தூரம் 14
மருத்துவருக்கு எதிரில் இளங்கோவும் கணேஷும் அமர்ந்திருக்க, மருத்துவர் இருவரையும் யோசனையாகவே பார்த்திருந்தார்.
“சொல்லுங்க மிஸ்டர் இளங்கோ, என்ன தெரியணும்?” என்றார் தன் மூக்கு கண்ணாடியை மேலேற்றியபடி.
“ம்ம்… டாக்டர் சென்னை அல்லது மதுரை எது பெஸ்ட்? இல்லை வேலூர் சிஎம்சி கூப்பிட்டு போகலாமா?” என்றான் தயங்கிபடியே.
“வேலூர் பெட்டர்தான், ஆனா என்னோட சஜசன் சென்னை இல்லைனா மதுரை தான். இப்போ மதுரையிலேயே உங்களுக்கு பெட்டர் ட்ரீட்மெண்ட் கிடைக்கும். இல்லைனா இது எதுவும் வேண்டாம், வேற பார்க்கலாம் என்றால் டெல்லி எய்ம்ஸ் கூட போகலாம்.” என்றார் பேப்பர் வெய்ட்டை உருட்டியபடி.
“எவ்வளவு நாள் அட்மிட் ஆகுற மாதிரி இருக்கும்?” என கேட்டான் இளங்கோ. அவன் கேட்க வந்த கேள்விகளைத் தவிர்த்து மற்ற கேள்விகளைக் கேட்பது போல் மருத்துவருக்கு தோன்றியது.
அதை உணர்ந்தவர், “மிஸ்டர் இளங்கோ, பீ ப்ராங்க். உங்களுக்கு என்ன தெரியணும்?” என்றார்.
“எஸ் டாக்டர், சாரி! கேட்க வேண்டியதை கேட்காம, ஏதேதோ கேட்குறேன்…” என்றவன் முகத்தை அழுந்த துடைத்தபடியே பெருமூச்சை விட்டான்.
“நோ பிராப்ளம் இளங்கோ, இதுவும் நீங்க தெரிஞ்சிக்க வேண்டியதுதான். இப்போ கேளுங்க, உங்களுக்கு என்ன தெரியணும்?” என்றார் ஆறுதலாக அவனிடம்.
“அது…” என்றவன், மீண்டும் ஒரு பெருமூச்சை விட்டு தன்னை சமன் செய்துகொண்டு, “எங்ககிட்ட கொடி எதுவுமே சொல்லல. என்னோட தப்புதான், நான் கவனிச்சிருக்கணும். பட் இப்போ இதை பத்தி பேச வேண்டாம். எவ்வளவு நாளா இந்த நோய்க்கு மெடிசின் எடுத்துருக்கா?” என்றான் மிகவும் வருத்தமான குரலில்.
இப்படியொரு நிலை யாருக்கும் வரக்கூடாது. தன் மனைவியின் உடல்நிலையை கூட தெரிந்துக்கொள்ளாமல் இருந்து இருக்கிறோமே என்று, அவன் முகமே கன்றிப் போனது.
அவன் நிலை உணர்ந்த கணேஷ் “இளா விடு, இனியாச்சும் எல்லாம் சரியா நடக்கட்டும். நீயும் மனசை போட்டு குழப்பிக்காத…” என ஆறுதல் சொன்னாலும், அவருக்குமே அவனின் மேல் அத்தனை கோபமும் வருத்தமும் இருந்தது.
கொடியை யாருமற்ற அனாதை நிலையில் பார்த்தால் யாருக்குமே வரக்கூடிய நியாயமான கோபம்தான். ஆனால் இதை இப்போது வெளிப்படுத்தி என்ன செய்ய? முதலில் அவளைப் பிழைக்க வைக்க வேண்டும் என்று அவனுடன் துணையாக நின்றான்.
மருத்துவருக்கும் அவன் நிலை புரிய, “உங்க வொய்ஃப் உங்ககிட்ட எதையும் சொல்லலன்னு புரியுது. அவங்களுக்கு பார்த்த டாக்டர் சொல்றதை வச்சு பார்க்கும் போது, லாஸ்ட் சிக்ஸ் மந்த்ஸா அவங்களுக்கு தெரியும் போல. பட் மெடிசின் எடுக்க ஆரம்பிச்சது 2 மந்த்ஸ் தான்.” என்றவர் சிறு இடைவெளிவிட்டு,
“பேசண்டே தைராயிடுனு நினைச்சு மெடிக்கல்ல மெடிசின் வாங்கி சாப்பிட்டுருக்காங்க, டாக்டர் ஒபினியன் இல்லாம. அதுவும் ஒரு பிரச்சனை.” என்றுவிட்டு,
“இன்னைக்கு ஒரு எம்ஆர்ஐ எடுக்க சொல்லிருக்கேன், அதுவும் பார்த்துட்டு மத்ததை முடிவு பண்ணலாம். அன்ட் கீமோதெரபி பண்ணும் போது ரொம்பவே கவனமாக இருக்கணும். அவங்களுக்கு மனரீதியா சப்போர்ட்டும் அதிகம் தேவைப்படும். கவனமா ஹேண்டில் பண்ணுங்க.” என்று முடித்துவிட்டார்.
