• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

2. தள்ளாடும் உள்ளங்கள்

kkp43

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 3, 2023
Messages
4
உள்ளம் - 2

திலீபன் ஒரு கணிணி மென்பொறியாளன். ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பெரிய பதவியில் பணி செய்யும் இருபத்தியெட்டு வயது இளைஞன்.

அவன் தன் பெற்றோருக்கு ஒரே மகன். அவர்களுடைய குடும்பம் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து கடின உழைப்பால் நல்ல நிலைக்கு உயர்ந்த குடும்பம்.

அவனுடைய அப்பா மகேஸ்வரன் மத்திய அரசுத் துறையில் சாதாரண எழுத்தராக (Clerk) இருந்து தன் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி ஆணையராக (Commissioner) உயர்ந்து ஓய்வு பெற்றவர்.

அவனுடைய அம்மா புவனேஸ்வரி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாகச் சேர்ந்து படிப்படியாக முன்னேறி இப்போது ஒரு பெண்கள் கல்லூரியின் தலைமையாசிரியையாக பணி செய்து வருகிறார்.

முல்லை ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண். அவளுடைய அம்மா, காவேரி இல்லத்தரசி. அப்பா, பரசுராமன் ஒரு கார் மெக்கானிக். தனியாகக் கடை வைத்திருக்கிறார்.

ரொம்ப ஏழைக் குடும்பம் என்றில்லை. அதற்காக நினைத்ததை நினைத்த நேரத்தில் எல்லாம் வாங்க முடியாது. தினசரி வரும் வருமானத்தில் மூவரும் வயிறு வாடாமல் உண்ண முடிகிறது. தன் கணவரின் சம்பாத்தியத்தில் காவேரி தன்னுடைய சிக்கனத்தால் கொஞ்சமாக சேமிக்கவும் செய்வதால் குடும்பம் கொஞ்சம் நிமிர்ந்திருக்கிறது எனலாம்.

முல்லை பிறக்கும்போதே ஊனமுற்றவள் இல்லை. நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்தவள்தான். நான்காம் வகுப்பு வரை ஓடியாடி விளையாடிய சுட்டிப் பெண்தான்.

நான்காம் வகுப்பு ஆண்டுத் தேர்வுகள் முடிந்ததும் விடுமுறைக்கு தன் பெற்றோருடன் கிராமத்திலிருக்கும் தன் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தாள். அக்கம் பக்கத்து வீட்டுப் பிள்ளைகளுடன் முல்லையும் விளையாடிக் கொண்டிருந்தாள்.

பாட்டி வீட்டு பக்கத்திலிருந்த காலி மனையில்தான் எல்லாரும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அங்கே புல் தரையில் குட்டிக் குட்டியாக வெள்ளை நிறப் பூக்களைப் பார்த்தவள் அதை ஆசை ஆசையாய் பறித்து தன் கௌனில் இருக்கும் பாக்கெட்டில் போட்டுக் கொண்டாள்.

"ஏய் முல்ல! இப்ப நீதான் பிடிக்கணும்.. வா!" என்று பக்கத்து வீட்டு பையனின் அழைப்பு இவள் காதில் விழவேயில்லை.

"அவங்க ஊர்ல இந்த பூல்லாம் பாக்கவே முடியாது.. அதான் அவ இந்தப் பூவப் போய் அதிசயமா பாத்துகிட்டிருக்கா.. அவள விடு டா.. நாம விளையாடலாம்.." என்று எதிர் வீட்டு சுட்டிப் பெண் சொல்ல முல்லையை விட்டு விட்டு மற்றவர்கள் தங்கள் விளையாட்டைத் தொடர்ந்தனர்.

முல்லை பூக்களைத் தேடிப் பறிக்கும் சுவாரசியத்தில் வீட்டை விட்டு வெகு தூரம் போய்விட்டாள்.

வீடு திரும்பும் வழியும் தெரியவில்லை. அழுது கொண்டே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தவள் வேகமாக லாரி ஒன்று வந்ததை கவனிக்கவில்லை. மிகவும் அருகில் வந்த பிறகே கவனித்ததால் பயத்தில் கீழே விழுந்துவிட்டாள்.

இருட்டத் தொடங்கிவிட்டதால், நடந்து வந்து கொண்டிருந்த சிறுமியை அந்த லாரி ஓட்டுனரும் கவனிக்கவில்லை. மிகவும் கிட்டத்தில் வந்த பிறகே கவனித்ததால் அவர் வண்டியை கட்டுக்குள் கொண்டு வருவதற்குள், கீழே விழுந்த முல்லையின் கால்கள் மீது லாரி ஏறிவிட்டது.

