- Joined
- Aug 11, 2021
- Messages
- 24
இணைவாய் எனதாவியிலே!
இளம் மஞ்சளும் சிவப்புமாய் கிழக்கில் மெதுமெதுவாக துளிர்விட்டிருந்த வெய்யோனின் செஞ்சாந்து கதிர்களுக்கு சற்றும் குறையாத இளமஞ்சளை குழைத்து பூசிய முகமும் புன்னகையை ஏந்திய வனப்பும் அருகம்புல்லின் மேல் வீற்றிருக்கும் ஒற்றை குடையாய் ஆங்காங்கே வியர்வை வழிய அதை தொட்டு தழுவி செல்லும் பனிக்காற்று வீசிய வாசமும் சேர்ந்திழுக்க சமையலறையில் தன்னுடைய வழக்கமான வேலைகளில் ஈடுபட்டிருந்தவரின் வளைக்கரங்கள் இரண்டும் இணைந்து சத்தமெழுப்பி அவருடைய செவிகளை நிறைக்க தன் வயதினை எல்லாம் மறந்து ஓடோடி வந்து நாள்தோறும் அவர் ரசித்து பருகியும் குறையாத முத்தாய்ப்புகளுடன் வளமாக பூத்து நிற்கும் தன் அழகிய பெண்மையை தள்ளி நின்று ரசித்துக் கொண்டிருந்தார் செந்தூர பாண்டியன்.
சின்னதொரு சத்தம் கூட போடாது சமையலறையின் வாசலில் நிற்க முடியாமல் நரை விழுந்த தும்பை பூவின் தடத்திலும் முத்தாப்பாய் வளர்ந்து நின்ற அவரின் மீசையிலும் அத்தனை அத்தனையாய் மீண்டிருந்த வாலிப இளமையுடன் தன் தலை முடிகளை சிலுப்பி விட்டு மீசையை நீவி விட்டவரின் கைகள் தன் ஆசை மனைவியை அள்ளி அணைத்துக் கொள்ள துடித்துக் கொண்டிருக்கையில் அவரின் குறுகுறு பார்வையை உணர்ந்து சட்டென்று திரும்பியவரின் முகம் செஞ்சாந்தை பூசிக் கொண்டு தலை குனிந்தது.
அவரின் வெட்கத்தை ரசித்தபடியே அவருக்கு வெகு அருகில் வந்து நின்ற செந்தூரன், "பூ வச்சுக்கலையா ரஞ்சிதம்?" என குறும்பாக மெல்லிய புன்னகையோடு வினவ, அவரின் திடீர் கேள்வியில் சட்டென்று உடலில் ஓடிய அதிர்ச்சி ரேகைகளோடு, "இ..இன்னும் இல்ல..லைங்க…" என உள்ளே சென்ற குரலில் கூறியவரின் தலையில் தன் கையிலிருந்த மனோரஞ்சித பூவை சூடினார் செந்தூர பாண்டியன்.
"முப்பது வருஷம் ஓடி போச்சு. இன்னமும் எதுக்கு இப்படி என்னை பார்த்தா மட்டும் தயங்கி தயங்கி பேசுற ரஞ்சிதம்?" என்று வினவியவர் தன் மனைவியின் நீண்ட கூந்தலில் சூடிருந்த அந்த ஒற்றை கத்தைப்பூவில் தன் முகத்தை ஆழந்து அழுத்தமாக புதைத்துக் கொண்டார்.
"என்..என்னங்க இது? பிள்..பிள்ளைங்க வருந்துற போறாங்கங்க… தள்ளுங்க…"
"ம்ம்! அது இருக்கட்டும். இத்தனை வருஷத்துக்கு அப்பறமும் எப்படி நீ மட்டும் அப்படியே இருக்க? சுருக்கமும் பருவமும் குறையாத வனப்பு. கலகலனு பேச்சு. ஓய்வில்லாத உழைப்பு. மாறாத பல்வரிசை. நரைக்காத நீண்ட கூந்தல். அதுல எப்பவும் சூடியிருக்கற மனோரஞ்சித பூ. எப்படி ரஞ்சிதம்?" என மெழுகை உறுக்கும் காந்த குரலில் கேட்டவரின் பார்வை அவருக்கு எதிரில் நின்றவரை தன் விழிகளில் தணியாத தாகத்துடன் அள்ளி பருகியது.
