Home Antiheroதூரம் – 11

தூரம் 11

அன்றைய நாளே மந்தமாய் தான் ஆரம்பித்தது அனைவருக்கும். தன்னை வைத்து ஒரு கலவரம் நடந்ததைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், தன் அன்றாட வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தாள் பூங்கொடி.

அன்று விடுமுறை தான். ஆனால் இளங்கோவிற்கு கட்டாயம் போக வேண்டிய வேலை இருந்தது.

நேரமாகிவிட்டது என வேகமாக கிளம்பியவன், “நாலு மணிக்கு கிளம்பினா போதும். டிரைவருக்கு நான் சொல்லிடுறேன், மூனு பேரும் கவனமா வந்துருங்க.” என மனைவியிடம் கூறிவிட்டு சாப்பிடாமல் கூட கிளம்பி விட்டான்.

கணவன் சாப்பிடாமல் போகிறான் என்று அவளுக்கு தெரிகிறது தான். ஆனாலும், ‘சாப்பிட்டு போங்க’ என்று கூற மனம் வரவில்லை. எல்லாவற்றிலும் ஒரு வெறுப்பு, ஏதோ ஒரு சலிப்பு. ஒவ்வொன்றிற்கும் தான் மட்டுமே கீழே இறங்கி வருவது போல ஒரு தோற்றம் அவளுக்குள்.

நேற்று அத்தனை நடந்தும், காலையில் அவள் ஒரு விளக்கம் கொடுத்தும் கூட அவன் எதுவும் சொல்லாமல் போனது, எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்தது.

நேற்றிலிருந்து, “ம்மா… ம்மா…” என மகன் தன் பின்னே சுற்றுவது வேறு சிரிப்பைக் கொடுத்தது.

நர்த்தனா ஆரம்பத்தில் இருந்தே அவளிடம் ஒட்டுவதில்லை. மகள் பிறந்து ஒரு வருடத்திலேயே மகனும் பிறந்து விட, மகளின் முழு பொறுப்பும் சுப்புவே எடுத்துக் கொண்டார். அப்போதிருந்து அவரின் போதனைகளில் வளர்ந்ததால், கொடியிடமிருந்து தூரமே இருந்தாள்.

அப்போது சரியாக தெரிந்தது, இப்போது? மீண்டும் ஒரு பெருமூச்சு.

மகள் தன் அப்பத்தாவோடு சேர்ந்து பின் வீட்டிற்கு சென்றுவிட கந்தவேலு தான், “கொடி ஹாஸ்பிடல் போகலையா? எப்போ போறீங்க?” என்றார் மருமகளைப் பார்த்து.

“இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை மாமா, எந்த ஹாஸ்பிட்டலையும் டாக்டர்ஸ் இருக்க மாட்டாங்க. அப்படியே இருந்தாலும் எல்லா டியூட்டி டாக்டரா இருப்பாங்க. அதனால நாளைக்கு போகலாம்னு சொல்லிட்டேன். இன்னைக்கு அவர் கூட வேலை செய்றவங்க வீட்டுல ஒரு பங்க்ஷன். அதுக்கு எங்க மூனு பேரையும் கிளம்பி வர சொன்னாங்க. டிரைவருக்கு அவரே சொல்லிடுறேன்னு சொன்னார் மாமா.” என வேலைகளைப் பார்த்துக் கொண்டே பேசினாலும், ஒரு கை அவள் கழுத்தை அடிக்கடி தடவிக்கொண்டது.

சரிம்மா…” என்றவர் அடுத்து ஏதோ பேச வருவதற்குள், “அண்ணி!” என அழைத்தபடி உள்ளே வந்தாள் நந்தினி.

“வா நந்தினி.” என புன்னகையுடன் வரவேற்க,

“இப்போ எப்படி இருக்கு அண்ணி, ஹாஸ்பிடல் போகலாமா?” என கேட்டதும் விழித்தாள் கொடி.

