• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

13. பூமாலையே எந்தன் தோள் சேர வா..!

Aieshak

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
137
116
43
53
Chennai, Tamil Nadu
aieshakwrites.in
கண்ணன் மிகுந்த கோபத்தில் இருந்தான். அவனை என்னவென்று நினைத்தாள் அக்கா? ஒன்றும் அறியாத பச்சைக் குழந்தை என்றா? ஒருநாள் தங்கச் சொல்லி அவள் வற்புறுத்தியபோதே ஏதோ விஷயம் என்று அவன் புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதிலும் அக்கா குடும்பம் மட்டுமில்லாமல் அறிமுகமற்றவர்களோடு பிக்னிக் பயணம் செய்தபோதாவது புரிந்து கொண்டிருக்க வேண்டும், பழப்பண்ணையில் அந்த இரண்டு பெண்களும் அவனிடம் வலிய வந்து பேசியதும் அவனுக்கு லேசாக சந்தேக பொறி தட்டியது. அவர்களை கழட்டிவிடத்தான் பண்ணையை சுற்றிப் பார்க்க கிளம்பினான். அப்போதும் அட்டையாய் ஒட்டிக்கொண்டு எல்லாருமாக அவனோடு வந்துவிட்டனர்.

ஆனால்....

மற்றது மறக்கும்படியாக பழமரங்களும் அந்த சூழலும் அவனை கவர, கூடவே வந்து பண்ணைப் பொறுப்பாளர் ஒவ்வொன்றாக விவரிக்க கவனத்துடன் கேட்டுக் கொண்டான் கண்ணன். உடன் வந்த மற்றவர்களுக்கு ஒரு கட்டத்தில் ஆர்வம் குறையவும் ஓய்வெடுக்க சென்றுவிட...

பொறுப்பாளரை திருப்பி அனுப்பிவிட்டு சித்தார்த்துடன் ஜீப்பில் பயணித்து கடைக்கோடி வரையிலும் சென்று பார்வையிட்டான்.

அப்போதுதான் சித்தார்த்திடம் அவன் விவரம் கேட்டதும். அதற்கு சித்தார்த் சொன்ன பதிலில் கண்ணனுக்கு ஆத்திரம் தான். ஆனால் அதை அத்தானிடம் காட்ட மனமற்று வேறு கேட்டான்.

கண்ணன் தயக்கத்துடன் வினவவும், " அட என்கிட்ட உனக்கு என்ன தயக்கம் மாப்பிள்ளை? "என்னால் முடிந்தால் அவசியம் செய்வேன்" என்று வாக்களித்தான் சித்தார்த்.

"ம்,ம், அக்காவை மீறி உங்களால் எனக்கு உறுதி கொடுக்க முடியுமா அத்தான்? ?" என்று நேராக பார்த்து கேட்டான் கண்ணன்.
"ஓ! என்றவன் இதுநாள் வரையில் நீ என்கிட்ட எதுவுமே கேட்டதில்லை மாப்பிள்ளை. முதல் தடவையாக ஏதோ கேட்க ஆசைப்படுகிறாய், அதனால் நிச்சயம் செய்வேன்’’ என்றான் அழுத்தமான குரலில்.

"ம்ம்...உங்கள் வீட்டில் என்னையும் ஒருவனாக ஏற்றுக் கொள்வீர்களா அத்தான்? சற்றே தயக்கத்துடன் வினவ,

"என்ன சொல்றே மாப்பிள்ளே? நாம் எல்லாரும் ஒரே குடும்பம்தானே? என்று சொல்லிக்கொண்டிருந்த சித்தார்த்திற்கு விஷயம் முழுதாக புரியவும் முகம் பளிச்சென்று மலர,"அட இதற்கா இவ்வளவு தயக்கம்? என்றவன், உன் மனசு எனக்கு எப்பவோ தெரிஞ்சு போச்சு மாப்பிள்ளை. ஆனால் நான் அதை உன் அக்காகிட்ட சொல்லவில்லை. காரணம் நீயே வந்து சொல்லுறப்போ அவளுக்கு தெரியட்டும்னு நினைச்சேன், அதுக்கு ஒரு காரணம் இருக்கு" என்றான்.

