• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

03. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
137
116
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
வசந்தி திருமணமாகி வந்தபோது சத்யாவிற்கு 13 வயதுதான். சித்தார்த்திற்கும் சத்யாவிற்கும் 12 வயது வித்தியாசம். குண்டு கன்னங்களும் பூசினாற்போன்ற உடலுமாக பொம்மை போலிருந்தவளை பார்த்ததும் வசந்திக்கு பிடித்துப் போயிற்று. அன்று முதல் அண்ணி அண்ணி என்று அவளைச் சுற்றி வந்தாள் சத்யா.

கணவனுடன் பெங்களூரில் வாழ்ந்தாலும் விடுமுறைகளிலோ, அல்லது பார்க்க வேண்டும்போல் இருந்தாலோ உடனே கோவைக்கு கிளம்பிவிடுவாள் வசந்தி. அவள் அங்கே சென்றுவிட்டால் வீடே குதூகலமாகிவிடும். சத்யா சாப்பிடுவது தூங்குவது எல்லாம் அண்ணியுடன்தான். சொல்லப் போனால் வசந்திக்கு சத்யா குழந்தையாகத்தான் தெரிந்தாள்.

பெற்றோரை இழந்து தம்பி கண்ணனுடன் தாய் மாமாவின் ஆதரவில் வளர்ந்த வசந்திக்கு தாயாகவும் தந்தையாகவும் அன்பான மாமனார் மாமியார் உடன்பிறப்பாக சத்யா என்று புகுந்த வீட்டில் ஒரு அழகிய குடும்பம் அமைந்தது.

வசந்தியின் திருமணம் நடந்த போது தம்பி கண்ணன் மணிப்பால் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தான். இரண்டு நாள் லீவில் வந்து திருமணத்தில் கலந்து கொண்டுவிட்டு உடனே சென்று விட்டான்.

அதன் பிறகு குலதெய்வம் கோவிலுக்கு புது மணத்தம்பதிகளுக்காக வேண்டிக்கொண்டு குடும்பமாக கிளம்பிய போது செமஸ்டர் லீவில் வந்திருந்த கண்ணனையும் உடன் கூட்டிப்போனார்கள். பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு எல்லாருமாக சாப்பிட்டுவிட்டு இளைப்பாறிக் கொண்டிருக்க, கொண்டு சென்ற பதார்த்தங்கள் காலியாகிவிட்ட பாத்திரங்களை ஆற்றங்கரையில் கழுவிக் கொண்டிருந்த பணிப்பெண் மைனாவுடன் படித்துறையில் அமர்ந்து வளவளத்தபடி ஆற்றில் ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்த்திருந்த சத்யா, திடுமென தவறி தண்ணீரில் விழுந்துவிடவும் பதறிப்போன மைனா கூச்சல் போட்டாள், அப்போது தன் நண்பனுடன் கைபேசியில் பேசியவாறு படித்துறையின் மேல் புறத்தில் இருந்த கைப்பிடிச் சுவரில் அமர்ந்திருந்த கண்ணன், பணிப்பெண்ணின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.

சத்யா தண்ணீரில் தத்தளிப்பதைக் கண்டவன், கையிலிருந்த கைப்பேசியை நழுவவிட்டு ஓடிச் சென்று நீரில் குதித்து அவளைக் காப்பாற்றினான். அதற்குள்ளாக பெரியவர்களை அழைத்து வந்திருந்தாள் மைனா. மறுநாள் சத்யாவிற்கு நல்ல ஜீரம், வசந்திக்கு அவளை அந்த நிலையல் விட்டுப்போக மனமில்லை. கண்ணனுக்கும் லீவு என்பதால் அவனை தன்னுடன் இறுத்திக் கொண்டாள். சித்தார்த்தனுக்கு வேலை இருந்ததால் ஊருக்கு கிளம்பிச் சென்றுவிட்டான்.

