• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Episode -02

Alamu Giri

Vaigai - Avid Readers (Novel Explorer)
Oct 15, 2024
21
26
13
Chennai
என் துணைக்கு நீதான் 2

சிவசங்கரனிடம் ஏராளமான சொத்துக்கள் இருந்தும் ஆடம்பரமான சீர் வரிசைகள் எதுவும் அவளுக்கு தரவில்லை.

கமல் இதனை எதிர் பார்க்கவில்லை தான். ஆனால் சிவ சங்கரனும் தாமரையும் கிட்டத்தட்ட அரை கோடி விலை மதிப்பிலான ஒரு வீட்டை சென்னையில் மண மக்களுக்காக வாங்கி கொடுத்தது இன்றுவரை கமலுக்கும் அற்புதாவிற்கும் தெரியாது .உபயம் லலிதா.

இந்த வீட்டின் பத்திரம் லலிதாவிடம் தான் கொடுத்தனர். லலிதாவும் அதனை மகன் மருமகளிடம் கூறவில்லை.

புது வீட்டில் குடியேறியதற்குமே பெற்றவர் என்ற கடமைக்காக கூட சிவசங்கரன் வந்து நிற்கவில்லை.


அற்புதாவிற்கும் ஒரு கட்டத்திற்கு மேல் வெறுத்துப் போனது. அவ்வப்போது தம்பிகளின் நினைவில் கண்கலங்குவது உண்டு.

கலங்கும் போதெல்லாம் ரிஷியிடம் மட்டும் பேச பழகி இருந்தாள் .அவனும் அக்காவுக்காக தன் நேரத்தை விரும்பியே செலவழித்தான்.


லலிதாவை சமாளிப்பது ஒன்றும் அத்தனை எளிதாக இல்லை அற்புதவிற்கு. அவரின் அதட்டல் உருட்டல் எல்லாம் கமல் பள்ளிக்குச் சென்ற பிறகுதான் இருக்கும்.

அரசாங்க உத்தியோகத்தில் இருக்கும் தன் மகன் கமலுக்கு எல்லாம் இருந்தும் ஒன்றுமில்லாமல் வந்த அற்புதாவா? என்ற ஒரு கோபம் லலிதாவிடம் இருந்து கொண்டே இருந்தது.

அவளைத் தாழ்த்தி பேசி பேசியே அவளை ஒரு மறுத்த நிலைக்கு கொண்டு சென்ற பெருமை லலித்தாவையே சேரும்.

ஆனால் இதற்கெல்லாம் ஆறுதலாய் இருப்பது கமலின் காதலும் பாசமும் தான். அவனின் அணைப்பு ஒன்றே அவளுக்கு வாழ்வின் நிறைவை உணர்த்தும்.


திருமணமான மூன்றாம் மாதத்தில் அற்புதா கருவுற்றாள். அதற்கும் பெரிதாய் தகப்பனார் வீட்டு பக்கம் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை.


அற்புதா தானாகவே இயல்பை ஏற்க பழகினாள். ஆனால் மருத்துவ படிப்பின் ஆரம்பத்திலிருந்து ரிஷி மட்டும் சென்னை வந்து அக்காவை அடிக்கடி பார்த்துவிட்டுப் போனான்.

அற்புதாவின் 5ஆம் மாதத்தில் ஒரு சுபயோக தினத்தில் லலிதா பாத்ரூமில் வழுக்கி விழுந்து இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டு இனி காலம் முழுமைக்கும் படுத்த படுக்கை என்றே ஆகிப் போக,


பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் அற்புதாவையும், அவள் கருவையும் கொண்டாட ஆளின்றி போனார்கள்.


இதில் கமலக்கண்ணன் கூட அடக்கம் தான்.அவனுக்கு தாயின் சுகமின்மையே முன்னிலையில் இருந்ததால் அவன் அற்புதாவை கவனிக்க தவறினான்.


அவன் காதலித்த அற்புதா அவனைக் கண்டாலே கண்களில் காதல் மின்ன ஒரு சுறுசுறுப்பு அடைவாள்.

ஆனால் இப்போது இருக்கும் அற்புதவிற்கு சிரிப்பு மறந்து, மசக்கை படுத்தியது. அதோடு மாமியாரின் சகலத்தையும் அவளே கவனிக்க வேண்டிய பொறுப்பு.