சட்டென மருண்டு விழித்தவரின் பார்வையில், "'இவன் கூட எல்லாம் யார் வாழுவாங்க'னு என்னை பார்த்து சொன்னியே ஞாபகம் இருக்கா ரஞ்சிதம் உனக்கு? அதுக்கு ஏத்த மாதிரி தானே இப்பவும் உனக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத தோற்றத்துல நான் இருக்கேன்?" சட்டென்று வலப்பக்க சுவரில் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியில் தன் முகத்தையும் வயதையும் சற்றே தேங்கிய தன் விழித்திரையை சிமிட்டி பார்த்து அளந்தவாறே புன்னகைத்தார்.
"அய்யோ! என்னங்க இது? அன்னைக்கு நான் ஏதோ விளையாட்டுக்கு சொன்னேங்க…" என பதட்டமான உடல்மொழியுடன் கூறியவரை தன் பக்கமாக திருப்பியவர் அவர் நெற்றி முட்டி நின்று, "இன்னைக்கு என்னமோ பழைய நினைவுகள் எல்லாம் அதிகமா வருது மனோ…" என்றவரின் மனோ நைந்து போய் ஒலிக்கவும் பதறியவர் அவர் முகத்தினை ஆராய்ந்து பார்த்தார்.
கால சுவடுகளில் என்றென்றும் மறக்க முடியாது அவர் நினைவலைகளில் புதைந்து போன பக்கங்கள் வேகமாக சுழன்று அவரை வேகமாக சுழற்றியது.
நிழல் விரித்து நின்ற அந்த பெரிய ஆலமரத்தின் அடியில் அந்த இரண்டு ஊர் மக்களும் கூடியிருந்தனர். கலைந்த தலையும் ஏனோதானோவென்று அணிந்த சட்டையும் மடித்து கட்டிய வேட்டியுமாய் ருத்ர மூர்த்தியாய் நின்றிருந்த செந்தூர பாண்டியனுக்கு எதிர்புறத்தில் செருக்கு நிறைந்த பார்வையுடன் இரத்தத்தில் ஊறிய திமிரும் தெனாவெட்டுமாய் செந்தூர பாண்டியனை முறைத்தபடி நக்கலாக நின்றிருந்தான் சுகனிலாசன்.
அவனின் முதுக்கு பின்னால் அவன் கையை இறுக்கமாக பற்றியவாறு பதட்டத்திலும் அச்சத்திலும் பயந்துபோய் நின்றிருந்தாள் மனோரஞ்சிதம். அந்நேரத்திலும் சிணுங்கி கொண்டிருந்த அவள் வளையொலியையும் அவள் வெண்ணிற பாதத்தில் சரசமாடிய கொலுசொலியையும் உள்வாங்கியவாறு நின்றிருந்தான் செந்தூரன்.
"ஏன்பா செந்தூரா? உங்க இரண்டு குடும்பத்துக்கும் தான் ஆகாதுல. அப்படி இருந்தும் எதுக்கு நீ எப்பவும் சுகனிலாசன்கிட்ட வம்புழுத்துக்கிட்டு கிடக்குற?" என வெண்பட்டு வேட்டி சட்டையில் கம்பீரமாக அமர்ந்தவாறு தன் வெள்ளை நிற மீசையை முறுக்கி விட்டபடியே சலிப்பாக வினவினார் எழுபதுகளின் பின்பாதியிலிருக்கும் இரண்டு ஊர் மக்களுக்கும் பொதுவான நாட்டாமை செய்யும் தலைவர் ஒருவர்.
"யோவ் பெரிசு! நடந்தது என்னனு தெரியாம பேச கூடாது. அவேன் தான் எங்க ஊர்கார பயலுங்கள வீடு புகுந்து அடிச்சிருக்கான். அதுல சேனாவும் சேகரும் இப்ப ஆஸ்ப்பத்திரில இருக்கானுங்க. ஏன்டானு கேட்டாக்க திமிரா பேசுனான் அதான் அடிச்சேன்." என்னும் போது அண்ணனின் முதுகிற்கு பின்னால் நின்றிருந்த மனோ எட்டி பார்த்து அவனை தீயாய் முறைத்தாள்.
மகிழூந்தில் அவளுடன் வருகையில் தான் அந்த வண்டியை நிறுத்தி அவளுடைய அண்ணனை இறங்க சொல்லி அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் செந்தூர பாண்டியன். தன் தமையன் செய்தது எதையும் அறியாத பாவை செந்தூரனை முறைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் அப்படி பார்க்கையில் சட்டென்று சிரிப்பு வந்தது செந்தூரனுக்கு. புத்தம் புது ரோஜாவாக சிவப்பு மற்றும் பச்சை நிற பாவாடை தாவணியில் சமைந்து நின்றிருந்தவளின் வனப்பு எப்போது போல அவனை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக் கொண்டிருந்தது. சிறு வயதில் இருந்தே அவன் குடும்பத்தினர் விதைத்த ஆசை என்னும் தீயில் வெந்து தணிந்து கொண்டிருந்தான் ஒவ்வொரு நொடியிலும். ஆசையும் பார்வையும் சேர்க்கும் காதலும் தவிப்பும் புரியாமல் இல்லை அவனுக்கு. தவியாய் தவிர்க்க நினைத்தும் முடியாமல் அவன் முழுதாய் தோற்பது அவளாய் இருப்பின் அது கூட அவனுக்கு பிடிக்க தான் செய்தது.