அதன்பிறகு இளங்கோ யாருக்காகவும் நிற்கவுமில்லை பார்க்கவுமில்லை. தனக்கு தெரிந்த நண்பர்கள் மூலம் மதுரையிலேயே பெரிய மருத்துவமனையில் அப்பாய்ன்மெண்ட் வாங்கியவன், உட்கார்ந்த இடத்தில் இருந்தே அடுத்து செய்ய வேண்டிய வேலைகளில் இறங்கினான்.
அனைவருமே அங்குதான் இருந்தனர். நவீன், ஆனந்தியின் கையைப் பிடித்தபடி அமர்ந்திருக்க, வழக்கம் போல சுப்புவிடம் ஒட்டியிருந்தாள் நர்த்தனா.
இருவரின் முகமும் வெளிறி போயிருந்தது. இருவரும் தந்தையின் முகத்தைப் பார்ப்பதும், பின் ஐசியூ வாசலை பார்ப்பதுமாக இருக்க, சுப்புவும் அரண்டு போய்தான் அமர்ந்திருந்தார்.
மருமகளுக்கு ஏதோ சரியில்லை என்றளவுக்கு தெரியும்தான். ஆனால் இப்படியொரு பிரச்சனையில் இருப்பாள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை.
அனைவரும் ஆளுக்கொரு மூலையில், ஒவ்வொரு சிந்தனையில் இருக்க, இரண்டு மணி நேரங்கள் கழித்து நர்ஸ் வந்து, “ஸார், பேஷண்ட் கண் விழிச்சிட்டாங்க, அவங்க அப்பாவை பார்க்கணும் சொல்றாங்க…” என சொல்லி முடிக்கும் முன்னே இளங்கோவும் சங்கரும் முன்னே வர அவரது, ‘அப்பாவை பார்க்கணும்.’ என்ற வார்த்தையில் கால்கள் பின்ன அப்படியே நின்று விட்டான் இளங்கோ.
அதுவே அவனுக்கு மிகப்பெரிய அடி. கதவோரம் சாய்ந்து நிற்க, தன் மகனை இப்படி ஒரு நிலையில் சுப்புவால் பார்க்க முடியவில்லை.
அதுவரை அமைதியாக கல்லென அமர்ந்திருந்தவர், மகனின் கையாலாகத தன்மையில், “அய்யோ! என் புள்ள வாழ்க்கையை நானே கெடுத்துட்டேனே… எனக்கெல்லாம் நல்ல சாவே வராது…” என கத்தியழ, நிமிர்ந்து அவரை ஒரு பார்வை பார்த்தானே தவிர வேறு எதுவும் பேசவில்லை.
ஆனந்தி, அமுதா, வனிதா என அங்கிருந்தவர்களால் எந்த சமாதானமும் செய்ய முடியவில்லை.
“ஹேய்! இப்போ வாய மூடுறியா, இல்லையா? பொம்பளையாடி நீ? பிசாசுடி… சொந்த மகன் வாழ்க்கையையே நாசம் பண்ண சூனியக்காரிடி. நீ நினைச்சது தானே நடக்குது, அப்போ நீ சந்தோசம்தானே படணும்? ஏன் இங்க உக்காந்து ஒப்பாரி வைக்குற? பிள்ளைங்கள கூப்பிட்டு கிளம்பு. இனி ஒரு நிமிசம் நீ இங்க இருக்கக்கூடாது.” என கத்திக்கொண்டே அடிக்கப் போக, வெங்கடேஷும் நடராஜும் தான் அவரை இழுத்துப் பிடித்தனர்.
இங்கு உள்ளே சென்ற சங்கர் மகளின் நிலை பார்த்து அப்படியே நின்றுவிட்டார். அவள் கழுத்தை அசைக்காமல் இருக்க பெல்ட் போல மாட்டப்பட்டிருக்க, கழுத்தை அசைக்காமல் விழிகளை மட்டும் அசைத்து அவரைப் பார்த்தாள்.