"எப்படி தெரியும் அத்தான்? அதென்ன காரணம்? என்றான் வியப்பும் குழப்பமுமாக

"ம்ம்... அது எப்படியோ தெரிந்தது மாப்பிள்ளை, இப்ப அது முக்கியமில்லை, ஆனால் நான் சொல்லாததற்கு காரணம் சொல்றேன்," என்றவன் தொடர்ந்து, "எங்க திருமணம் ஆனதில் இருந்து உன் அக்கா மனதிலும் இந்த எண்ணம் தான் இருந்தது. கடைசியா என் அம்மா, அப்பா வந்திருந்தப்போ ஓகே சொல்லிட்டாங்க. அவங்க மறைவுக்குப் பிறகு, அவள் இந்தப் பேச்சையே எடுக்கவில்லை. நான்கூட அவர்கள் மறைவும் சத்யாவின் ஒதுக்கமும் ரொம்ப பாதித்துவிட்டது போலும்னு நினைச்சேன். இப்போது அவள் உனக்கு வெளியே பொண்ணு பார்க்கிறது எனக்கே இன்று தான் தெரியவந்தது. அவள் மனதில் என்ன இருக்குன்னு தெரியவில்லை மாப்பிள்ளை"மனதில் இருந்தவற்றை கொட்டித் தீர்த்தான் சித்தார்த்.

"அது என்னவாக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை அத்தான். பெண்ணுக்கு அண்ணனான உங்கள் சம்மதம் கிடைத்துவிட்டது, அது மட்டுமில்லாது, அத்தை மாமாவும்கூட முன்னமே சம்மதித்துவிட்ட பிறகு, நான் இதில் இருந்து பின் வாங்க மாட்டேன். கூடிய சீக்கிரம் உங்க தங்கச்சிககிட்டயும் சம்மதம் வாங்கிடுவேன் அத்தான். அப்புறம்தான் நான் மறுபடியும் பெங்களூர் திரும்பி வருவேன். சரி அத்தான் நான் இப்படியே வீட்டிற்கு சென்று என் திங்க்ஸ் எடுத்துட்டு கிளம்பறேன். நீங்க அக்காகிட்ட சொல்லிடுங்க" என்றவன் சித்தார்த்தை பண்ணைவீட்டில் இறக்கிவிட்டு அதே ஜீப்பில் பெங்களூர் நோக்கி பயணமானான் கண்ணன்.

☆☆☆

சென்னை
மாலை மணி 5:30யை நெருங்கிக் கொண்டிருக்க பணிகளை முடித்து சத்யபாரதி வீடு கிளம்ப ஆயத்தமானாள். முன்தினம் போலவே அவள் கிருஷ்ணாவின் அழைப்பை எதிர்பார்த்து காத்திருந்தாள். கிளம்பும் வரையிலும் அவன் அழைக்கவில்லை. இன்னதென்று சொல்ல தெரியவில்லை. கஷ்டமாக இருந்தது. ஏதேதோ சமாதனங்களை கற்பித்து கொண்டபோதும் மனம் அமைதியின்றி இருந்தது.
அவள் வீடு வந்து சேர்ந்தபோது ஏனோ சோர்வாக உணர்ந்தாள். இத்தனைக்கும் அன்றைக்கு கிருஷ்ணா அதிக வேலை ஏதும் கொடுக்கவில்லை. ஏதோ மனசுக்குள் சொல்லத் தெரியாத வாட்டம் இருந்தது. ஒருவாறு உடை மாற்றி, சிட்டவுட்டில் போய் அமர்ந்தாள். ரூபா கொணர்ந்த சிற்றுண்டியை மறுத்துவிட்டு டீயை அசுவாரசியமாக குடித்துக்கொண்டிருந்த போது அவளது கைபேசி ஒலித்தது. ஆவலாக எடுத்தாள் சத்யபாரதி.