படுத்த படுக்கையிலே மலம், சிறுநீர் கழிக்கும் லலிதாவிற்கு, சுய கழிவிரக்கத்தால் வரும் மொத்த மன அழுத்தத்தையும் சமயங்களில் இறக்கி வைக்கும் இடமாக அமைவது அற்புதா தான்.



வளைகாப்பு கூட முறையாக நடக்கவில்லை. பரஞ்சோதியின் மனைவிதான் வற்புறுத்தி புட்டுலூர் மாரியம்மன் கோவிலில் சிறிய அளவில் வளைகாப்பு நடத்தினாள்.

அதற்கும் லலிதாவிடம் ஆயிரம் முணுமுணுப்பு. தான் படுத்த படுக்கையில் இருக்க உங்களுக்கு கொண்டாட்டமா என்று ஒருவாரம் மகன்கள் இருவரிடமும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டார்.


பிள்ளை பேற்றின் போது மொத்தமாக மாமியாரை மாலதியும், அற்புதாவை கமலும் பார்த்துக் கொண்டனர்.

அந்த விதத்தில் கமலை ஒரு குறை கூற முடியாது. அத்தனை நேர்த்தியாக பார்த்துக் கொண்டான் மனைவியை.

சுகப் பிரசவத்தில் அற்புதா மூத்தவள் திவ்யாவை பெற்றெடுத்த போது தாய் வீட்டு பக்கம் இருந்து வந்து சென்றவன் ரிஷி மட்டுமே.

ஏதோ அவனுக்கு தெரிந்த அளவில் பிள்ளைக்கு ஒரு சவரன் கழுத்து சங்கிலியும் அரைஞாண் கொடியும் வாங்கி கொடுத்து பார்த்து விட்டு சென்றான்.

அடுத்த மூன்றாம் ஆண்டில் பிறந்தவள் தான் ரம்யா. இப்போது குட்டிகள் இரண்டும் ஐந்தாம் வகுப்பிலும் மூன்றாம் வகுப்பிலும் படிக்கின்றனர்.

தன் நினைவில் மூழ்கி நின்றவள் சுயநினைவடைந்து அந்த செங்கதிரவனின் அழகில் மயங்கி நிற்க,


லலிதாவின் “ஏய் அற்புதா” என்ற குரல் ஓங்கி ஒலித்தது அவ்வீட்டில்.

“ஆங் இதோ வரேன் அத்தை” என்ற அற்புதாவின் குரல் எப்போதும் போல பணிவுடன் வந்தது.

அவரை சேரில் அமர்த்தி, கழிவறை கொண்டு சென்று, அவருக்கு தேவையானவற்றை செய்து, லலிதாவை குளிக்க வைத்து, அவருக்கு உடை மாற்றி, தலை சீவி, படுக்கையை தட்டி சரி செய்து, அவரை ஒரு குழந்தை போல் தூக்கி படுக்க வைத்து விட்டு நிமிரும் பொழுது குடித்த காப்பி எங்கோ போயிற்று .


கடிகாரம் மணி ஏழு என்று காட்ட இன்னும் தலை கிறுகிறுவென்று வந்தது. ஏனென்றால் சின்ன குட்டியை எழுப்பி அவளை கிளப்புவதற்குள் உயிர்ப்போய் உயிர் வந்துவிடும்.


அற்புதா “அத்தை இருங்க டீ கொண்டு வரேன்” என்று தொலைக்காட்சியை ஓட விட்டு ஸ்கந்தகுரு கவசத்தை ஒலிக்க விட்டு சமையல் அறை நோக்கி ஓடலானாள்.


அடுப்பில் இட்லி ஊற்றி வைத்து விட்டு, மாமியாருக்கு டீயை கொடுத்தவள், படுக்கை அறையில் வந்து சின்ன மகளை எழுப்ப தொடங்க,

அன்னையின் சத்தத்தில் பெரியவள் தன்னால் எழுந்து விட்டாள். அவள் கமலின் அச்சு எந்தவித தொல்லையும் தர மாட்டாள்.

எழுந்து அரை மணி நேரம் படித்துவிட்டு, அடுத்து அவளின் வேலைகளை செய்ய தொடங்க, பிள்ளைகள் சத்தத்தில் கமலும் எழுந்து அமர்ந்தான்.


