந்து போனாள்? எதிலோ மோதியது போல் அல்லவா கத்தினாள்!' என்ற யோசனையோடு வியர்வை வடிய சுவற்றோடு சுவராக ஒன்றிப் போனாள்.

ஆழிக்கு என்ன நேர்ந்தது என்ற அவா தலை தூக்க, கதவு இடுக்கின் வழியே கூர்பார்வை செலுத்தி தமக்கையவளைத் துளாவினாள். அங்கே கண்ட காட்சிகள் ஈஸ்வரியை குத்தாட்டம் போடச் செய்தது.

இவ்வளவு நேரம் தன்னை பார்வையால் எரித்துக் கொண்டிருந்த ஆழி இப்போது அம்புதியின் கனல் பார்வையில் பஸ்பம் ஆகிக் கொண்டிருந்தாள்...

காதல் கரை எட்டுமா!!!