அண்ணனோடு ரோட்டில் கட்டி புரண்டு சட்டை போட்டதற்கு பதில் அவனுடைய தங்கையோடு மெத்தையில் கட்டி உருண்டு முத்த சண்டையிடும் வேகம் அவனை வதைத்து கொன்றது. 'புரிஞ்சிக்கவே மாட்றா! ராட்சஸிஸி…' தவிப்பாக முணுமுணுத்தவன் தன்னை சுற்றி நிகழ்வதை உணரும் போது அவனுடைய எண்ணங்களின் இளவரசி, "இவன் கூட எல்லாம் யார் வாழுவாங்க?" என கூறிக் கொண்டிருந்தாள். என்ன ஏதென்று ஒரு நிமிடம் புரியாமல் விழித்தவன் பிறகு அங்கே என்ன நடந்திருக்கும் என்பது புரிந்து, "அவன் எங்களுக்கு செஞ்சத்துக்கு நான் திருப்பி கொடுத்துட்டேன் அவ்வளவு தான்." என அங்கிருந்தவர்களை தீர்க்கமாக பார்த்து கூறியவன், "எனக்குனு பிறந்தவ என்னை வந்து சேருற நாள் ரொம்ப தூரத்துல இல்லை…" என அவளை ஆழ்ந்து பார்த்துக் கொண்டே கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான்.
அதன் பிறகு, "இவனுக்கு மூக்கு மேல கோபம் வருது. அவங்க அப்பாருகிட்டக்க சொல்லி அவனுக்கு மூக்கணாங்கயிறு போட சொல்லணும். அப்பதான் கொஞ்சம் அடங்கி ஒடுங்கி இருப்பான்" என்று அங்கிருந்த பெரியவர்கள் பேசியதை கேட்டு ஏனோ படபடவென்று துடித்தது மனோரஞ்சித்தின் நெஞ்சம்.
அவனின் பார்வைகளும் பேச்சுகளும் அவளை ரொம்பவே பயமுறுத்தியது. இரு குடும்பங்களும் ஒத்துமையாக வாழ்ந்த காலத்தில் பேசி வைத்திருந்தது தான் இவர்களின் திருமணம். மாமன் மச்சான் தகராறில் வருங்கால சம்மந்திகள் இருவரும் தங்களுக்குள் விரோதிகளானால் அதில் சமந்தப்பட்ட இவர்களின் காதலும் பொய்த்து போகுமா என்ன? இவர்களின் காதலா? ஆம். தொட்டு தழுவி, கன்னம் கிள்ளி, உதடு பதித்து, மெய் சேர்த்தெல்லாம் காதலிக்கவில்லை தான். ஆனாலும் விழிகளில் விழுந்து, இதயத்தில் வடித்து, மௌனத்தில் வளர்ந்து கால்தடம் பதித்திருந்தது இவர்களின் காதல். எங்கே அவனை வேண்டி அவன் முன்னால் சென்று நின்று விடுவோமோவென்று படிப்பை சாக்காக வைத்து சொந்த ஊரை விட்டே எங்கோ ஓடி சென்றாள் அவனுடையவள்.
அவளை காணமுடியாமல் உணவும் உறக்கமுமின்றி தவித்து வந்தான் அவளுடையவன். பல வருடங்களுக்கு முன்னால் எப்போதோ சிறுவயதில் அவளுக்கு அவன் தந்த காயங்கள், அவனுடைய நெற்றி முத்தங்கள், அவனுடனான பொய் கோபங்கள் மட்டும் தான் தன் காதலுக்கு கிடைத்த பரிசுகள் என்றெண்ணி வாழ்ந்து வருகிறாள் அவள். தன் வீட்டினரின் கோபமும் வெறுப்பும் எந்த காலத்திலும் குறையாது என்பதினை அறிந்து தன் அகம் மறைத்து வாழ்கிறாள். எத்தனை மூடிகள் போட்டு மறைத்தாலும் கொண்டவனின் பார்வைப்படும் தூரத்தில் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவனுக்காக கொடுக்க தவித்து போகிறது பெண்ணவளின் மனது. புரிந்தும் புரியாமலும் அதனை கண்டு கொண்டவனின் நெஞ்சத்தில் வீற்றிருக்கும் வலியை யாராலும் உணர முடியாமல் போனது தான் விதியோ.