“எங்க நந்தினி போறோம், நீயும் வரியா எங்க கூட?” என்று எதுவும் புரியாதது போல சிரித்தபடியே கேட்க,

“ம்ம்ச்ச்! அண்ணி விளையாடாதீங்க, ஹாஸ்பிடல் போகணும்னு சொன்னேன் இல்ல, இன்னைக்கு போயிட்டு வந்துடலாம்.” என யோசனையாக பேசியபடியே இளங்கோவைத் தேடினாள்.

“அண்ணன் இல்ல ராசாத்தி, அவனுக்கு முக்கியமான வேலை இருக்குன்னு கிளம்பி போயிட்டான். ஹாஸ்பிடலுக்கு நாளைக்கு போகலாம்னு கொடி சொல்லிடுச்சு.” என கந்தவேல் பதில் கூற,

“இன்னைக்கு யார் இருக்காங்களோ, அவங்கள பார்க்கலாம் அண்ணி. ஜஸ்ட் செக்கப் மாதிரியாவது பார்த்துட்டு வந்துடலாம்.” என நந்தினி விடாமல் அழைக்க,

“அதெல்லாம் வேண்டாம் நந்தினி, எனக்கு இப்போ ஒன்னும் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். நாளைக்கு ஒரேடியா போய் பாத்துட்டு வந்துடலாம்.

இன்னைக்கு உங்க அண்ணா எங்களை வெளியே கூப்பிட்டு போறேன்னு சொன்னாரு. அவங்க கூட வேலை செய்றவங்க வீட்டுல ஒரு ஃபங்ஷன். எங்கள நாலு மணிக்கு எல்லாம் கிளம்பி வரச்சொல்லி இருக்காரு.” என பாதி வார்த்தையாகவும் பாதி சைகையிலும் பேச,

“அப்படியா? சரி அண்ணி, அப்போ நாளைக்கு நான் லீவு போட்டுடுறேன். நம்ம போகலாம் கண்டிப்பா… உங்க கூட நானும் வருவேன். என்னை விட்டுட்டு போயிறக்கூடாது.” என கண்டிப்பாக கூற,

“ஏய், எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற? எனக்கு ஒன்னும் இல்ல, தேவையில்லாம லீவ் எல்லாம் போட வேண்டாம். நீ பர்மிஷன் போடு, நாளைக்கு நான் வரேன். செக் பண்ணிட்டு வந்துடலாம்.” என கொடி தன் பதட்டத்தைக் காட்டாமல் இலகுவாகவே பேச,

“ஹ்ம்ம்… சரி, அப்போ மாமாவுக்கு கூப்பிட்டு சொல்லிடுங்க. அவரையும் வர சொல்லுங்க, இல்லை ஆனந்தி அண்னியை வர சொல்லுங்க.” என்றாள் பிடிவாதமாக.

“அதெல்லாம் வேண்டாம் நந்தினி, அப்பா ரொம்ப பயந்துக்குவாங்க. முதல்ல என்னனு பார்க்கலாம், பாத்துட்டு அதுக்கு பிறகு அப்பாவுக்கு சொல்லலாம்.” என முடிக்க நினைக்க,

நந்தினியோ விடாமல், “ஏற்கனவே மாமா உங்கள நெனச்சு கவலையா இருக்காரு. இதையும் சொல்லலன்னா ரொம்ப வருத்தப்படுவார் அண்ணி.” என வருத்தமாக சொல்ல,

“நான் சொல்லிக்கிறேன் நந்தினி. அப்பாகிட்ட எப்படி சொல்லணுமோ அப்படி சொல்லிக்கிறேன். மாமா நீங்க எதுவும் அப்பாவுக்கு போன் பண்ணி சொல்ல வேண்டாம். நானே பேசிக்கிறேன்.” என்றுவிட்டாள் பட்டென.

அந்தக் குரலில் இருந்த இறுக்கம், அடுத்து நந்தினியால் எதுவும் பேச முடியவில்லை.

