தூரம் 15
தன்னைப் பார்த்து விழிகளை மூடிக் கொண்டவளைக் கண்ட இளங்கோவின் மனதுக்கு மிகப்பெரும் அடி. அவனும் விழிகளை மூடி தன்னை சமன் செய்ய முனைந்தான், முடியவில்லை.
மருத்துவ உபகரணங்கள் சூழ, பெட்டில் படுத்திருந்தவளைப் பார்க்க முடியாமல் கால்கள் துவள அப்படியே அந்த கதவில் சாய்ந்து நின்றான்.
அதிவேகமாக துடித்த இதயத்தை அழுத்தமாக தடவி சமன் செய்ய முயல, முடியவில்லை. விட்டால் வெளியே வந்து குதித்துவிடுமோ என்ற பயமே வந்துவிட்டது.
மனைவியின் நிலை பார்த்து இதயம் நடுங்கியது. ‘அய்யோ… அய்யோ… என மனம் கூக்குரலிட்டு கதறியது. என்ன செய்து வைத்திருக்கிறேன் நான்? கொடூர மனம் கொண்டவன் கூட இரக்கம் காட்டிருப்பானோ? ஆனால் நான்? நானே அவளை நரகத்தில் தள்ளிவிட்டேனா?’ என உள் நெஞ்சம் கதறியது.
கால்கள் அடுத்த அடியை எடுத்து வைக்க மிகவும் சிரமப்பட்டது. முயன்று ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து கட்டிலுக்கருகில் வந்தான்.
அங்கிருந்த சிறு ஸ்டூலில் அமர்ந்தவனுக்கு அவளைப் பார்க்க பார்க்க குற்றவுணர்ச்சியில் உள்ளம் துடித்தது. மனைவியின் கைகளைப் பிடித்து ஆறுதல் கூறக் கூட அவனது குற்றமுள்ள நெஞ்சம் தடுத்தது.
ஆனால் இப்போது அவளுக்கு ஆறுதல் தேவையோ, இல்லையோ… அவனுக்கு தேவையாக இருந்தது. மனைவியின் கைகளைப் பிடித்துக் கொண்டால் தனக்கு யானை பலம் வந்துவிடுமென்று நினைத்தவன், அவள் கைகளைப் பிடிக்க போக, அதை உணர்ந்தாளோ, என்னவோ தன் உள்ளங்கையை இறுக்கமாக மூடிக்கொண்டாள் பெண்.
செருப்பால் அடித்த உணர்வு. அப்படியே கண்களை மூடிக்கொண்டான். இதற்கு அவள் தன்னை நேராகப் பார்த்து, கன்னம் கன்னமாக அறைந்திருந்தால் கூட இவ்வளவு வலி வலித்திருக்காது.
ஆனால் முகத்தைத் திருப்பி, கரங்களை மூடிக்கொண்டது அவ்வளவு வலித்தது அந்த ஆண்மகனுக்கு.
அடுத்து என்ன செய்வதென்றே தெரியாத நிலைதான் இளங்கோவிற்கு. மனமும் உடலும் நடுங்க மனைவியின் கையை வலுக்கட்டாயமாக பிடித்து பிரித்தவன், அந்த கைகளிலேயே முகத்தைப் புதைத்துக்கொண்டான்.
அவள் உடலும் இறுகிப் போக, கரம் மேலும் இறுக்கமாக மாறியது. தன் உள்ளங்கையில் சூடான திரவம் விழ, கணவன் அழுகிறான் என்று புரிகிறது. ஆனாலும் அக்கரம் தன் இறுக்கத்தைத் தளர்த்தவே இல்லை.
“இப்படியெல்லாம் நடக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல கொடிமா. உன்னை இப்படி பார்க்க முடியலடி. நான் என்னடி பண்ணட்டும்…” என அழ, தனக்கு மேல் இருந்த சீலிங்கையே வெறித்தபடி அமைதியாக படுத்திருந்தாள் கொடி.
“கொடி… கொடி…” என கதறியவன், “ப்ளீஸ்டி என்னை பாரேன், இங்க பாரு கொடி…” என எவ்வளவோ கெஞ்சியும் அவன் முகத்தை அவள் விழி திருப்பி பார்க்கவே இல்லை.