மறைந்தும் ஒளிந்தும் கண்ணாமூச்சி ஆடிக் கொண்டிருந்த அவர்களின் காதல் பெருவெளியை அடைந்த நாளும் வந்தது. பத்து நிமிட மலை பாதையின் நடையில் குகையை குடைந்தெடுத்த சீதா ராமனின் பிரசித்தி பெற்ற கோவில் அது. மலை உச்சியில் தன் மனைவி சீதாவுடன் மந்தகாச சிரிப்புடன் அமர்ந்திருந்தான் அந்த ராமன். சற்றே ஒதுங்கிருந்த சிறுகுகை ஒன்றில் குறுக்கும் நெடுக்குமாக தவிப்பாக அலைந்து கொண்டிருந்தான் செந்தூரன்.
"ஏலெய்! செந்தூர! என்னாச்சு உனக்கு? எதுக்கு குட்டி போட்ட பூனையாட்டாம் அங்குட்டும் இங்குட்டும் நடந்துக்கிட்டு திரியற?" என அவனுடைய உயிர் நண்பனான சேனாபதி வினவவும்,
"பச்! எதுக்குடா கத்துற. எல்லாம் காரணமா தான் நடந்துக்கிட்டு இருக்கேன். நீ கொஞ்ச நேரம் அமைதியா இரு…" என்றவனின் பதிலில் தன் வாயை இறுக்கமாக மூடிக்கொண்டு நின்றாலும் செந்தூர பாண்டியனின் செயல்பாடு புரியாமல் சற்று குழம்பி போனான் சேனாபதி.
நிமிடங்கள் நிதானமாய் கடக்க அவர்கள் நின்றிருந்த இடத்தில் கொலுசொலி கேட்கவும் இருவருமே மறைவிடத்தில் ஒளிந்து கொண்டனர். அப்பக்கமாக கையில் சிறிய தூக்கு வாலியுடன் தன் தோழி அங்கயர்கண்ணியுடன் வேகமாக நடந்து சென்றாள் மனோரஞ்சிதம்.
அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம் அவர்களுக்கு முன்பாக வந்து நின்ற செந்தூர பாண்டியனை பார்த்த பெண்கள் இருவரும் சற்று பயந்து போக சன்னமான புன்னகையுடன் மனோரஞ்சிதத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன். "என்ன வேணும்? எதுக்கு வழிய மறைக்கறிங்க? வழிய விடுங்க. இல்லனா என் அண்ணங்கிட்ட சொல்ல வேண்டி வரும்!" என அவன் முன்னால் கை நீட்டி மிரட்டியவளின் படபடப்பான பார்வையில் வாய்விட்டு சிரித்தவன், "என்ன வேணும்னு சொன்னா உடனே தந்துருவியா? என்ன உங்க அண்ணன பார்த்து எனக்கென்ன பயமா என்ன? இப்படி மிரட்டுற? ம்ம்! இதுவும் நல்லா தான் இருக்கு அன்னைக்கு பஞ்சாயத்துல சொன்ன மாதிரி…" என அவன் இழுக்க அன்று அவர்கள் பேசியதும் அதற்கு தான் கூறிய பதிலும் அவளுடைய நினைவிலாடியது.
"இவன் பொஞ்சாதி மிரட்டலுக்கு தான் பயப்படுவான் போல…" என செந்தூர பாண்டியனை பார்த்து அவர்களில் சிலர் கூறுகையில் ஏனென்றே தெரியாமல், "இவன் கூட எல்லாம் யார் வாழுவாங்க?" என அவள் கூறியதை நினைக்கையில் வியர்த்து போனது அவள் முகம்.
"என்ன இப்படி வியர்க்குது? புருஷன மிரட்டுனா மட்டும் பத்தாது அவனை பார்த்து இப்படி பயப்படாம இருக்கவும் கத்துக்கணும்…" என தன் கரத்தினை தூக்கி அவனுடைய முழு கைக்கும் நீண்டிருந்த சட்டையால் அவள் முகத்தில் அறும்பியிருந்த வியர்வையை அவன் துடைக்க சட்டென்று உயிர்பெற்ற சிலையாக அவனை உறுத்து விழித்தவள், "தள்ளி நில்லுங்க" என கோபமாக சீற, "சரி சரி! தூக்குல என்ன?" என கேட்டவன் அவளுடைய இடது கையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த வாலியை வாங்க முயன்றான்.