ஆனால் அது அண்ணன் சித்தார்த்தின் அழைப்பு. அண்ணனுடன் பேசினால் மனது நன்றாகிவிடும் என்று தோன்ற கைப்பேசியை உயிர்ப்பித்து காதுக்கு கொடுத்தாள்,

" சொல்லுங்கண்ணா "
" எப்படிம்மா இருக்கே?" வீட்டுக்கு வந்துட்டியா?"
" வந்துட்டேன், அண்ணா “
"டிபன், காபி சாப்பிட்டியா? இல்லையா? அதுக்குள்ளே அண்ணன் கூப்பிட்டுட்டேனா??"
"சாப்டேன். அண்ணா, நீங்க சொல்லுங்க என்ன விஷயம் அண்ணா? "

"ஒன்றும் இல்லைம்மா. சும்மாதான், உன்கூட பேச நேரமே கிடைக்கிறது இல்லை. இன்னிக்கு கொஞ்சம் ஓய்வு கிடைச்சது. அதான், சொல்லும்மா உனக்கு அங்கே வேலை பிடிச்சிருக்கா? உன்னோட முதலாளி எப்படிம்மா?? கூட வேலை செய்யறவங்க எல்லாம் நல்லா பழகுறாங்களா?" இல்லைன்னா சொல்லுமா, ஏன் கேட்கிறேன்னா உன்னோட அண்ணி சொல்லை மீறி உன்னை அனுப்பியிருக்கிறேன். அதனால் போன இடத்தில் உனக்கு ஏதும் கஷ்டம் என்று அவளுக்கு தெரிஞ்சா என்னை சும்மா விடமாட்டாள். அத்தோடு நீ என்னோட பொறுப்பும்மா. எப்பவும் உன்னை மகள் ஸ்தானத்தில் தான் பார்க்கிறேன்’’ சித்தார்த்திற்கு உள்ளபடியே தங்கை ஒதுங்கி போகிறாளோ என்ற எண்ணம் முன் தினம் வசந்தி பேசியதிலிருந்து தோன்றியபடியே இருந்தது. கூடவே மைத்துனன் மனது தெரிந்துவிட்ட நிலையில் அங்கே அவள் என்ன மனநிலையில் இருக்கிறாள் என்றும் அறிந்து கொள்ள எண்ணினான்.

ஆனால் சத்யபாரதிக்கு அண்ணனின் "பொறுப்பு" என்ற வார்த்தை அவள் விலகியிருக்க எண்ணிய காரணத்தை உணர்த்த, "அதெல்லாம் நல்ல மாதிரியாக நடந்து கொள்கிறார்கள் அண்ணா, எந்த பிரச்சனையும் இல்லை. இங்கே ரொம்ப நாளுக்கு பிறகு சர்தோஷமா இருக்கிறேன், அப்படி ஏதும் கஷ்டம் என்றால் நான் முதலில் உங்களிடம் தான் சொல்வேன் அண்ணா. என்னைப் பற்றி நீங்கள் கவலைப்படவே வேண்டாம்." என்று அழுத்தமாக கூறினாள்.

தங்கையின் பதிலில் லேசாக துணுக்குற்றான் சித்தார்த். இத்தனை நாளாக அவள் சந்தோஷமாக இல்லை என்று சொல்லாமல் சொல்கிறாளா? அல்லது வேறு எதுவும் காரணமா? ஆனால் அதை நேரடியாக கேட்க அவனுக்கு மனம் வரவில்லை. அப்படிக் கேட்டால் அவள் அதற்கு வேறு ஏதேனும் விளக்கத்தை சொல்லக்கூடும். இதை வேறு விதமாகத்தான் அறிந்து கொள்ள வேண்டும் என்று எண்ணியவனாக,
"சரிதானம்மா. முடிஞ்சா ஒருமுறை வந்துட்டு போ. அப்பப்போ போன் பண்ணுமா சத்யா. உடம்பை பார்த்துக்கோம்மா, என்று பேச்சை முடித்துக்கொண்டான்.

கைப்பேசியை அணைத்தவளுக்கு ஏனோ ஆயாசமாக தோன்ற சாய்வு நாற்காலியில் வாகாக சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள். அந்தி சாய்ந்து இரவு தொடங்கியிருந்த வேளை, தென்றல் காற்று அவளை தழுவிச் செல்ல மெல்ல கண்ணயர்ந்தாள்....