ஆனால் இளங்கோவும் அவளை, அவள் கரத்தையும் விட்டும் நகரவே இல்லை. சில நிமிட அமைதிக்கு பிறகு, “இன்னைக்கு அந்த பரமனை பார்த்தேன்.” என்றாள் கொடி திக்கி, திக்கி.
“என்ன சொல்ற கொடிமா? மறுபடியும் உங்கிட்ட எதாவது பிரச்சனை பண்றானா?” என்றான் கோபமாக. பின் எதற்கு சொல்கிறாள் என புரிந்து, “கொடிமா…” என்றான் மிகவும் பரிதாபமாக.
‘இல்லை’ என்பது போல் தலையசைத்தவள், பரமன் வந்ததை பற்றி கணவனிடம் மெல்ல கூற ஆரம்பித்தாள்.
“இன்னைக்கு நான் ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வரும்போது அந்த பரமன் வந்தார். என்னை பார்த்ததும் கொஞ்சம் சங்கடமா தயங்கி நின்னார்.”
பிறகு, “என்ன மன்னிச்சிடுமா, என்னால தான் உன் வாழ்க்கை இவ்வளவு கஷ்டமாயிருச்சு. என்னை தப்பா நினைச்சுடாத, என் தொழிலே அதுதான். ஆனா உன்னுடைய வாழ்க்கை இப்படி திசை மாறி போகும்னு நான் நினைக்கவே இல்ல.” என்றார் மிகவும் வருத்தமான குரலில்.
“பரவாயில்லைங்க ண்ணா, என் மேலயும் தப்பு இருக்கு. அவருக்கு தெரியாம நானும் பணம் வாங்கி இருக்கக்கூடாது. சின்னத் தொகையா இருந்தா கூட பரவாயில்லை, லட்சக்கணக்கில் எனும்போது யாருக்காக இருந்தாலும் கோபம் வரத்தானே செய்யும்.” என்றாள் கணவனை விட்டுக்கொடுக்காமல்.
“நீ சொல்றது சரிதான்மா, ஆனாலும் என் பக்கமும் தப்பிருக்கு. நீ வந்து இவ்வளவு பெரிய தொகையை கேட்டதும் உங்க வீட்டுக்காரரை கூட்டிட்டு வா, பணம் கொடுக்கிறேன்னு நான் சொல்லிருக்கணும். அப்படி சொல்லாம வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை கொடுத்ததும் என் தப்பு தானே?” என மிகவும் வருந்தியவர்,
“தயவுசெஞ்சி என்னை மன்னிச்சிடுமா! உன்கிட்ட நடந்த மாதிரி இனி யார்கிட்டயும் நடந்துக்க கூடாதுனு முடிவே பண்ணிட்டேன். இனி அதிக வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவதும் இல்லை. உன் வாழ்க்கை மத்தவங்களுக்கு ஒரு பாடமா இருக்குமா, இருக்காதா தெரியாது. ஆனா எனக்கு இது ஒரு பெரிய பாடம். அதிகமான வட்டி பணத்துக்கு ஆசைப்படக் கூடாதுனு எனக்கு புரிய வச்சது நீ தான்மா.” என்றவரின் வார்த்தைகள் கொடியை மிகவுமே சங்கடப்படுத்தியது.
மேலும் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், “சரிதான் அண்ணா, நான் கிளம்புறேன்.” என நகர போக,
“பூங்கொடி உன்கிட்ட ஒரு உண்மையை சொல்லணும். இதை யார்கிட்டயும் சொல்ல கூடாதுனு உன்னுடைய வீட்டுக்காரர் சொன்னார். ஆனா உன்னை பார்க்கும் போது அதை சொல்லாம இருக்க முடியல. இது தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுமா.” என்ற பரமன்,
தயங்கி பின், “உன்னுடைய வீட்டுக்காரர் உன்னை அப்படியே விட்டுடல. இந்த பிரச்சனை ஆரம்பிச்சதுமே ரெண்டு போலீஸோட வந்து என்னை பார்த்தார்.