“ம்ம்… சரி… சரி, டென்சன் ஆகாதீங்க, நான் கிளம்புறேன். அப்பத்தா தனியா இருக்காங்க, இன்னைக்கு வெண்டைக்காய் எடுக்குறதுனால அம்மா காட்டுக்கு போயிட்டாங்க. பெரியப்பா வர்றீங்களா, அப்பத்தா உங்களை வரச் சொன்னாங்க.” என்றதும்,

“போலாம் ராசாத்தி.” என மகளுக்கு முன்னே கந்தவேல் நடக்க,

நந்தினி வெளியில் வர அப்போதுதான், பின்வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்தாள் நர்த்தனா.

அவளைப் பார்த்ததும் முறைத்தபடியே நிற்க, நந்தினியை நிமிர்ந்து பார்க்காமல் வீட்டுக்குள் நுழைந்தாள் நர்த்தனா.

பேத்திக்கு பின்னாடியே வந்த சுப்பு, மகளின் முறைத்த முகத்தைப் பார்த்து, “என்ன கண்ணு?” என்றதும்,

“அவதான் பெரியம்மா, ஒரு வயசுக்கு மரியாதை இல்லாம என்னை பாத்து முறைச்சுட்டு போறா, திமிர் பிடிச்சவ…” என பல்லைக் கடிக்க,

“நீ அடிச்சதும் இல்லாம நைட் உன் அண்ணனும் அடிச்சிட்டான் கண்ணு. பிள்ளைக்கு கன்னமே வீங்கிடுச்சு.” என்றார் பேத்தியை நினைத்து வருத்தமாக.

“என்ன அண்ணன் அடிச்சாரா? ஏன், அவர்கிட்டயும் திமிரா பேசினாளா? வர வர வாய் கூடிருச்சு இவளுக்கு…” என அண்ணன் மகளைப் பார்த்து முறைத்துக் கொண்டே சொல்ல,

“விடு கண்ணு, சின்ன புள்ள தானே… போக போக எல்லாம் சரியாகிவிடும்.” என அப்போதும் பேத்தியை விடாமல் பேச,

“இப்படியே அவளை பத்திரம் பண்ணுங்க பெரிம்மா, நாளைக்கு உங்களையும் மதிக்காம பண்ணுவா.” என எரிச்சலாக கூற,

“கண்ணு நேரம் ஆகுது வா, எனக்கு வெளிய போக வேண்டிய வேலை இருக்கு.” என்ற கந்தவேலின் சத்தத்தில், சுப்புவிடம் சொல்லிவிட்டு கிளம்பினாள் நந்தினி.

வேலை முடிந்து மூவரும் கிளம்பி இருக்க, காரும் வந்திருந்தது. நவீன் தாயுடன் பின்னிருக்கையில் அமர, டிரைவருடன் அமர போன நர்த்தனவை கொடி ஒரு பார்வை பார்க்க, அதை உணர்ந்த நவீன் முன்பக்கம் அமர, பின்னிருக்கையில் இருவரும் அமர்ந்து கொண்டார்கள்.

டிரைவர் கேட்கும் கேள்விகளுக்கு நவீனே பதில் சொல்ல, மகனை நினைத்து புன்னகைதான் கொடிக்கு.

நர்த்தனா மொபைலில் மூழ்கிட, நவீன் டிரைவரிடம் பேசினாலும் தாயைப் பார்ப்பது போலவே அமர்ந்துகொண்டான்.

கொடியோ அவனைப் பார்த்து புன்னகைத்தபடியே சீட்டில் சாய்ந்துகொண்டாள். இந்த இரண்டு நாட்களில் அனைத்தும் மாறுவது போல தோன்றியது.

நான் பட்ட இரண்டு வருடங்களான கஷ்டமும் அவமானமும், இவர்களுக்கு ஒன்றுமே இல்லையா? அத்தனை சீக்கிரம் நடந்த அனைத்தையும் மறந்துவிடுவேன் என்று நினைத்தார்களா? கட்டிய கணவனில் இருந்து பெற்ற பிள்ளைகள் வரை ஒதுக்கி வைக்கும் அளவிற்கா நான் இருந்தேன்?