"சக்கர பொங்கல் இருந்துது. இப்ப காலி!" என உதட்டை பிதுக்கியவளையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அதை கைகளால் தொட்டு பார்க்கும் எண்ணம் எழாமலில்லை. "ஏன்டி பொய் சொல்லுற. அண்ணே! உங்களுக்கு பிடிக்கும்னு தான் ஆசை ஆசையா அவளே செஞ்சி கொண்டு வந்தா. இப்ப பொய் சொல்லுறா!" என்று கூவிய அங்கையை பார்த்து முறைத்தவள், "இப்ப இது காலி!" என மீண்டும் அவள் கடுப்பாக கூறவும், "அதை நான் பார்த்துக்கறேன். இங்க குடு!" என்று கூறிய செந்தூரன் அதை கைப்பற்ற முயன்றான். இருவரையும் பார்த்து சிரித்த மற்ற இருவரும் மீண்டும் கோவிலுக்குள் சென்று விட்டனர்.
அவனின் தொடர் முயற்சிகளை பார்த்து சட்டென்று அவனுக்கு எட்டாத வகையில் அதை உயர்த்தி பிடிக்கின்றேன் என அவள் அதனை தூக்கி பிடிக்கவும் அவள் கால்கள் வழுக்க விழ போனவளை சட்டென இடை வளைத்து தாங்கி பிடித்தான் செந்தூர பாண்டியன். இருவரின் முகமும் வெகு அருகாமையில் சிறகடிக்க பார்வைகள் இரண்டும் ஒன்றோடு ஒன்றாக இணைந்தது. விழுந்தவள் தன் மனைவி என அவனும் தான் விழுகையில் தன்னை தாங்கி பிடித்திருப்பவன் தன் கணவன் என அவளும் நினைத்திருக்க முதலில் அவளை விட்டு விலகி நின்ற செந்தூரன் அவள் கைகளை பிடித்திழுத்து அவளை அந்த குகைக்குள் இழுத்து வந்தான்.
மறுக்கும் நிலையில் அவளும் இல்லை அவளை அப்படியே விட்டுவிடும் எண்ணம் அவனுக்கும் இல்லை. வேகமாக இழுத்து வந்தவன் அதே வேகத்தில் அவளை முழுதாக அள்ளி அணைத்திருந்தான். "எத்தனையோ வேண்டாம்னு நினைச்சும் முடியலடி." அவன் குரல் உரிமையுடன் குழைந்தது. "கோவில்ல என்ன இ..இது?" என உதடு துடிக்க கேட்டவளின் பேச்சை உணர்ந்து நிதானத்திற்கு வந்தவன், "கல்யாணம் நடக்குற வரைக்கும் என் கண்ணுல படாம இரு…" என கூறிக் கொண்டே அங்கிருந்த பாறையின் மீது அமர்ந்தான்.
அவள் எடுத்து வந்திருந்த வாலியை திறந்தவன் அதிலிருந்த சக்கரை பொங்கலை பார்த்து விட்டு அவளை நிமிர்ந்து பார்த்து புன்னகைத்தான். "கோவிலுக்கு வந்தவங்களுக்கு கொடுத்திய இல்லையா? இவ்வளவு இருக்கு?" என குறும்பாக வினவ, "சின்ன குழந்தைங்க கோவிலை சுத்திட்டு இருந்தாங்க. அவங்களுக்கு மட்டும் கொடுத்தேன்." என அவள் தரையை பார்த்து கூறவும் அதனை சிரிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தவன் அவள் செய்ததை அள்ளி சுவைப்பார்த்தான்.
"என்ன வேண்டிக்கிட்ட?" என மீண்டுமாய் அவள் முகம் பார்த்தான் அவன்.
"எதுவுமில்ல!"
"பொய்!"
"நிஜமா ஒண்ணுமில்ல!"
"எத்தனை குழந்தைங்க வேணும்னு வேண்டிக்கிட்ட?"
"..."
"ஒன்னா? இரண்டா?" சரியாய் அவள் நாடி பிடித்து அவன் கேட்ட கேள்வியில் தன்னை மறந்தவள் கடுப்பாக,
"ஒன்னு இரண்டு எல்லாம் எப்படி பத்தும்? குறைஞ்சது முப்பதுதாவது வேணும்னு வேண்டிக்கிட்டேன்." என தன் கண்களை குறும்பாக சிமிட்டவும் இமைக்காது அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், "முப்பதா? ஹாஹா! அதையே தான் முழுநேர வேலையா செய்யணும்னு இருக்கியா?" என வம்பிழுக்கும் குரலில் கூறியவனை பார்த்து ஒன்றும் புரியாமல் 'பே'வென விழித்துக் கொண்டு நின்றிருந்தாள்.