ரொம்ப பிரச்சனை பண்ணார் பாப்பா. வீட்டு ஆம்பளைங்ககிட்ட கேட்காம எதுக்கு பணம் கொடுக்கிற, பொம்பளைங்ககிட்ட தான் உன் வேலைய காட்டுவியா? இதுதான் நீ தொழில் செய்ற லட்சணமா, என் பொண்டாட்டியை வந்து மிரட்டினது மட்டும் எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா, உன்னை உப்புக்கண்டம் போட்டுருப்பேன்னு சத்தம் போட்டு, ரொம்ப பிரச்சனை பண்ணிட்டார் பாப்பா.
அதுமட்டுமில்லாம அப்பவே கடனை கணக்கு பார்த்து அசல் எவ்வளவு, வட்டி எவ்வளவு என எல்லாத்தையும் சேர்த்து செட்டில் பண்ணிட்டார். இப்போதைக்கு யார்கிட்டயும் சொல்ல வேண்டாம், வீட்டுல நானே சொல்லிக்கிறேன்னு சொன்னார்மா.” என்றதும் கொடியின் முகத்தில் வேதனை அப்பட்டமாக தெரிந்தது.
கொடியின் முகத்தில் தெரிந்த வேதனையைப் பார்த்த பரமன் பேச்சை அப்படியே நிறுத்தினான்.
“பாப்பா…” என ஏதோ சொல்ல போக,
“ரொம்ப நன்றி அண்ணா! எனக்கு பெரிய ஹெல்ப் பண்ணி இருக்கீங்க. அந்த நேரம் நீங்க பணம் கொடுத்து உதவவில்லை என்றால், நிச்சயம் நான் இதைவிட பெரிய பிரச்சனையில மாட்டிருப்பேன். என் குடும்பமே என்னோட சேர்ந்து அவமானப்பட்டுருக்கும். அப்படி எந்த பிரச்சனையும் வராமல் காப்பாத்தினது நீங்கதான். அதுக்காக எப்பவும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். ரொம்ப நன்றிங்க அண்ணா!” என்றவள்,
“நான் கிளம்புறேன் ண்ணா, வந்து ரொம்ப நேரம் ஆயிடுச்சு, வீட்டுல தேடுவாங்க.” என பரமனிடம் சொல்லிக்கொண்டு அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் வேகமாக நடந்தாள்.
பரமனுக்கும் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று தெரியவில்லை. கொடி ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்திவிட்டு செல்லும் போதெல்லாம், இளங்கோவை அழைத்து சொல்லிவிட்டு பணத்தையும் அவனுக்கு அனுப்பி வைத்துவிடுவான்.
‘உங்க சம்சாரத்துக்கிட்ட உண்மையை சொல்லுங்க சார்.’ என பரமனே பலமுறை சொல்லிருக்கிறான்தான். ஆனால் அப்போதெல்லாம் இளங்கோ காதில் வாங்கியது போலவே தெரியவில்லை. இனி, தான் செய்ய ஒன்றுமில்லை என்று தன் வேலையைப் பார்க்க கிளம்பி விட்டார்.
சற்று தூரம் சென்று இருப்பாள் கொடி, அவளால் பரமன் கூறியதைக் கேட்டு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
பணம்! இத்தனை நாட்களாக இந்த பணத்தை வெறும் காகித குப்பை என்றே நினைத்திருந்தாள்.
ஆனால் இந்த காகிதக் குப்பை தான் வாழ்க்கை என்பதை, கணவனும் மற்ற ஆட்களும் சாட்டையால் அடித்தது போல அவளுக்கு உணர வைத்திருக்கிறார்கள்.
வெறும் காகிதத்திற்கு இருக்கும் மதிப்பு கூட, சக மனிதனின் உயிருக்கும் உணர்விற்கும் இல்லையா? பணமில்லாமல் வாழ்க்கை இல்லை தான், ஆனால் பணமே வாழ்க்கையில்லையே?
அவரிடம் சொல்லாமல், கேட்காமல் ஒரு தவறு செய்துவிட்டோம். அதற்கான தண்டனைதான் கணவனின் கோபமும் புறக்கணிப்பும் என்று எவ்வளவு முட்டாள்தனமாக நினைத்திருக்கிறோம்.
அப்படியெல்லாம் இல்லை என நெற்றிப்பொட்டில் அறைந்தது போல உணர வைத்துவிட்டானே கணவன்.
நீ வாங்கிய கடன், அதை நீதான் கட்டவேண்டும். என்னிடமிருந்து மட்டுமல்ல, யாரிடமும் எதையும் வாங்கி இந்த கடனை கட்டக்கூடாது என்றான்.