என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பே இல்லையா? இனி இருந்தாலும் இல்லையென்றாலும் ஒன்றுதான் என, தன் நிலை எண்ணி கசப்பாக புன்னகைத்தாள். போலியான அன்புக்கு தான் ஏங்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதையே நாட்கள் கடந்த பின்னர் தான் உணர்கிறோமோ?

ஒரு நாள் உறக்கத்திற்கே இந்த பதட்டம், நிரந்தரமாக உறங்கி விடுவேன் என்று தெரிந்தால் என்ன செய்வார்கள்? தவித்துப் போவார்கள், அதிலும் கணவன்…

‘ம்ச்! கொடி, ஆனாலும் உனக்கு பேராசைதான். அவன் எதுக்கு உனக்காக தவிக்கப் போறான்? சும்மா மனசுக்குள்ள ஆசையை வளர்த்துக்காத…’ என மனசாட்சி அதட்ட, ‘அதுவும் சரிதான்.’ என்பது போல ஜன்னலில் தலை சாய்த்து, பின்னோக்கி நகரும் மரங்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

“ஹலோ ப்பா கிளம்பிட்டோம்… சரிப்பா… சரிப்பா…” என நவீன் பேசுவது காதில் விழுந்தது.

இந்த நந்தினியிடம் தன் பயத்தையும் பதட்டத்தையும் மறைத்து, சாதாரணமாக பேசுவதற்குள் பெரும்பாடாகிப் போனது. என்றோ முடிவு செய்துவிட்டாள், தனக்காக யாரும் எதுவும் செய்யக்கூடாதென்று. அதில் உறுதியாக இருக்கவேண்டும் என மூளைக்கும் மனதுக்கும் சொல்லிக்கொண்டாள்.

ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, ஒரு வழியாக அவர்கள் சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

இவர்கள் கார் உள்ளே வருவதை பார்த்தபடி வாசலிலேயே நின்றிருந்தான் இளங்கோ. மகள் இறங்கியதும் தந்தையிடம் செல்ல, நவீனோ கொடி இறங்கும் வரை நின்று அவளுடனே வந்தான்.

மனைவியின் முகத்தில் வலியின் சாயல் அல்லது பிடித்தமின்மை எதுவும் தெரிகிறதா என்பது போல் ஆராய்ச்சியாக பார்த்தபடியே, மூவரையும் பார்த்து தலையசைத்தான்.

“ஒன்னும் பிரச்சினையில்லையே?” என மனைவியிடம் கேட்க, ‘இல்லை’ என அவள் தலையசைக்க, இவர்களைப் பார்த்ததும் சீனிவாசனும் அவர் மனைவி கவிதாவும் வேகமாக வந்து வரவேற்றனர்.

“வா… வா… கொடி, எவ்வளவு நாளாச்சு? எப்படி இருக்க? என்னாச்சு, டல்லடிக்கிற?” என கவிதா படபடவென பேச,

“நல்லா இருக்கேன் க்கா, நீங்க எப்படி இருக்கீங்க? டல் எல்லாம் இல்ல, நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.” என சிரிக்க, அந்த சிரிப்பில் உயிர்ப்பில்லை என்பதை உடனே அறிந்துகொண்டார் கவிதா.

உடனே எதுவும் கேட்க வேண்டாம் என நினைத்தவர், பிள்ளைகளிடம் பேசிக்கொண்டே உள்ளே அழைத்துப்போனார்.

“என்ன இளா, உன் முகமும் டல்லடிக்குது? உன் வொய்ஃப் முகமும் சோர்வா இருக்கு?” என சீனிவாசன் யோசனையாக கேட்க,

“நத்திங் சார், நான் ஆஃபிஸ்ல இருந்து அப்படியே இங்க வந்துருக்கேன். அவளுக்கு கொஞ்சம் ஹெல்த் இஸ்ஸூஸ்.” என்றதும்,

“அவங்களுக்கு முடியலன்னா வராம இருந்துருக்கலாமே இளா, ட்ராவலிங்கும் சேர்ந்து ப்ரஷர் ஆகப்போகுது.” என்றதும்,

“பார்த்துக்கலாம் சார், வெளியே வந்து அப்படியே மேடத்தை பார்த்தா கொஞ்சம் ரிலாக்ஸாவானு நினைச்சேன்.” என்றான் சோர்வாக.