எழுந்தவன் தன் காலை வேலைகளை முடித்துக்கொண்டு டீயை எடுத்துக் கொண்டு அன்னையின் அறைக்கு சென்று விட்டான்.


இது அவர்களுக்கான நேரம். என்ன தான் பேசுவார்கள் என்பது தாய் பிள்ளை இருவரும் அறிந்த ரகசியம்.


இந்த நேரம் மிகவும் எரிச்சலாக இருக்கும் அற்புதாவிற்கு.

ஆனாலும் முகத்தில் காட்டாமல் கஜினி முகமது போல தொடர்ந்து சமையல் அறைக்கும் படுக்கை அறைக்கும் நடந்து கொண்டிருந்தவள்,

ஒரு கட்டத்தில் “ரம்யா எழுந்துக்கோ” என்று சொல்லிக் கொண்டே பட்டென்று மகளின் பின்னால் ஒரு அடியை போட,


அந்த சின்ன சிட்டு கத்தி ஊரை கூட்டிக் கொண்டு எழுந்து அமர்ந்தாள்.

பிள்ளையின் அழுகை சத்தத்தில் கூட அம்மா பிள்ளையின் கூட்டணி கலையவில்லை.

அதற்குள் பிள்ளையை அடித்தவளே வாரி இடுப்பில் இருத்திக்கொண்டு சமாதானம் செய்து மதிய சமையலை முடித்தாள்.

கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் சாப்பாட்டு பைகளை கட்டி வைத்தாள். இதற்குள் மணி எட்டாக,


இதற்கு மேலும் முடியாது என்று நினைத்தவள் “திவிப்பா வாங்க சின்ன குட்டியை குளிக்க வைங்க” என்று விட்டு பெரியவளுக்கு தலையைப் பின்ன ஆரம்பித்து விட்டாள்.

கமலின் ஆகப்பெரிய உதவி சின்னவளை குளிக்க வைப்பது தான். அவளை குளிக்க வைத்து விட்டு அவன் குளித்துவிட்டு வரும்போது பிள்ளைகளுக்கு காலை உணவு ஊட்டி கொண்டு இருந்தாள்,

“திவிப்பா பணம் வேணும் 3000 கீழ் வீட்டில் இருக்கிறவங்க பாப்பாக்கு பிறந்தநாள். வந்து கூப்பிட்டு போய் இருக்காங்க. சாயந்திரம் நானும் பார்ப்பாங்களும் போயிட்டு வரோம். பக்கத்துல இருக்க பார்ட்டி ஹால்ல தான் பங்க்ஷன்”


என்றவள் பதிலுக்காக அவன் முகம் பார்க்க, கமல் அவள் முகம் பார்க்காமல் “அம்மாகிட்ட கேட்டு வாங்கிக்கோ அற்புதா” என்று விட்டு காலை உணவை தொடர

அவளுக்கு பெரிதாக பணத் தேவைகள் இல்லை என்றாலும், அத்தியாவசியத்திற்கு கூட மாமியாரிடம் போய் நிற்க வேண்டிய கட்டாயம்.



கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு வெறுத்து தான் போனது. 10 வருடங்களாக படுத்த படுக்கையில் இருக்கும் மாமியாரிடம் எல்லாவற்றிற்கும் போய் நிற்க அவள் விரும்பவே இல்லை.


ஆனாலும் எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டாள். கணவனையும் பிள்ளைகளையும் அனுப்பி வைத்துவிட்டு மாமியாருக்கு உணவை ஊட்டி விட்டு, போர்க்களம் போல் மாறி இருந்த வீட்டை ஒழுங்கு படுத்தி விட்டு அவள் குளித்து காலை உணவு உண்ணும் பொழுது மதியம் பொழுது வந்திருந்தது.



மாமியாரின் அறையிலேயே ஏசியை போட்டுவிட்டு, இரண்டு மணிக்கு அலாரத்தை வைத்துவிட்டு பாயை விரித்து படுத்து விட்டாள்.


ஏனோ இந்த நேர தூக்கத்திற்கு லலிதா எதுவும் சொல்வதில்லை அற்புதாவை.


கடந்த பத்து வருடங்களில் மாமியார் அறையின் டெட்டால் வாசமும் மருந்து வாசமும் அவளுக்கு பழகி இருந்தது.


வேலை செய்த உடல் அசதியில் படுத்த பத்தாவது நிமிடம் தூக்கத்தை தழுவி இருந்தால் அற்புதா….