சரியான நேரத்தில் அவர் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தியதால் அவளுடைய கால்கள் முழுதும் பாழாகாமல் தப்பித்தன.

அவளுடைய அலறல் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினரும் அவளைத் தேடி வந்த அவளுடைய பெற்றோரும் சேர்ந்து அவளை மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவளைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவளுடைய இடது காலை மட்டும்தான் காப்பாற்ற முடியும் என்று கூறிவிட்டனர். அதன்படி அவள் வலது காலை இழந்த ஊனமுற்ற சிறுமி ஆகிப்போனாள்.

அவளுடைய பெற்றோர் அவளை வெறுத்து ஒதுக்காமல் அவள் மேல் அபரிமிதமான அன்பைப் பொழிந்து அவளைச் சீராட்டி பாராட்டி வளர்த்தனர்.

அவளுக்கு சொத்து என்று பொன்னும் பொருளும் சேர்த்து வைத்தால் அது என்றும் அவளுடைய உதவிக்கு வராது என்பதை உணர்ந்தவர்களாய் அவளுக்கு சிறப்பான கல்வியை அளிக்க அரும்பாடுபட்டனர்.

அவளும் தன் தாய் தந்தையின் கடின உழைப்பைப் புரிந்து கொண்டவளாய் நன்றாகப் படித்தாள்.

அவள் ஆறாவது படிக்கும் போது அவளுடைய நிலையைப் பார்த்த அவளுடைய ஆசிரியை,

"நீங்க இவள எவ்ளோ கஷ்டப்பட்டு படிக்க வெச்சாலும், இவ என்னதான் நல்லா படிச்சாலும் இவ பெரியவளானதும், இவளோட இந்த ஊனத்தை காட்டி வேலைக்கு எடுத்துக்க மாட்டாங்க; இவள கட்டிக்கவும் எவனும் வர மாட்டான்.. அத சரி செய்யணும்னா இவ எல்லாத்திலயும் பெஸ்ட்டா இருக்கணும்.. இவள எந்த வகையிலயும் யாரும் ஒதுக்காம இருக்க இவ தன்னைத் தானே சிறப்பானவன்னு நிரூபிக்கற மாதிரி நிறைய கத்து குடுங்க.. பாட்டு மாதிரி எதாவது ஸ்பெஷலா கத்து குடுங்க.." என்று அறிவுரை சொன்னார்.

அறிவுரை கூறி அதோடு விட்டுவிடால் தானே அதற்கான முயற்சியும் எடுத்து அவளைத் தன் செலவிலேயே வாய்ப்பாட்டு வகுப்பிலும் சேர்த்துவிட்டார்.

அதன்படி முல்லை பள்ளிப் படிப்புடன் கர்நாடக இசையும் கற்றுக் கொண்டாள். அத்துடன் தன் சுய விருப்பமாய் ஓவியமும் சுயமாகக் கற்றுக் கொண்டாள்.

அவளுடைய ஒரு காலை பிடுக்கிக் கொண்ட இறைவன், அதற்கு ஈடாக, படிப்பு, இசை, ஓவியம் என்று மூன்று மடங்காக திருப்பிக் கொடுத்தானோ என்று அனைவரும் வியக்கும்படியாக வளர்ந்தாள்.

வருமானம் கொஞ்சம் இழுபறியாய் இருந்தாலும் முல்லைக்குத் தேவையானவை தேவையான நேரத்தில் கிடைக்க வேண்டும் என்பதில் அவளுடைய பெற்றோர் கவனமாகவே இருந்தார்கள்.

அதனால் முல்லைக்கு எப்போதும் அன்புக்கு குறைவே இருக்கவில்லை.

பள்ளியில் முதலாவது மாணவியாக வந்து பள்ளிப்படிப்பை முடித்தவள் தன் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடனேயே கல்லூரிக்குள் நுழைந்தாள்.

அவள் பயின்ற கல்லூரியில் திலீபன் படிக்கவில்லைதான். ஆனால் அவளுடைய கல்லூரி வாழ்க்கையில்தான் அவள் திலீபனைச் சந்தித்தாள்.

அவர்களுடைய சந்திப்பே அலாதியானது.