“ஓகே, டென்சனை விடு. கவிதா பேசினாலே சரியாகிடுவாங்க. வா, அங்க நம்ம ஃப்ரண்ட்ஸ் வெயிட் பண்றாங்க.” என தங்கள் நண்பர்கள் இருக்கும் இடம் நோக்கி அழைத்துச் சென்றார்.

இங்கு கொடியை பேச வைக்கும் முயற்சியாக கவிதா நிறைய பேசினார். ஆனால் கொடியோ பாதி கேள்விகளுக்கு சிரித்தே மழுப்பினாள்.

அப்படி பேசிக்கொண்டிருக்கும் போதுதான், “ஏன் கொடி, மதுரைக்கு ஷிஃப்டாக போறீங்களா? இளா மதுரைக்கு ட்ரான்ஸ்ஃபர் கேட்டுருக்கார் போல… மோஸ்டா கிடைச்சிடும்னு சொன்னார் சீனி.” எனவும், ‘அப்படியா எனக்கு தெரியாதே?!’ என்பது போல் விழிக்க,

“என்ன கொடி, இதுக்கும் அமைதியா இருக்க? பசங்களுக்கு கூட ஸ்கூல் ரெடி செஞ்சிட்டதா சொன்னார். ஹாஸ்டலோட சேர்த்தே பார்த்துருக்காங்க போல. ஃபேமிலியோடத்தானே போறீங்க, எதுக்கு பசங்களை ஹாஸ்டல் விடணும்?” என கொடியின் அதிர்ந்த முகத்தைப் பார்த்து யோசனையாகவே கவிதா கேட்க,

“அம்மாவுக்கு இதெல்லாம் தெரியாது. அப்புறம் அவங்க மதுரைக்கு வரல. நாங்க மூனு பேர் மட்டும்தான் போறோம்.” என பட்டென்று நர்த்தனா சொல்ல, இப்போது அதிர்ந்து விழித்தார் கவிதா.

“என்ன… என்ன சொல்ற?” என கவிதா அதிர்ச்சியாக கேட்க, அதற்குள் கொடி நிதானத்திற்கு வந்திருந்தாள்.

“அக்கா, அவர் எனக்கு சர்ப்ரைஸ் பண்ணணும்னு நினைச்சிருப்பார், அதுக்குள்ள நீங்களே சொல்லிட்டீங்க. பசங்கள ஹாஸ்டல் விட எதாவது முக்கிய காரணம் இருக்கும்க்கா. அவர் சொல்லாம நாமளே ஏன் கண்டதையும் யோசிக்கணும்? அதோட வீட்டுல பெரியவங்க இருக்காங்க, அவங்களையும் பார்க்கணுமில்ல… அதையும் யோசிச்சிருப்பார் க்கா.” என வலித்த தொண்டையையும் மனதையும் மறைத்து சாதாரணமாக பேசினாள் கொடி.

“ஓ… யெஸ்… கண்டிப்பா காரணம் இருக்கும். இங்க ஸ்டடிஸ் அந்தளவுக்கு சரியில்லதான். மதுரைன்னா பெட்டர்தான். அதோட ஹாஸ்டல் இன்னும் பெட்டர். மொபைல் யூசிங் அவாய்ட் பண்ணலாம். நீ சொன்ன மாதிரி உனக்கு சர்ப்ரைஸா ஏதோ ப்ளான் பண்ணிருப்பார் போல, நான்தான் உளறிட்டேன் போல…” என ஆசுவாசமாக, சரியாக சீனிவாசனும் இளங்கோவும் அவ்விடம் வந்தனர்.

இளங்கோவின் பார்வை மனைவியிடமே இருந்தது. அவள் முகம் இறுகி, விட்டால் இப்போதே இங்கிருந்து கிளம்பி விடுவேன் என்பது போல் நின்றிருந்தாள்.