அண்ணா நகரில் அந்த பிரம்மாண்டமான வீட்டில் காலை 5 மணி. 5:00 மணிக்கு அடித்த அலாரம் சத்தத்தில் பரபரப்பாக எழுந்த அமர்ந்தாள். மதுபாலா என்னும் மது.

இது அவளின் வழக்கம்தான் கடந்த சில ஆண்டுகளில் பழகி இருந்தது.


பரபரவென்று எழுந்தவள், தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு தலைமுடியை வாரி போனிடைல் போட்டுக்கொண்டு, இரவு உடையிலிருந்து நடை பயிற்சிக்கு செல்வதற்கான உடைகளுக்கு தயாராகி அன்னையின் அறையை எட்டிப் பார்த்தாள் .

அன்னை பரிதா நிர்மலமான முகத்துடன் உறங்கிக் கொண்டிருந்தார். தன் விரல்களை உதடுகளில் ஒற்றி காற்றிலே ஒரு பறக்கும் முத்தத்தை அனுப்பிவிட்டு “லவ் யூ ம்மீமீ”


என்று விட்டு வாயிலை நோக்கி நடக்கலானாள்.


தன் வீட்டிலிருந்து பத்து நிமிட நடை தூரத்தில் இருந்த பார்க்கிற்க்கு வந்து உடலை வளைத்து நெளித்து நிற்கவும் அவளின் தந்தை கேசவமூர்த்தி வரவும் சரியாக இருந்தது.


தந்தையை பார்த்ததும் பெண்ணின் முகம் பூவாய் மறந்து விட்டது. “டாடி” என்று அவரின் தோளோடு அணைந்து விடுபட்டவள் “குட் மார்னிங் டாடி” என்க

கேசவ மூர்த்தியும் பெண்ணவளின் அன்பில் நெகிழ்ந்து “ஹாப்பி மார்னிங் மதுமா” என்று விட்டு


பெண்ணை பார்த்தவரால் வழக்கம்போல் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

என் தாய் இவள். அவரின் மறு உருவம். என்னுடனே இருக்க பிறந்தவள். கேசவ மூர்த்தி அன்னையை அப்படியே பிரதிபலிக்கும் தோற்றத்துடன் இருப்பாள் மது.

மதுவிற்கு 22 வயது. அழகான குண்டு கன்னங்களும் துருதுறுவென நிமிடத்திற்கு ஆயிரம் இடங்களை பார்க்கும் அந்த கண்களும் பார்க்கவே ஒரு முயல் குட்டி மாதிரியான ஒரு புசுபுசு தோற்றத்தில் இருக்கும் வளர்ந்த குழந்தை.


அவளின் மொத்த உலகமும் அவளின் பெற்றோறிடத்திலேயே இருக்கும்.

தந்தையும் மகளும் வேறு வேறு வீட்டில் வசிப்பதற்கான காரணமும் உண்டு. கேசவமூர்த்திக்கு வேறொரு குடும்பமும் உள்ளது.



கேசவமூர்த்தி முதல் மனைவி சந்தன லட்சுமி அவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் மூத்தவன் சஞ்சய் 28. அவன் மனைவி பூர்விதா. கல்லூரியில் படிக்கும் போதே சஞ்சையும் பூர்வியும் காதலிக்க,


சஞ்சய் அவன் அப்பாவுடன் தொழில்களை மேற்பார்வை பார்க்கத் தொடங்கும் போது கேசவ மூர்த்தி திருமணம் முடித்து வைத்தார். சஞ்சய்க்கு அமுலு என்ற ஒரு பெண் பிள்ளை இருக்கிறது.

இளையவன் மாணவ். இன்னும் திருமணம் முடியவில்லை. பெண் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


சிமெண்ட் கம்பிகள் என்று டீலர்ஷிப் எடுத்து நடத்தியவர் அதில் கரை கண்ட லாபம் பார்க்க,

பிள்ளைகளின் தலை எடுப்புக்கு பிறகு கே எம் பில்டர்ஸ் என்று பில்டிங் கன்ஸ்ட்ரக்ஷன் எடுத்து நடத்த தொடங்கினார்.


லட்சங்களில் வந்த லாபம் கோடிகளில் வர அவருக்கு எதிலும் ஏறுமுகம் தான்.