கல்லூரியில் ஆண்டுதோறும் நடக்கும் கலாச்சார மற்றும் விளையாட்டு நிகழ்வில் பங்கு கொள்வதற்காக பல்வேறு கல்லூரிகளிலிருந்து வந்திருந்த மாணவிகள் கூட்டத்தில்தான் திலீபன் முல்லையை முதன்முதலில் பார்த்தான்.

ஒரு வாரம் தொடர்ந்து நடக்கும் அந்த நிகழ்வில், முதல் நாள் நிகழ்ச்சிகளின் தொடக்கமாய் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்க எல்லா மாணவ மாணவிகளும் எழுந்து நிற்க முல்லை மட்டும் அமர்ந்தே இருந்ததைப் பார்த்து திலீபனுக்கு கோபமாக வந்தது.

அவளுடைய குண்டு உருவம் அவனுக்கு அருவருப்பைத் தந்தது.

'என்ன இந்த குண்டச்சி! தமிழ்த்தாய்க்கு கூட மரியாதை குடுக்க மாட்றா.. இவல்லாம் படிச்சி என்ன கிழிக்க போறா?' என்று தனக்குள் கோபமாய் நினைத்துக் கொண்டான்.

ஆனால் அதன் பிறகு அவன் அவளை மறந்தும் போனான்.

முல்லை, கலை நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கெடுத்துக் கொண்டதாலும், திலீபன் கலை நிகழ்ச்சிகளின் பக்கம் வராமல் இருந்ததாலும், முல்லை ஒரு மாற்றுத் திறனாளி என்பதை அவன் அறிந்து கொள்ளவில்லை.

நான்காம் நாள் மதிய உணவு இடைவேளையில் கல்லூரியின் விளையாட்டுத் திடலில் கபடிப் போட்டிக்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.

கல்லூரி மாணவர் தலைவன் என்ற முறையில் அவனும் அவனுடைய நண்பர்களும் எல்லா வேலைகளையும் கவனித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது மாணவிகளின் கழிப்பறையிலிருந்து பதற்றத்துடன் வேறு கல்லூரி மாணவி ஒருத்தி ஓடி வந்தாள்.

"தேவ்! தேவ்! பெரிய சிக்கல் ஆகிருச்சு! யாராவது வாங்களேன்!" என்று தன் கல்லூரி நண்பனை அழைத்தாள் அவள்.

"என்னாச்சு ஷில்பா?" என்று அந்த தேவ் கேட்க, அவள் என்ன சொன்னாளோ, தேவுக்கும் அவளுடைய பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனாலும் அவன் அவளை சமாதானம் செய்தான்.

"ஓகே! ஓகே! டோன் பேனிக்! நீ போய் ப்ரொஃபசர்ஸ்ட்ட சொல்லு! ஐல் சீக் ஹெல்ப் ஃப்ரம் பாய்ஸ்!" என்றபடி ஓடினான்.

"சீக்ரம் தேவ்!" என்றபடி ஷீலா அந்தக் கல்லூரியின் பேராசிரியர்களின் அறையைத் தேடிக் கொண்டு ஓடினாள்.

சில நிமிடங்களில் அந்த மாணவிகளின் கழிப்பறை முன் பேராசிரியைகள் மற்றும் மாணவிகளின் பெருங் கூட்டம் கூடி விட்டது.

மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சங்கடத்துடன் சற்று தள்ளி நின்று கொண்டிருந்தனர்.

அந்தக் கல்லூரியின் மாணவர் தலைவன் என்ற முறையில் திலீபன் தேவிடம் என்னவென்று விசாரித்தான்.

"ப்ரோ! எங்க காலேஜ் பொண்ணு, டிஃபரண்ட்லி ஏபிள்ட்! இங்க ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ண உள்ள போயிருக்கா.. பட் அவளோட வீல் சேர் தரையில போற ரெண்டு பைப்புக்கு நடுல சிக்கிகிச்சு.. அவ அத நகர்த்த ட்ரை பண்றப்ப அவளோட ஸ்கர்ட் அவளோட வீல் சேர்ல சிக்கிகிச்சு.." என்று கூறினான்.

"அவளோட ஸ்கர்ட் மாட்டிக்காம இருந்தா அவள தூக்கிட்டு வந்துடலாம்.. அப்றமா வீல் சேரை மெதுவா எடுக்கலாம்.. இப்ப வீல் சேரும் மாட்டி கூடவே அவளும் மாட்டி.. என்ன செய்யறதுன்னு புரியல.." என்றாள் ஷீலா.