அந்தச் சமயத்தில் கண்ணனும் சத்யாவும் நன்றாகப் பேசிப் பழக முடிந்தது. கண்ணனுக்கு குழந்தைத்தனமான அவளை ரொம்பவே பிடித்துப் போயிற்று. சத்யாவிற்கும் அவனை பிடித்திருந்தது. காரணம் அண்ணன் சித்தார்த்தன் தான் அவளுக்கு நல்ல நண்பனாக இருந்து படிப்பு சொல்லிக் கொடுப்பது கூடவே கூட்டிக் கொண்டு திரிவது, என்று இருந்தவன், மேல் படிப்பு, அதைத் தொடர்ந்து வேலை என்று சென்றபிறகு அவனோடு அதிகம் பேச, பழக முடியாது போயிற்று. அவளுக்கு அது ஒரு ஏக்கமாக இருந்தது. அதனால் அவனைப் போலவே அவள் சொல்வதை காது கொடுத்து கேட்டு, ஆலோசனை சொல்லி அவளது குட்டி கைவினைப் பொருட்களை, வரைந்த ஓவியங்களை பாராட்டிய கண்ணனை ரொம்பவே பிடித்துப் போயிற்று .

வசந்தி தன் தம்பியை பற்றி பேசுவதை முதலில் இயல்பாக ஏற்றுக் கொண்ட மாமியார் ராகினி, காலப் போக்கில் மருமகளின் எண்ணத்தை புரிந்து கொண்டு, "அப்படி எல்லாம் சின்னஞ்சிறுசுகள் மனதில் ஆசைகளை விதைக்கக் கூடாதுமா, அவர்களுக்கான உரிய வயதில் அவர்கள் மன நிலை மாறிப் போனால் எல்லாருக்கும் மன வேதனை தான் மிஞ்சும்" என்று கூறிவிட்டார். அது சரி என்று தோன்றினாலும் வசந்தியின் மனதின் ஓரத்தில் அந்த எண்ணம் இருக்கத்தான் செய்தது.

சத்யாவிற்க்கு வெகு நாட்கள் கண்ணன், அண்ணி மூவருமாய் கலகலத்தது, வெளியே போய் வந்தது, என்று மனதில் உற்சாகமாய் இருந்தது. ஆனால் அதன்பிறகு அவள் அவனை பார்க்கவே இல்லை. விடுமுறைகளில் அவள் மனம் அவனது வருகையை மிகவும் எதிர்பாத்தது. அம்மாவிடம் கேட்டால், பெரிய படிப்பு படிக்கிறவன், அவன் இருப்பதும் தொலைவில் நினைத்த நேரத்தில் வர முடியாது என்றுவிட்ட பிறகு, அவள் அது பற்றி கேட்கவில்லை. மனதில் அவ்வப்போது அவன் நினைவு வந்து போய்க் கொண்டுதான் இருந்தது. அன்றைக்கு அவளை விட பெரியவனான கண்ணன் தன்னை அவளது நண்பன் என்றும் பெயர் சொல்லிக் கூப்பிடுமாறும் கேட்டிருந்தான். நண்பன் என்றால் ஏன் அவளை காண அதன்பின் வரவேயில்லை? பெரிய படிப்பு படிக்கிறான் சரிதான், ஆனால் அண்ணி மட்டும் அத்தனை தூரத்தில் இருந்து வந்து போய்தான் இருக்கிறாள், அவளும்கூட முதலில் எல்லாம் கண்ணனைப் பற்றி ஏதேதோ சொன்னவள், அப்புறமாய் வந்த சமயங்களில் அவனைப் பற்றி பேசக்கூட இல்லை. அண்ணியால் வரமுடிகிற போது அவனால் ஏன் முடியவில்லை என்று அப்போது இரண்டும் கெட்டானாக இருந்த சத்யா நினைத்தாள். அதன்பிறகு. ...

☆☆☆

சத்யா ஒருவாறு கண்ணனைப் பற்றிய நினைவுகளை ஒதுக்கி படிப்பில் முழு கவனம் செலுத்தினாள். அதன் காரணமாக பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதல் மாணவியாக வந்தாள். அவள் விரும்பிய பாடத்தை தேர்வு செய்து சேர்ந்தாள்.