அந்தப் பழங்கால வீட்டின் மொட்டை மாடியில் பாதியை தடுத்து தட்டிகளால் அறை ஒன்று எழுப்பப்பட்டிருந்தது. மீதி வெட்டவெளியாக இருந்தது. அந்த தட்டிகளில் மணி ப்ளான்ட் கொடிகள் தழுவியிருந்தது. அங்கே "ஏதோ ஒரு ஓவியத்தை தீவிரமாக வரைந்து கொண்டிருந்த சத்யபாரதி, அரவம் கேட்டு சட்டென திரும்பினாள்.

"பாரதி" என்று அழைத்தவாறு கண்ணன் வந்துகொண்டிருக்க கையிலிருந்த தூரிகை நழுவ, விழிகளில் கண்ணீர் வழிந்தோட ஓடிச்சென்று அவனைக் கட்டிக் கொண்டாள்.

"ஷ்...ஷ்... பாரதி அழக்கூடாது. அதான் நான் வந்துட்டேனே.

"ஐ..ஐ ..மிஸ் யூ கண்ணன்" என்றாள் விசும்பலோடு.

"நானும் தான் பாரதி.. .இனிமேல் உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன்,”என்று கண்ணீரை துடைத்தான்.

"நிஜமா, நீங்க போகமாட்டீங்களே கண்ணன்" வாய் முணுமுணுக்க தன்னை மறந்து எங்கோ சஞ்சரித்த வேளையில். ...

வேகமாய் வீசிய காற்றில் மழைச் சாரல் துளிகள் முகத்தில் பட்டுத்தெறிக்க திடுக்கிட்டு கண்விழித்த சத்யபாரதிக்கு இதயம் வேகமாக தடதடத்தது. அவளுக்கு சுற்றுப்புறம் புரிய சிலகணங்கள் ஆகிற்று.

பால்கனியின் சாய்வு நாற்காலியில் படுத்தவாறு கண்ணயர்ந்தது நினைவுக்கு வந்தது.
எல்லாவற்றையும் பின்னே தள்ளியது அந்த கனவு. படபடப்பாக வந்தது. கண்ணனை அவள் மறந்துவிட்டதாக எண்ணியது மெய் இல்லையா? இதென்ன பைத்தியக்காரத்தனம்? அவன்தான் பாரதி என்று ஒருத்தி இருப்பதையே மறந்து மறைந்து விட்டானே? அவளும் தான் அவனை நினைப்பதை நிறுத்திவிட்டாளே!

அப்படியும் இப்போது ஏன் இந்த கனவு? ஆனால்.... ஆனால் அந்த உருவம் ?? அது ஏன் கிருஷ்ணாவின் தோற்றத்தில்... அவளுக்கு மனது குழம்பிப் போயிற்று. ஏனோ அவளால் அதை ஜீரணிக்க முடியவில்லை.

"சத்யா சாப்பிட வாம்மா, மழை வர்றாப்ல இருக்கு. கரண்ட் கட்டாகிடும் அதுக்குள்ளே சாப்பாட்டை முடிச்சுடலாம்ல.?" ரூபா வந்து அழைத்தாள்.

சாப்பிடும் மனநிலையில் அவள் இல்லை. சாப்பிடாமல் ரூபா விடமாட்டாள். அதைவிட செய்த உணவும் வீணாகிப்போகும். வேறு வழியின்றி சாப்பிடச் சென்றாள் சத்யபாரதி.
இரவு முழுவதும் அவளால் சரியாக தூங்க முடியவில்லை. காலையில் விடிந்ததும் எழுந்து குளித்து பெயருக்கு சாப்பிட்டு அலுவலகம் கிளம்பிச் சென்றால் அங்கே தீவிர யோசனையில் இருந்தான் கிருஷ்ணா.

"என்னவாக இருக்கும் ? கேட்கலாமா கூடாதா" என்று புரியாமல் நின்றாள் சத்யபாரதி... !

 

Attachments

  • PSX_20240724_125220.jpg
    PSX_20240724_125220.jpg
    54 KB · Views: 5