"ஸ்கர்ட் கிழிஞ்சா பரவால்லன்னு அவள முதல்ல வெளிய தூக்கிட்டு வந்துடுங்க.." என்றார் கல்லூரி முதல்வர்.

"அதையும் ட்ரை பண்றோம் சார்.. ஆனா அவ கொஞ்சம் குண்டா இருக்கறதால எங்களால அவள தூக்க முடியல.." என்று கூறினார்கள் மாணவிகள்.

"பைப் போனா போகுது.. உடைச்சிடாலாம்ன்னு பார்த்தா அதுவும் சரி வரும்னு தோணல சார்.. அது தண்ணி பைப்பா இல்ல ட்ரெய்னேஜ் பைப்பான்னு வேற தெரியல.. ஒரு வேளை ட்ரெய்னேஜ் பைப்ன்னா அப்றம் ஒரு வாரத்துக்கு பாத்ரூம் யூஸ் பண்ண முடியாம போய்டும்.." என்றார் ஒரு பேராசிரியை.

ஆளாளுக்கு ஒரு ஆலோசனை கூறினர். ஆனால் எதுவும் சரிப்படவில்லை.

"சார்! நாங்க உள்ள போய் பாக்கறோம் சார்!" என்றான் திலீபன்.

"என்ன திலீபன்? லேடீஸ் டாய்லெட் உள்ள நீங்க எப்டி போவீங்க?" என்று கண்டிப்புடன் கேட்டார் கல்லூரி முதல்வர்.

"சார்! எங்க வீட்டுலயும் லேடீஸ் இருக்காங்க.. எனக்கு ரெண்டு சிஸ்டர்ஸ் இருக்காங்க.. எங்கம்மா பாட்டி பெரிம்மா சித்தின்னு நாங்க கூட்டு குடும்பமா ஒரே வீட்டுல வாழுறோம்.. எனக்கு இதெல்லாம் புதுசில்ல.. நா தப்பானவனும் இல்ல.." என்று கூறிக் கொண்டே சட்டென்று கழிப்பறைக்குள் நுழைந்தான். அவனுடன் அவனுடைய நண்பர்கள் இருவரும் சென்றனர்.

உள்ளே முல்லையைக் கண்டதும் அவன் துணுக்குற்றான்.

'ஓ! இந்த குண்டச்சியா? இவளால நடக்க முடியாதா? அதான் ப்ரேயர் சாங் போது இவ உக்கார்ந்திருந்தாளா?' என்று தனக்குள் நினைத்தபடியே அவளருகில் வந்தான்.

கிளிப்பச்சை நிறத்தில் பட்டுப் பாவாடையும் அதே நிறத்தில் சில்க் காட்டனில் டிசைனர் வேலைப்பாடு செய்த ரவிக்கையும் சிவப்பு நிறத்தில் தாவணியும் அணிந்து கொண்டு எளிமையான அலங்காரத்தில் ஆனால் திருவிழாவில் காணாமல் போன குழந்தையாய் நடுங்கியபடி அமர்ந்திருந்தவளைக் கண்ட அவன் மனம் ஒரு நிமிடம் அலை பாயவே செய்தது.

ஏற்கனவே முல்லை மனவுளைச்சலில் இருக்க இப்போது மாணவர்கள் உள்ளே வந்ததும் தான் ஒரு காட்சிப் பொருளாய் ஆகிவிட்டோமே என்ற எண்ணத்தில் சங்கடமாக உணர்ந்தாள்.

யாரையும் நிமிர்ந்து பார்க்க மனமற்று தலை குனிந்தபடியே அமர்ந்திருந்தாள்.

அவளருகே வந்த திலீபன் அவளுடைய சக்கர நாற்காலியை நகர்த்த முயன்றான். அது நகரவில்லை. அதன் சக்கரங்கள் தரையில் பதிக்கப்பட்டிருந்த இரண்டு குழாய்க்களுக்கு நடுவே நன்றாக மாட்டிக் கொண்டிருந்தது.

முல்லையின் பெரிய பாவாடை அந்த சக்கரத்தில் நன்றாக சிக்கிக் கொண்டிருந்தது.

என்ன செய்வது என்று அவன் கவனமாக ஆராய்ந்தான்.

குழாய்களுக்கு நடுவே சிக்கியிருந்த சக்கரத்தில் அவளுடைய பாவாடை சிக்கியிருக்கவில்லை. அது அடுத்த பக்கத்து சக்கரத்தில்தான் சிக்கியிருந்தது என்பது தெரிந்தது.