கேசவமூர்த்தியின் 25வது வயதில் சென்னையில் ஏதோ ஒரு மூலையில் அவரிடம் கொள்முதல் செய்த கடைக்கு வசூல் செய்ய போகும்போது பரிதாவை பார்த்தார்.


முதல் பார்வையிலே அவரின் மை விழியில் மையல் கொண்டு காதலில் விழ,


கடையில் தந்தைக்கு கணக்கு வழக்கு பார்க்க உதவிக்கு வந்த பரிதாவும் அவரின் பால் அன்பு கொள்ள,


இது தெரிந்த பரிதாவின் தந்தை அடுத்த ஓரிரு மாதங்களில் பரிதாவிற்கு திருமணம் ஏற்பாடு செய்துவிட்டார்.

இதை அறிந்த கேசவ மூர்த்தி தன் அன்னை தனபாக்கியத்தோடு சென்று பரிதாவின் தந்தையுடன் எவ்வளவோ பேசியும்,

வேற்று மதத்தில் மகளை மணமுடித்துக் கொடுக்க விரும்பாதவர், அவசரகதியில் மாப்பிள்ளை பற்றி சரியாக கூட விசாரிக்காமல் பெண்ணை மணமுடித்து கொடுத்தார்.


விளைவு அழகு கொடியாக இருந்த பரிதா அடுத்த ஆறு வருடங்களில் ஆங்காங்கே உடலில் சிகரெட் வடுக்கலாலும் அடித்து கண்டறிய தடகளோடும் தன் திருமண வாழ்வை முடித்துக் கொண்டு மொத்தமாக தாய் வீடு வர,


பெண்ணை பெற்றவர்கள் இந்த திருமண வாழ்க்கையை ஒரேடியாக முறித்து வைத்து, மகளை தங்களுடனே வைத்துக் கொண்டனர்.


பரிதாவின் திருமணத்திற்கு பிறகு அவளின் தாய் வீடு ஒன்றும் செழித்து விடவில்லை.

தொழிலில் அடுத்தடுத்து ஏற்பட்ட நஷ்டம் அவர்களை ஒடிந்து போக செய்ய,


அதோடு மகளின் வாழ்வும் கேள்விக்குறியாக மனிதர்கள் நொந்து போயினர்..

அதோடு பரிதாவின் குடும்பம் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்தது.

தொழில் நஷ்டத்திலேயே நோயில் விழுந்த பரிதாவின் தந்தையை வைத்துக்கொண்டு மருத்துவச் செலவிற்கும் அன்றாட செலவிற்கும் திண்டாடிய பரிதாவும் அவள் தம்பியும் பஷீரும்,


ஒரு மாமிச கடைக்கு வேலைக்குச் செல்ல, அவள் கேசவ மூர்த்தியின் கண்களில் விழும்போது அவருக்கு ஆறு வயதில் சஞ்சையும் நான்கு வயதில் மானவ்வும் இருந்தனர்.



தனபாக்கியம் மகனின் மனம் அறிந்த பிறகு எந்த இடங்களிலும் தாமதிக்கவில்லை.


கேசவமூர்த்தி தான் தன் வம்சத்தின் ஆதாரமும் அடையாளமும்.

அடமும் ஆர்ப்பாட்டமும் செய்து சொந்தத்திலிருந்த சந்தான லட்சுமியை மகனுக்கு பேசி முடித்து தான் ஓய்ந்தார்.


கேசவ மூர்த்தியும் நடப்பை அறிந்து அவருக்கான வழக்கை வாழ தொடங்கினார்.


ஏதோ ஒரு விசேஷத்திற்குச் சென்று அங்கு சாப்பிடாமல் குடும்பத்தோடு வந்து ஒரு உணவகத்தில் சாப்பிட போகும் போது,


அந்த உணவுக்கு கடையின் வெளியில் பார்சல் வாங்கிச் சென்ற தன் தம்பிக்காக காத்திருந்த

பரிதாவை பார்த்த கேசவ மூர்த்தியும் அவர் தாயும் ஒரு நொடி ஆடி தான் போயினர்.


முகத்தில் எந்தவித ஒளியும் இன்றி வெறுமையான முகத்துடன் நின்றிருந்த பரிதாவை நொடியில் பார்வையால் அளந்துவிட்டார் கேசவமூர்த்தி.