"இங்க வா!" என்றழைத்தவனை தள்ளி நின்று பார்த்துக் கொண்டிருந்தவளை முறைத்து பார்த்தவன், "இங்க வாடி!" என மீண்டும் தன் கீழ் உதட்டை மடித்து அதட்டினான். 'என்ன?' என்ற கேள்வியை விழிகளில் தாங்கி நிறுங்கியவளை பார்த்தவன், "க்கும்! இதுக்கே அழுவுறா இதுல முப்பது பிள்ளைங்க வேணுமாம்!" என புன்னகை முகமாக அவளுக்கும் கேட்குமாறு முணுமுணுக்கவும் அவனை குனிந்து பார்த்தவள், "அதெல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம். இப்ப எதுக்கு கூப்டிங்கனு சொல்லுங்க?" என்றாள் அவனுக்கு குறையாத மிரட்டலுடன்.
வியப்பாக அவளை பார்த்துவிட்டு தன் கையிலிருந்த வாலியை அவளிடம் நீட்டியவன், "ஊட்டி விடு!" என்றான் முகம் முழுவதும் பூத்திருந்த புன்சிரிப்புடன். 'என்ன?' என அதிர்ந்து விழித்தவள் அவன் சொல்லியதை செய்து முடிக்கும் வரை அவன் அவளை விடவில்லை. எண்ணமும் வண்ணமும் சேர தங்கள் கனவுகளில் அவர்களின் நேசத்தை வளர்க்க ஒருவரை ஒருவர் அதிகமாக நாடிய போதிலும் இருவரும் அதன் பிறகு சந்தித்துக் கொள்ளவே இல்லை.
ஆறு மாதங்களுக்கு பிறகான இரண்டு பக்க கிராம மக்களின் பொதுவான ஊர் திருவிழா ஒன்றில் கழுத்தை சுற்றி படர்ந்திருந்த சங்கலியை இழுத்து பிடித்தவாறு கைகளில் வளையலும் காதுகளில் ஜிமிக்கியும் கால்களில் கொலுசுமாக வெண்ணிற பட்டில் விண்ணுலக தேவதையாக ஒளிர்ந்த மனோரஞ்சிதத்தின் கண்கள் மட்டும் யாரையோ தேடியவாறு சுற்றி திரிய அவள் எதிர்ப்பார்ப்புகளின் மன்னவன் அவள் விழித்திரையில் விழாமல் அவளை வதைத்து துன்புறுத்தினான்.
எப்படி தைரியம் வந்ததோ அவனின்றி வெறுமையாய் சுற்றி திரியும் அவனுடைய நண்பர்கள் கூட்டத்தை நெருங்கி, " அண்ணே! அவங்க எங்க?" என சேனாபதியிடம் வினவினாள் மனோரஞ்சிதம்.
கண்களில் தவிப்பும் அவனை காண ஏங்கி நிற்கும் மனதுமாக அவள் நின்ற கோலத்தில் உறுகியவன் அவன் எங்கு இருக்கிறான் என்று சொல்லிருக்க கூடாதோ. ஆனால் விதி செந்தூரன் இருக்கும் இடத்தை அவளிடம் சொல்ல வைத்திருந்தது. "அவன் இங்க வரலமா. தெக்கால இருக்குற பூசணி தோட்டத்துல இருக்கான். இரப்புக்கு மடை மாத்தி விட்டுவறேன்னு போனவன் அங்கவே இருந்துட்டான். இங்க வர மாட்டான்மா." என மெல்லிய குரலில் கூறிவிட்டு அங்கிருந்து விலகி சென்றவன் மனோ எப்படியாவது அவனை பார்த்துவிட தவித்துக் கொண்டிருக்கிறாள் என கொஞ்சமும் அறிந்திருக்கவில்லை.
வெண்ணிலவு துனையிருக்க மிதமான இருளில் பம்பு செட்டின் அருகே கொட்டிக் கொண்டிருந்த நீரில் தன் கைகளையும் கால்களையும் கழுவிக் கொண்டிருந்த செந்தூரனின் பின்னால் வந்தவள் ஒரு சில நிமிடங்கள் தயங்கி நிற்கவும், "உன்ன நம்ப கல்யாணம் வரைக்கும் என் கண்ணுல படக்கூடாதுனு சொன்னேன்ல. ஏன் இங்க வந்த?" என அவளை திரும்பி பார்க்காமலே அவள் வந்திருப்பதை உணர்ந்து கோபமாக வினவினான் செந்தூர பாண்டியன்.
"எப்படி…எப்படி தெரியும் உங்களுக்கு? என்னை பார்க்காமலே சொல்றிங்க?"