"டேய்! ஒரு வீல்தான் பைப்ல மாட்டியிருக்கு! இவங்க ஸ்கர்ட் அந்த பக்கத்திலதான் மாட்டியிருக்கு.. ஈசியா எடுத்திடலாம்! வீல் சேரை கெட்டியா பிடிங்க!" என்று கூறிக் கொண்டே, அந்த சக்கர நாற்காலியை ஒரு பக்கமாக சரித்தான்.

அவனுடைய நண்பர்கள் அவன் சொன்னபடியே அந்த சக்கர நாற்காலியை கவனமாகப் பிடித்துக் கொண்டார்கள்.

"என்ன பண்றீங்க?" என்று முல்லை அலறினாள்.

"பயப்படாதீங்க! ஜஸ்ட் டூ மினிட்ஸ்!" என்று சொன்ன திலீபன்,

"ஃப்ரண்ட்ஸ்! நா இந்த வீலை ஆப்போசிட் சைட்ல சுத்தறேன்.. நீங்க இவங்க ஸ்கர்ட்டை கேர்ஃபுல்லா எடுங்க!" என்று சொல்லிக் கொண்டே பாவாடை சிக்கியிருந்த சக்கரத்தை எதிர்புறமாகச் சுற்ற முல்லையின் தோழிகள் அவளுடைய பாவாடையை மெதுவாக சக்கரத்திலிருந்து விடுவித்தனர்.

அவன் சக்கர நாற்காலியை சரியாக வைக்கச் சொன்னான்.

"ஒரு சேர் (chair) கொண்டு வாங்க!" என்று அவன் கேட்க, மற்ற மாணவர்களில் ஒருவன் ஒரு நாற்காலி கொண்டு வந்தான்.

"மிஸ்! மெதுவா இந்த சேருக்கு மாறிடறீங்களா?" என்று அவன் முல்லையைப் பார்த்துக் கேட்க, அவளும் தன் தோழிகளின் துணையுடன் தன்னுடைய சக்கர நாற்காலியிலிருந்து இந்த சாதாரண நாற்காலிக்கு மாறினாள்.

அவனும் அவனுடைய நண்பர்களும் சேர்ந்து சக்கர நாற்காலியை வெளியே எடுத்தனர்.

அவள் அமர்ந்திருந்ததால் ஒரு அழுத்தம் ஏற்பட்டு குழாய்களுக்கு நடுவே நன்றாக சிக்கியிருந்த நாற்காலி இப்போது அவள் இல்லாததால் எளிதாக வெளியே வந்தது.

அவளை மீட்டு வெளியில் அழைத்து வந்தனர்.

அவளை வெளியே அழைத்து வரும் முன் திலீபன் அவளிடம்,

"ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணினீங்களா இல்லையா?" என்று கேட்டது அவளை நெகிழச் செய்தது.

உண்மையில் அவள் கழிப்பறையில் நுழைந்ததுமே அவளுடைய சக்கர நாற்காலி சிக்கிக் கொண்டுவிட்டதால் அவள் இன்னும் அதை பயன்படுத்தாமல்தான் இருந்தாள். அதன் தவிப்பு வேறு அவளை ஒரு பக்கம் சங்கடப்படுத்திக் கொண்டிருந்தது.

அவனை வியப்புடன் நிமிர்ந்து பார்த்தாள்.

"இல்லங்க.. உங்க வீல் சேர் உள்ள போற டைரக்ஷன்ல இருக்கு.. அதான் கேட்டேன்.." என்று அவன் சொல்லவும் அவள் ஒன்றும் சொல்லாமல் தலையை வேறு பக்கம் திரும்பிக் கொண்டாள்.

அன்றைய நிகழ்வுக்குப் பின் அவள் அவனுடைய கல்லூரிக்குச் செல்லவில்லை.

அவள் பங்கெடு்துக் கொண்டிருந்த பாட்டுப் போட்டி கவிதைப் போட்டி பேச்சுப் போட்டி எல்லாவற்றிலும் அவள்தான் முதல் பரிசு வாங்கியிருந்தாள். அதை பெற்றுக் கொள்ளவும் அவள் வரவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்கவில்லையே தவிர இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்தபடியேதான் இருந்தனர்.

அதனாலேயே இருவரும் விரைவில் சந்தித்தனர்.

அந்த சந்திப்பு!


- விரைவில்…
 

Apsareezbeena loganathan

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
466
திலீபன் முல்லை..... அருமை 👏👏👏👍🏻👍🏻💐💐
 
Top