இப்போது வரை அப்படித்தான் இருந்தாள். பழக்கமில்லாத வேலைகளுக்கு சென்றாள். காட்டு வேலைக்கு மட்டுமல்ல, கிடைக்கும் அத்தனை கூலி வேலைக்கும் சென்றாள்.
பிரச்சனை என்றான பின், கணவனின் பணத்தில் இருந்து தனக்காக எதையுமே செய்து கொண்டதில்லையே? பின் எப்படி பணத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தான்.
அப்படியே இருந்தாலும் கடனை அடைத்துவிட்டதை சொல்லிருந்தால், இவ்வளவு வேதனை இருந்திருக்காதே… வெயில், மழை என உடலை வருத்தி வேலை செய்தது கூட அவளுக்கு பெரியதாக தெரியவில்லை. ஆனால் அவளின் மனம்! அந்த மனம் ஒவ்வொரு நாளும் அமிலத்தில் விழுந்து எழுந்தது போல் துடித்த துடிப்பு, கதறிய கதறல், அதை கூட அவன் உணரவில்லையே?!
இரண்டு வருடங்கள் மொத்தமாக தன்னை சிதையில் தள்ளி, தீயை மூட்டிவிட்டானே… இனி ஏன் வாழ? யாருக்காக வாழ? குழந்தைகள் என மனம் மருக, இல்லையே… அவர்களுக்குமே நான் வேண்டாதவளாகிவிட்டேனே… பெற்ற தாயை விட்டு தனியாக போக துணிந்த குழந்தைகளைப் பற்றி, நான் ஏன் யோசிக்க வேண்டும்? அப்படி போக துணிந்தவர்களுக்கு நான் யார்?
நல்ல மனைவியாக இல்லை! நல்ல தாயாகவும் இல்லை! இனி வாழ்ந்து என்ன பிரயோஜனம்? என நினைத்த நொடிதான் இதயம் வேகமாக துடிக்க, பார்வை மங்க, கால்கள் துவழ அப்படியே மயங்கி விழுந்தாள் கொடி.
தன் வலியையும் மீறி கணவனிடம் அனைத்தையும் கூறியவள், “ஏற்கனவே நீங்களும் உங்க பிள்ளைங்களும் எடுத்த முடிவுபடி, மதுரைக்கு போகலாம். நான் இனி உங்க வாழ்க்கையில எங்கேயும் இல்ல. இனி உங்க கூட எந்த மன வருத்தமும் இல்லாம வாழ முடியும்னு எனக்குத் தோனல.” என்றவளுக்கு தொடர்ந்து பேசியதால் மூச்சு வாங்கியது.
அவள் பேச பேச அடுத்து என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்துப் போய் அமர்ந்திருந்தான் இளங்கோ. அவன் யோசிக்காத கோணம் இது. பழிவாங்க வேண்டும் என்று எதுவும் செய்யவில்லையே. மனைவிக்கு நிதர்சனம் புரிய வேண்டும் என நினைத்து, தனக்கு தோன்றியதை எல்லாம் செய்தான்.
இதில் தன் அம்மாவும் சேர்ந்து கொள்ள, எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றியது போலாகிவிட்டது அவன் செயல்.
“கொடி!” என்றான், ஆனால் காற்றாகத்தான் வந்தது குரல். என்ன பேசுவான்? என்னதான் பேச முடியும்? மொத்தமாக அவனை முடித்துவிட்டாளே!
“இனி எந்த பிரச்சனையும் செய்யாம, தயவு செய்து என்னை எங்கப்பா கூட அவர் வீட்டுக்கு அனுப்பிடுங்க.” என்றாள் விரக்தியின் உச்சமாக.
அந்த குரலுக்கு சரியென்பதைத் தாண்டி வேறென்ன பதில் கொடுத்திட முடியும்?
சரியென்றுவிட்டான் கொடியின் நாயகன். பசி மறந்த பின்பு பந்திக்கு அழைப்பதும், மனசு வெறுத்த பின்பு மன்னிப்பு கேட்பதும் ஒன்று தானே?! என்ன செய்வான் இளங்கோ? இனி என்னதான் செய்யமுடியும் இளங்கோவினால்? காதல் ஓடிடுமோ வெகு தூரம்…
***