யோசனையாக நின்றிருக்க, “சாரி இளா, நீங்க உங்க வொய்ஃப்க்கு சர்ப்ரைஸ் பண்ண வச்சிருந்த நியூஸ லீக் பண்ணிட்டேன்.” என்றார் கவிதா சங்கடமாக.

“அக்கா விடுங்க, இதுல சங்கடப்பட என்ன இருக்கு?” என கொடி கூற,

“என்ன கவி?” என்ற கணவரிடம், அவர்களுக்குள் நடந்த பேச்சு வார்த்தையைக் கூற, ‘அய்யோ! இதை எப்படி மறந்தேன்?’ என பதறி அவசரமாக மனைவியைப் பார்க்க, அவளோ சீனிவாசனிடம் ஏதோ பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.

அவன் வரும்போது மனைவி நின்றிருந்த கோலம் நினைவிற்கு வர, அய்யோ என்றானது இளங்கோவிற்கு.

இருக்கிற பிரச்சனையில் இப்போது இதுவும் சேர்ந்துவிட்டதா? யோசித்தபடியே மகளைப் பார்த்தான். கண்கள் மொபைலை விட்டு அகலுவதாக இல்லை. தான் வந்து நிற்பதைக்கூட பார்க்காமல் மொபைலிலேயே மூழ்கியிருந்தாள்.

அப்படியே மகனைத் தேட, அவனோ கொடியை இடித்தபடி அவள் கையைப் பிடித்தபடி நின்றிருந்தான். அதை பார்த்ததும் சிரிப்புதான் வந்தது.

நேற்றிலிருந்து மகனை கவனிக்கிறான்தானே, கொடியை விட்டு இம்மியும் அகலாமல் பின்னாடியே சுற்றிக் கொண்டிருக்கிறான்.

“நதி!” என மகளை சத்தமாக அழைக்க,

நேற்றிலிருந்து பேசாத தந்தை இப்போது அழைக்கவும், “சொல்லுங்கப்பா…” என வந்த மகளிடம் கையை நீட்ட, அவளோ ஒன்றும் பேசாமல் மொபைலை கொடுக்க, “எங்க போனாலும் மொபைல் நோண்டிட்டே இருக்கணுமா?” என பல்லைக் கடிக்க,

“ஸாரிப்பா!” என்றவள் தந்தையோடு ஒட்டி நின்றுகொண்டாள். மகன், தாயுடனும் மகள், தந்தையுடன் நிற்கும் காட்சி அத்தனை அருமையாக இருந்தது.

இதில் நால்வரும் ஒரே கலரில் உடை வேறு. சொல்லி வைத்து எல்லாம் போடவில்லை.

தாயின் புடவைக்கு ஏற்ப நவீன் உடை தேர்வு செய்ய, தம்பியை பார்த்து நர்த்தனா ஒரு ஃப்ராக் தேர்வு செய்தாள். ஆனால் அதே நிறத்தில் இளங்கோவும் அணிந்திருப்பான் என யாரும் நினைத்திருக்கவில்லை.

“நிஜமாவே உங்களை பார்த்தா பொறாமையா இருக்கு இளா. அழகான, அளவான, வளமான குடும்பம். இன்னைக்கு நிறைய பேர் கண்ணு வச்சிருப்பாங்க. போனதும் மறக்காம சுத்திப் போடுங்க. என் கண்ணே பட்டுருக்கும்.” என்ற கவிதா, தன் மொபைலில் அவர்களை புகைப்படமாக எடுத்து தள்ளினார்.

கவிதாவின் பேச்சுக்கு இளங்கோ கூச்சத்துடன் சிரிக்க, கொடியும் சிரித்தாள் தான். ஆனால் அந்த சிரிப்பில் இருந்தது என்ன? என்றுதான் அப்போது யாருக்கும் புரியவில்லை.

ஏய் கண்ணீர் துளியே! என் முகத்தை மட்டும் அடிக்கடி பார்க்க உனக்கு ஏன் இவ்வளவு ஆனந்தம்?! ஆனால் நானோ தூரங்களுக்கு துணிவோடு பயணிக்க ஆரம்பித்துவிட்டேனே!

***

You may also like

Leave a Comment

About Me

Featured