கை கழுத்து எல்லாம் வெறுமையாக ஒரு முக்காடுடன் நின்ற இருந்தவரை பார்த்து கேசவ மூர்த்திக்கு மூச்சு முட்டியது.


எனில் தனபாக்கியத்திற்கு கிலிபிறந்தது. முதலில் மகனின் அதிர்ந்த பார்வையும், அடுத்து அவனின் ஆராய்ச்சி பார்வையும் என்று பார்த்த பெற்றவருக்கு பதறி கொண்டு வந்தது.


ஏதோ ஒரு உள்ள குறு குறுப்பில் பார்வையை திரும்பிய பரிதா நிச்சியமாய் கேசவமூர்த்தி எதிர்பார்க்கவில்லை.


அதோடு அருகில் இருக்கும் அவரின் மனைவியையும் முத்து முத்தாக இருக்கும் இரு பிள்ளைகளையும் பார்த்தவர் அவர்களுக்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்பது கூட தெரியாமல் நின்றார் .


அந்நேரம் பரிதாவின் தம்பி வர பிடிமானத்திற்கு அவனைப் பற்றிய படி வீடு நோக்கி சென்று விட்டாள்.

அடுத்த இரண்டு நாட்கள் மிக அமைதியாகச் செல்ல, அந்த இரு நாட்களும் பரிதாவின் குடும்பத்தை பற்றி அறிய கேசவமூர்த்தி எடுத்துக் கொண்ட நேரம் ஆகும்.


அவர்களின் இன்றைய நிலை தெரிந்த பிறகு தாமதிக்கவில்லை கேசவன்.

சந்தானலட்சுமியிடம் தான் எடுத்த முடிவை கூறிவிட்டார். சந்தானலட்சுமி அதிர்ந்து பார்த்ததோடு சரி.

அவருக்கு மேற்கொண்டு என்ன பேசுவது என்று கூட தெரியவில்லை.


ஏனென்றால் கணவன் அனுமதி கேட்கவில்லை முடிவெடுத்து விட்டு தெரிவிக்கிறார் அவ்வளவே..

என்று அமைதியாக அவரின் தாய் வீட்டில் கூறி விட, எவ்வளவோ சொந்தங்கள் அறிவுரை பஞ்சாயத்து என்று படையெடுக்க,


தனபாக்கியம் அன்று தன் பிள்ளையிடம் பேசுவதை விட்டவர் இன்றுவரையிலும் பேசுவதில்லை.


பஞ்சாயத்துகளில் ரொம்பவே திடமாக கூறினார். இரண்டு குடும்பத்தை நடத்தும் தெம்பு தனக்கு இருக்கிறது என்று.


சந்தான லட்சுமி குடும்பமும் மகளின் வாழ்வும் முழுதாக பறிபோனால் என்ன செய்வது என்று அமைதியாகிவிட்டனர்.


அடுத்து கேசவ மூர்த்தி நின்றது பரிதாவின் தந்தையிடம் தான்.


எதையுமே மறைக்கவில்லை பரிதாவை மணமுடிக்க வேண்டும் என்று கேட்டவர்


ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு பிள்ளைகள் இருப்பதையும் கூறி தான் கேட்டார்.


ஏற்கனவே தன் மகள் வாழ்வு இப்படி வீணடித்த மனப்புழக்கத்தில் இருந்தவர்.


இன்னொரு பெண்ணின் வாழ்வும் வீணடிக்க விரும்பாமல் தன் மகளுடைய விருப்பம் தான் முக்கியம் என்று கூறி விட


என்னதான் மகளுடைய விருப்பம் என்று கூறினாலும் தன் மகளுக்கு இப்படியாவது ஒரு விடிவு காலம் கிடைக்கட்டும் என்று எண்ணினார்


ஆனால் கேசவ மூர்த்திக்கு பரிதாவிடம்
சம்மதம் வாங்குவது அத்தனை எளிதாக இருக்கவில்லை.


பரிதாவிற்கு அன்று பார்த்த இரு பிள்ளைகளின் முகம் தான் கண்முன் வந்தது.

எவ்வளவு வற்புறுத்தியும் சம்மதிக்காத பரிதாவை அதே பிள்ளைகள் கூட வேண்டாம் என்று எங்காவது கண் காணாமல் போய்விடுவேன் என்று அடாவடியுடன் தான் திருமணம் முடித்தார் கேசவ மூர்த்தி.