அந்த விழிகளில் கொஞ்சமும் பயமோ பதட்டமோ இல்லை. எதிலிருந்தோ தப்பித்து விட்டது போலொரு விடுதலை உணர்வு. இரு விழிகளில் இருந்தும் நீர் காதோரமாய் வழிய, வேகமாக சென்று தன் சட்டையை வைத்து துடைத்துவிட்டார் சங்கர்.
அவர் கைகள் நடுங்குவதிலேயே அவரும் அழுகிறார் என புரிந்தது பெண்ணுக்கு. “ப்பா…” என்றாள் வழக்கம் போல உயிரை மொத்தமாய் தேக்கிய குரலில்.
அந்த வார்த்தைக்குத்தான் எத்தனை சக்தி, அழுத்தம். தன் இரு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு தேம்பி தேம்பி அழுதார் மனிதர்.
“ப்பா…” என்றாள் இப்போது கொஞ்சம் சத்தமாக, அது அதட்டலாக வெளிவந்தது.
“கண்ணு… கண்ணு…” என்றவரால் எதுவுமே பேசமுடியவில்லை. எவ்வளவோ கேள்விகள் அவளிடம் கேட்க வேண்டும் என நினைத்தாலும், மகளின் நிலை அறிந்து கேள்விகள் எதுவும் தொண்டையைத் தாண்டி வெளிவரவில்லை.
சலைன் ஏற்றாத மற்றொரு கையைத் தட்டி, அமருமாறு கூறியவள் பெரும் சிரமத்திற்கு பிறகு, “என்னை நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போயிடுறீங்களாப்பா?” என்றாள் திணறி.
“ஆமா கண்ணு, இனி உன்னை அங்க அனுப்பமாட்டேன். உனக்கு அவங்க யாருமே வேண்டாம் கண்ணு. அப்பாவுக்கு நீ, உனக்கு இந்த அப்பா போதும் கண்ணு. நமக்குள்ள இனிமே யாருமே வேண்டாம் கண்ணு.” என்றவர் தேம்பியபடியே மகளின் கைகளைப் பிடித்து அழுத்திக் கொடுத்தார்.
பின், “ஏன் கண்ணு, எங்கிட்ட கூட சொல்லலயே கண்ணு… நான் கூட உனக்கு வேண்டாமா கண்ணு? உனக்காக மட்டும்தானே கண்ணு இந்த உசுர வச்சிட்டு போராடிட்டு இருக்கேன். உனக்கு ஒன்னுன்னா நான் என்ன பண்ணிருப்பேன் கண்ணு? உனக்கு அங்க இருக்க முடியலன்னா எங்கிட்ட வந்துருக்கலாமே கண்ணு. அது உன் வீடில்லையா?” என்று கதறலாக கூறியவர் மகளின் தலையை வருட,
தகப்பனின் வருடிய கையைப் பிடித்தவளுக்கு சற்றே தைரியம் வர, “ப்பா, உங்ககிட்ட பணம் இருக்காப்பா? இந்த ஆஸ்பத்திரி செலவெல்லாம் பார்க்க முடியுமா? எனக்கு அவங்க பணம் எதுவுமே வேண்டாம்ப்பா. அது… அது… எனக்கு வேண்டாமேப்பா…” என்றவள் முகத்தைத் திருப்ப முடியாமல், கண்களை மூடி தன் துயரத்தைக் காட்ட, மூடிய விழிகளில் இருந்து வடிந்த நீர் கூறியது, அவளின் வலியை, அனுபவித்த வேதனையை.
“கண்ணு, நீ அப்பாவை நம்புறதானே? நான் பார்த்துக்குறேன், அப்பாக்கிட்ட பணம் இருக்கா, இல்லையானு எல்லாம் யோசிக்கக்கூடாது. அப்பா பிச்சை எடுத்தாச்சும் உன்னை காப்பாத்தி நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவேன், சரியா? இனி என் பொண்ணு எதுக்கும் கண் கலங்கக்கூடாது. எது வந்தாலும் பார்த்துக்கலாம். தைரியமா இருக்கணும், சரியா கண்ணு? இப்போ தூங்கு, நான் இங்க பக்கத்துலயே இருக்கேன்.” என்றவர் அங்கிருந்த சின்ன ஸ்டூலில் அமர்ந்து மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
மனைவியும் மாமனாரும் பேசிக் கொண்டிருந்த அனைத்தும், கதவில் சாய்ந்திருந்த இளங்கோவின் காதுகளில் தெளிவாக விழத்தான் செய்தது.