"தெரியும்! நீ வருவேன்னு தெரியும்" என புன்னகைத்தவனின் வனப்பு அவள் விழிகளை மெல்ல விரிய வைத்தது.
"அதான் எப்படி?" அவனையே விடாமல் பார்த்தவாறு மென்மையாக வினவிய மனோரஞ்சிதம் ஓரடி முன்னால் எடுத்து வைக்கவும், "வேணாம்! தண்ணில இறங்காத… வெண்பட்டு சேல கரையாகிடும். அங்க கட்டில்ல போய் உட்காரு." என்று கூறியவன் ஓரிரு நிமிடங்களில் அவளருகில் வந்து அமர்ந்தான். மௌனமாய் கடந்த சில நொடிகளுக்கு பிறகு, "என்ன கேட்ட?" என வினவியவனின் சத்தம் அவளுக்கு மட்டுமே கேட்கும் வண்ணம் வந்தது.
"ம்ம்! நான் வருவேன்னு எப்படி தெரியும். சேனா அண்ணா சொன்னங்களா? ஆனா அவங்க கோவிலுக்குள்ள தானே இருந்தாங்க" என யோசித்தவளை தலை முதல் கால் வரை அளந்ததது அவன் பார்வை. மயில் கழுத்து நிறத்தில் ரவிக்கையும் பாவாடையும் அணிந்து அதற்கு பொருத்தமான வெண்ணிற பட்டு தாவணியை தழுவியிருந்த அவளுடைய மெல்லிய தேகத்தை பார்த்து சட்டென தன் பார்வையை வேறுபக்கமாக திருப்பி மனதிற்குள் எதையோ தவிப்பாக முணுமுணுத்துக் கொண்டான் செந்தூர பாண்டியன்.
"நீ என்னை தேடி வருவனு தெரியும். எப்படினு சொல்லணும்னா முதல்ல நான் சொல்லுறதை நீ செய்யணும்?" என தன் புருவங்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி சிரித்தவனை பார்த்து விழித்துக் கொண்டிருந்தாள் மனோரஞ்சிதம்.
"அது ஒண்ணுமில்ல. சின்ன வயசுல நீ என்னை கூப்பிட்ட மாதிரி இப்ப என்னை பெயர் சொல்லி கூப்பிடனும். அவ்வளவு தான்!" என கூறியவனை முறைத்தாள்.
"ம்ம்! எங்க சொல்லு பார்ப்போம்!" என்று ஆவலாக அவள் புறம் திரும்பி அமர்ந்தவனை பார்த்துக் கொண்டே இருந்தவள் சட்டென 'பாண்டியா!' என தான் சிறுவயதில் எப்பவும் அவனை அழைக்கும் வகையில் ஆழமாக தன் மனதிற்குள்ளேயே ஒருமுறை சொல்ல, "ஹ்ம்ம்!" என வேகமாக திரும்பியவன், "எனக்கு கேட்டுச்சு!" என அவளை தன் பார்வையால் வருடியவாறு அவளுடைய கைகளில் காகிதங்கள் சுற்றியிருந்த அப்பொருளை திணித்தே விட்டான்.
உள்ளமெங்கும் துள்ளி குதிக்கும் இதத்தோடு அந்த காகிதங்களை மெதுவாக பிரித்து அதற்குள் பல்லை காட்டி சிரித்துக் கொண்டிருந்த பாசி பச்சை நிற வளையல்களை கண்டு சட்டென்று அவள் இதழ்களில் புன்னகை ஒன்று தவழ்ந்தது. ஒவ்வொரு வருட திருவிழாவிற்கு அவன் அவளுக்காக அளிக்கும் பரிசு அது. அவளுடன் பேசிய பொழுதுகளிலும் பேச முடியாது போன தருணங்களிலும் கூட அது அவளை எப்படியேனும் வந்து சேர்ந்து விடும். இம்முறையும் அதை எதிர்ப்பார்த்து அவனுக்காக காத்துக் கொண்டிருந்து தவித்தவளின் கரங்கள் இரண்டும் அதனை மென்மையாக வருடிவிட்டது.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த செந்தூரன், "இந்த முறை தரமாட்டேன்னு நினைச்சியா? உன்னை திருவிழால பார்த்துக் கொடுக்கணும்னு தான் இருந்தேன். ஆனா இதை கொடுத்துட்டு, உன்னை பார்த்துட்டு, சும்மா போக முடியும்னு எனக்கு தோணல. இப்பவும் கூட பயமா இருக்குடி. இங்கிருந்து சீக்கிரமா கிளம்பு நீ!" என்றவனை கூர்ந்து பார்த்தவள், "பூ..பூ?" என நிறுத்தினாள் அந்த வளையல்களை தன் கைகளில் அணிந்தபடியே அடம் பிடிக்கும் குழந்தையாக, "மனோ! சொன்னா கேளுடி. இந்நேரத்துல நீ தனியா வந்ததே தப்பு. கிளம்பு!" என அவன் கூறியதே காதில் விழாதது போல அமர்ந்திருந்தவளின் முன்னால் அவளுக்கு பிடித்த மனோரஞ்சித பூவுடன் நீண்டது அவனுடைய வன்கரம்.