திருமணம் ஆகி மூன்று வருடங்களுக்கு பிறகு வசந்திக்கு குழந்தை உண்டான போது எல்லாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சிதான். சத்யாவின் ,ப்ளஸ் டூ தேர்வின் போது தான் வசந்திக்கு குழந்தை பிறந்தது. அதனால் சத்யாவால் உடனே அண்ணன் மகனைப் போய் பார்க்க முடியவில்லை. ஆனால் தேர்வுகள் முடிந்தபோது சத்யாவிற்கு மஞ்சள்காமாலை வந்துவிட்டது. அவள் அதிலிருந்து தேறி வர மேலும் சில வாரங்கள் ஆகிற்று. அவள் பழையபடி நட மாடத் தொடங்கிய பிறகே குழந்தையை காண கிளம்ப முடிந்தது.

வசந்திக்கு தன் தம்பியும் நாத்தனாரும் வாழ்வில் ஒன்று சேர வேண்டும் என்று ரொம்பவும் ஆசை. அதிலும் இருவரையும் அறிந்தவள் என்பதால் அவர்கள் பொருத்தமாக வாழ்வார்கள் என்று நம்பினாள், கூடவே நாத்தனாரை வெளியிடத்தில் கட்டிக் கொடுத்து கஷ்டப் படாமல் தன்னருகிலே வைத்து பார்த்துக் கொள்ள விரும்பினாள். தம்பியின் மீது வைத்த அதே பாசத்தை அவள் தன் நாத்தனாரின் மீதும் வைத்திருந்தாள்.

அதனால்....

அருணவ்வை காண சத்யாவை அழைத்து வந்த சமயத்தில் மாமனார், மாமியாரிடம் தன் தம்பிக்காக, பெண் கேட்டாள் வசந்தி. மகளுக்கு திருமண வயதாகும் போது ஒருவருக்கு ஒருவர் பிடித்துப் போனால் தங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று பெரியவர்கள் இருவருமே சொன்னதும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள் வசந்தி.

ஆனால் ....

அந்த சந்தோஷம் அதிக நாள் நிலைக்கவில்லை. அன்றைக்கு பேரனை மகளுக்கு காட்டவென்று கூட்டி வந்து இரண்டு நாள் தங்கியிருந்து பேரனை ஆசைதீர கொஞ்சிவிட்டு, பிரிய மனமே இல்லாமல் கிளம்பிச் சென்றவர்களை உயிரற்ற உடலாகத்தான் பார்க்க நேர்ந்தது.

பெங்களூருக்கு அருகில் விபத்து நேர்ந்ததால் இறுதிச் சடங்கும் பெங்களூரிலேயே நடந்தது. அப்போது முதல் சத்யபாரதி அண்ணன் வீட்டில் தான் இருக்கிறாள்.

பெரியவர்களின் எதிர்பாரத மறைவு வசந்தியை நிலைகுலைய வைத்தது. படித்திருந்த போதும் வசந்திக்கு சில மூடநம்பிக்கைகளும் இருந்தது. திருமணம் பேசியபின் பெரியவர்கள் மறைந்தது அவளுக்கு மனதில் சஞ்சலமாக இருந்தது. அப்படி எல்லாம் நினைக்க கூடாது என்று தனக்குள் வலியுறுத்திக் கொண்ட போதும் அவளுக்கு மனம் சமாதானம் ஆகவில்லை.

தெரிந்தவர்களிடம் அது குறித்து ஆலோசனை செய்தாள். பலர் பலவாறு கருத்து சொல்ல, ஒரு முடிவிற்கு வர இயலாமல் குழம்பினாள். கூடவே... சத்யாவை கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்பது வசந்திக்கு கருத்தில் பட்டது... அதனால். ..
 

Attachments

  • IMG-20240724-WA0012.jpg
    IMG-20240724-WA0012.jpg
    49 KB · Views: 8

Kameswari

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jan 31, 2022
118
52
28
Tirupur
நல்ல இடத்துல வந்து க்கன்னா வெச்சீங்க... இன்னும் நாளைக்கு வரைக்கும் மண்டைக்குள்ள பிராண்டுமே... 🙄 சத்யாக்கு ஜோடி கண்ணனா?? 🧐
அவன் ஏன் அவளை நடுவுல வந்து பாக்கவே இல்ல?? வேறெதுவும் ட்ராக் அவனுக்கு ஓடுதா??
 
  • Love
Reactions: Aieshak

Sampavi

Vaigai - Avid Readers (Novel Explorer)
Mar 21, 2022
251
158
43
Theni
ஆஹான் சஸ்பென்ஸ்
 
  • Love
Reactions: Aieshak