வாழ்க்கையை வெறுத்து, சாவதற்கு துணிகிறாள் என்றால், எந்தளவிற்கு கஷ்டப்பட்டிருப்பாள்? நீ உண்மையிலேயே நல்ல கணவன், இல்லை இல்லை நல்ல மனிதனே இல்லை இளா. மனசாட்சி அவனை காரித் துப்பியது.
படித்துக் கொண்டிருந்த ஒரு சிறு பெண்ணை திருமணம் என்ற பெயரில் அடைந்து திருமணம், தாம்பத்யம் என்றால் என்னவென்று உணரும் முன்னே அடுத்தடுத்து இரு பிள்ளைகள். பற்றாததற்கு அம்மாவின் கொடு சொற்கள். இதெல்லாம் அவளுக்குத் தேவையா? நீ காதலித்தாய், திருமணமும் செய்தாய். நீ கஷ்டப்படலாம், நஷ்டப்படலாம். ஆனால் அவள் கஷ்டப்பட வேண்டுமென என்ன இருக்கு?
ஆனால் உனக்காக அதையும் செய்தாளே, அதற்கு நீ கொடுத்த பரிசு? ம்ச்! தலையை உதறிக் கொண்டவன், கதவில் மீண்டும் சாய்ந்துகொள்ள, வெங்கடேஷ் தான் வந்து அழைத்துச் சென்றான்.
“ண்ணா வா, அடுத்து என்ன செய்றதுனு பார்க்கணும். இப்படியே ஆளாளுக்கு ஒரு மூலையில இருந்தா எல்லாம் நடந்துடுமா?” என்று சத்தம் போட்டவன், ‘ஏன் இப்படி செய்தாய்?’ என கேட்கவே இல்லை.
ஏற்கனவே வேதனையில் இருப்பவனிடம் குத்திக் காட்டி பேசி என்ன ஆகப்போகிறது?
தன் மனைவியிடம் திரும்பி, “வனி, நீ எல்லாரையும் அழைச்சிட்டு கிளம்பு. பசங்க இங்க இருக்க வேண்டாம். ப்பா, நீங்களும் அம்மாவும் கூட கிளம்புங்க. நாங்க இங்க இருக்கோமில்ல…” என்றவன்,
ஆனந்தியிடம் திரும்பி, “அண்ணி, வீட்டுல நிவி தனியா இருப்பா, நீங்களும் கிளம்புங்க. அதுதான் அமுதா அண்ணி இருக்காங்கல்ல, நாங்க எல்லாரும் பார்த்துக்குறோம். போயிட்டு காலையில வாங்க.” என அங்கிருந்த அனைவரையும் அதட்டி, உருட்டி ஒருவழியாக அனுப்பி வைத்தான்.
அப்போது சங்கர் வெளியே வர, எல்லோரும் அவரையே பார்க்க, “தண்ணி குடிக்கலாமானு கேட்கணும் அமுதா. பாப்பாவுக்கு தாகமா இருக்காம், கேட்டுட்டு வா.” என மகளிடம் சொல்ல,
அவர் வெளியில் வந்த நொடி உள்ளே போயிருந்தான் இளங்கோ. இதை எதிர்பார்க்காத சங்கர் கோபமாக உள்ளே போக முற்பட, கணேஷ் பிடித்துக் கொண்டான்.
“மாமா, இனி என்ன நடந்தாலும் கொடி அங்க போகமாட்டா. அது எல்லாருக்கும் புரிஞ்சிடுச்சு, அவனுக்கும் புரியட்டும். கொடி புரிய வைக்கட்டும், நாம உள்ள போக வேண்டாம்.” என கூற,
“இவனை நம்பி என் பொண்ணை கொடுத்ததுக்கு, அரை உசுரா கொடுத்துட்டானே… இப்போ போய் இருக்குற கொற உசுரையும் எடுக்கப் போறானா?” என கத்த,
அமுதா அழுது கொண்டே அவரை சமாதானம் செய்ய, வாசலை நோக்கியே பார்வை பதித்திருந்த மனைவியைப் பார்த்தபடியே உள்ளே வந்தான் இளங்கோ.
அவனைப் பார்த்ததும் சட்டென்று கழுத்தைத் திருப்ப முடியாமல் போக, பார்வையை வேறு பக்கம் பதித்து விழிகளை மூடிக்கொள்ள, மனைவியின் முதல் உதாசீனம். நெஞ்சத்தை வெடிக்க செய்தது.
முள் கிரீடத்தையே சுமந்து பழகியவள் நான்! இன்று உன் காதலெனும் மலர் கிரீடம் கூட அதிகமாக கனக்கிறது, ஏற்கனவே நீ செய்த உதாசீனங்களால்…
***