அதை அவள் சிரிப்புடன் வாங்கவும் எங்கோ இருந்து வேகமாக அங்கு ஓடி வந்து மூச்சு வாங்க அவர்களின் முன்னால் நின்ற சேனாபதியின் கலங்கிய விழிகளை கண்ட இருவரும் வேகமாக எழுந்து நிற்க, "செந்தூரா! அம்..அம்மா அம்மா…" என தான் கூற வந்த விஷயத்தை கூற முடியாமல் அவன் தயங்கவும், "அம்மாக்கு என்னடா… என்னாச்சு அவங்களுக்கு…" என்று அவனை போட்டு உலுக்கினான் செந்தூர பாண்டியன். ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரிய திகைத்து போய் அசையாமல் நின்றிருந்த அவர்கள் இருவரையும் நோக்கி, "அம்மா நெஞ்ச பிடிச்சுகிட்டு சாஞ்சிருச்சுடா…" என தன்னை வளர்த்த தாயின் மேலிருந்த பாசத்தில் சேனாபதி துடிக்க ஈரைந்து மாதங்கள் மழையிலும் வெயிலிலும் தன்னை சுமந்து கண்ணின் மணியாக பெற்றெடுத்த அன்னையின் நிலை அறிந்து மரித்து போய் நின்று போனது செந்தூரனின் இதயத்துடிப்பு.
அவன் தோள்களை பிடித்து உலுக்கிய மனோரஞ்சிதம், "என்ன மா..மாமா பார்த்துட்டு நிக்குற… அத்..அத்தைய போய் பாரு… முதல்ல ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போங்க…" என கூறவும், "வண்டி ஏற்பாடு பண்ணி அம்மாவ ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிருக்காங்கமா. இவன கூட்டி போக தான் நான் வந்தேன்!" என்றவன் வேரொடிந்த மரம் போல் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்த செந்தூரனின் கரங்களை பிடித்திழுக்க அசையாமல் நின்றவன் சட்டென மனோவை திரும்பி பார்த்தான்.
தவிப்பாக அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவளை தலை முதல் கால் வரை வேகமாக உரசி சென்றவனின் பார்வை அவள் விழிகளில் வந்து இளைப்பாற தன்னையும் அறியாமல் அவன் கைகள் இரண்டும் நீண்டு அவள் கைகளை அழுத்தமாக பிடித்துக் கொண்டது. "என..எனக்கு என்னமோ தப்பா நடக்கப்போகுதுனு தோ..தோணுது மனோ… நீ..நீயும் என் கூடவே வாயேன்." என அவளை கெஞ்சியவனை மற்ற இருவரும் சேர்ந்து பல ஆறுதல் வார்த்தைகள் கூறி சமாளித்து அவனை அங்கிருந்து அனுப்பி வைக்கவும் தன் தாயை காணவென தன் தாரத்தை தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிய செந்தூர பாண்டியனின் தவிப்பு இன்றும் அவரின் விழிகளில் பரதிபளித்தது.
"ரஞ்சிதம்! பழசை எல்லாம் நினைச்சு பார்த்தா கனவு மாதிரி இருக்குல… எந்த புள்ளியில தொடங்கியது உனக்கும் எனக்குமான காதல்னு தெரியாது. காதலுக்கும் நேசத்துக்கும் எந்த எல்லையும் முடிவும் கிடையாதுனு எனக்கு புரிய வச்சது நீ. காதல் தோல்வியுறும் இடம்னு இந்த பிரபஞ்சத்தில் எந்தவொரு இடமும் இல்லை. அப்படி ஒன்னு இருந்தா அது உன்னோட கண்களா தான் இருக்க முடியும். பின்ன துவங்கிய இடத்துல தானே முடிவும் இருக்கும். அந்த முடிவுறும் இடத்தை நோக்கி நகர்கிறது என் பயணம் உன்னைத் தேடி…" என தன் முன்பாக நின்றிருந்த அவள் முகத்தினை தன் கைகளில் மிருதுவாக ஏந்தி அவர் கூறிக் கொண்டிருக்கவும்,
Last edited: