23
திருப்புகழை குற்றவுணர்வு கொன்று தின்றது. தான் வேறு அவளை காயப்படுத்தி விட்டோமே, தன்னை எப்படியெல்லாம் அவள் பார்த்தாள். ஒரு மாதம் முன்பு நேரில் வந்து அவனுக்கு எதிர்பாரா இன்ப அதிர்ச்சியை அள்ளி வழங்கியவளை, அதிகம் காயப்படுத்திவிட்டோமே என்ற யோசனையே அவனுக்கு.
ஒரு மாதம் முன்பு அதிகாலையிலேயே அவனுக்கு அழைத்திருந்தான் செல்வின். “சொல்லுடா நல்லவனே!” என்றவாறே போனை அட்டென்ட் செய்தான் புகழ்.
“திரு எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணணும்டா.”
“என்ன காலையிலேயே ஹெல்ப் அது இதுன்னு, என்ன விஷயம்?” என்றான் மற்றவன்.
“என் ஃப்ரண்டு ஒருத்தர் அமெரிக்கா வந்திருக்காங்கடா, அவங்களை பிக்கப் பண்ணி அவங்க சொல்ற இடத்துல ட்ராப் பண்ணணுமே ப்ளீஸ்…”
“டேய் நாளைக்கு எனக்கு முக்கியமான செமினார் ஒண்ணு இருக்கு. நான்தான் ப்ரோசீட் பண்ணுறதா இருக்கேன். என்னோட ரொம்ப முக்கியமான ஃபைனல் செமினார்டா அது. அதுக்கான வேலையில இருக்கேன். என்னை போய் வெளிய அலைய சொல்றியேடா?”
“நிஜமாவே உன்னால முடியாதாடா?” என்று எதிர்முனையின் குரல் உள்ளே போகவும், எப்போதும் உதவி என்று அவனிடத்தில் அதிகம் வந்து நின்றிருக்காத நண்பனுக்காக, சென்றால் தான் என்ன என, தன் வேலையை சீக்கிரம் முடித்து போகலாம் என்று எண்ணியவன், “செல்வின் இருக்கியாடா?”
“ஹ்ம்ம்… இருக்கேன்டா.”
“நான் போறேன்டா.” என்றான்.
“உனக்கு முடியலைன்னா அவங்களே பார்த்துக்க சொல்றேன்டா.”
“நோ, வேணாம். நான் பார்த்துக்கிறேன், நீ வொர்ரி பண்ணாதே ஹான்…!” எத்தனை மணிக்கு வர்றாங்க என்ற விபரம் எல்லாம் கேட்டுக் கொண்டான். வருபவரின் பெயரை அவன் கேட்க, அதற்குள் லைன் துண்டிக்கப்பட்டுவிட்டது.
இவன் நண்பனுக்கு அழைக்க, அழைப்பு அடித்து ஏற்கப்படாமல் ஓய்ந்தது. அவசரமாய் அவனுக்கு மற்ற விஷயத்தை வாட்ஸ்அப்பில் அனுப்புமாறு சொல்லிவிட்டு இவன் கிளம்ப தயாரானான்.
இவன் கேட்ட தகவலை அவன் அனுப்பி இருக்க, அதை மேலோட்டமாய் பார்த்தவன் காரை கிளப்பியிருந்தான், இப்போதே கிளம்பினால் தான் விரைந்து செல்ல முடியும் என்ற எண்ணத்தில்.
ஏர்போர்ட் வந்தவன் விசாரித்துக் கொண்டு உள்ளே செல்ல, விமானம் தரையிறங்கி அரை மணி நேரத்திற்கும் மேல் ஆகியிருந்தது. பிரயாணிகள் இப்போது தான் வெளியே வந்து கொண்டிருக்க, தனக்கு ஒரு ஹாட் சாக்லேட் வாங்கிக் கொண்டவன், அதை பருகிக் கொண்டே வழியை பார்த்துக் கொண்டிருந்தான்.
பேரு பார்க்காம விட்டுட்டோமே என்ற யோசனை வர, ஜீன்ஸ் பாக்கெட்டில் வைத்திருந்த போனை கையில் எடுத்து செல்வின் அனுப்பி இருந்த டிக்கெட்டை பார்த்தவன், இன்பமாய் அதிர்ந்து நிமிரவும் அவனவள் அவன் எதிரே வந்து நிற்கவும், குடித்துக் கொண்டிருந்ததை அருகில் இருந்த பின்னில் போட்டுவிட்டு, விரைந்து வந்து தன்னவளை அணைத்துக் கொண்டிருந்தான்.
“சொல்லவே இல்லை…” என்று அவள் காதுக்கருகில் அவன் குரல் கேட்க, “உங்களை பார்க்க நான் சொல்லிட்டு தான் வரணுமா?” என்றவளை, நிமிர்ந்து அவள் கண்களை ஆழ்ந்து நோக்கினான். அவன் மீதான மொத்த காதலையும், கண்களில் தேக்கி வைத்திருந்தவளின் கண்கள் அதை அவனுக்கு கடத்தியிருக்க, அவள் இதழின் மீது தன் அதரங்களை நொடியில் ஒற்றி எடுத்திருந்தான். அவள் அதை உணரும் முன்பே, “வா, போகலாம்.” என்று லக்கேஜை எடுத்துக் கொண்டிருந்தான்.
இதோ வீட்டிற்கும் வந்து சேர்ந்து விட்டிருந்தனர். அளவான சின்ன அபார்ட்மெண்ட் அவனது. இரண்டாம் மாடியில் தான் அவன் அறை. ஒரு ஹால், இரு படுக்கையறை என்று அதி நவீன வசதிகள் கொண்டு அளவாகவே இருந்தது.
“சாரும்மா…” என்றான் வெகு ஏக்கமாய்.
“மாமாக்கு போன் பண்ணி சொல்லணும்.” என்றாள் மனைவி.
“ஹ்ம்ம்… சொல்லலாம், எப்படி வரணும் தோனுச்சு, எனக்காகவா?” என்றவனின் குரலில் அப்படியொரு குழைவு.
“எனக்காகவும்.” என்றாள் பெண்ணவள்.
“லவ் யூ சாரு, லவ் யூ!” என்றவன், அவள் முகத்தை கையில் ஏந்தி நிதானமாய் அவள் இதழை சுவைத்தான். அவளும் கிறங்கி நின்றிருந்தவள் சட்டென்று அவனை உதறினாள்.
“என்னாச்சுடி?” என்றான் பாதியில் அவள் தள்ளிவிட்ட எரிச்சலில்.
“பிரஷ் பண்ணவே இல்லை, போங்க…” என்று அவள் சொன்ன தொனியில் சிரித்தவன், “நான் பண்ணிட்டேன்.” என்றான் விஷமமாய்.
“நான் என்னைச் சொன்னேன்.”
“கவலைபட வேண்டியவன் நான், நீ என்னடி பிகு பண்ற?”
“ச்சு… டாக்டர் மாதிரி பேசுங்க.”
“ஏன் டாக்டர் டர்டி கிஸ் அடிக்கக்கூடாதா, என்ன?”
“அச்சோ! என்னப்பா இப்படிலாம் பேசுறீங்க? நீங்க ரொம்ப நல்ல பையன் நினைச்சேன்…”
“யார் சொன்னா அப்படின்னு? நான் ஊருக்கு வேணா நல்லவனா இருந்துக்குறேன். உன்கிட்ட கெட்ட பையன் தான் எப்பவும்.” என்று, அவன் இதழ்கள் காதை உரசி சொல்ல, கூசிப் போனாள் அவள்.
“போங்க…” என அவனைத் தள்ளிவிட, “ரெஸ்ட் ரூம் உள்ள இருக்கு.” என்று அவன் அழைத்துச் சென்றான். வீட்டிற்கு அழைத்து சிவகுருவிடம் வந்து சேர்ந்த விபரத்தை இவள் சொல்ல, செல்வினை ஒரு வழி செய்து கொண்டிருந்தான் திருப்புகழ்.
“அவ வர்றானு நீ எப்படி என்கிட்ட சொல்லாம இருப்ப?” என்று அவனை உண்டு இல்லை என்று ஆக்கிவிட்டான். அவன் காலில் விழாத குறையாக அழவும் தான் பேசாதுவிட்டான்.
இரண்டு நாட்கள் அவனுக்கு வேலை அதிகமிருக்க, அவளும் அவனை தொந்தரவு செய்யவில்லை. மேலும் இரண்டு நாளை அவன் வேலை இன்னும் விழுங்கிக் கொள்ள, தவித்து தான் போனாள் பெண்.
அன்று இரவு களைத்து வந்தவனை, பார்க்கவே அவளுக்கு பாவமாய் இருக்க, “என்னப்பா ரொம்ப கஷ்டமா இருக்கா?”
“கஷ்டம்னு பார்த்தா முடியுமா செல்லம்? அல்மோஸ்ட் எல்லாம் முடிஞ்சது, இனி சீக்கிரமே இந்தியா வந்திருவேன். அப்புறம் உன்னோட மட்டும் தான்.” என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.
அவனை சாப்பிட வைத்து தானும் உண்டு இருவரும் உறங்கச் சென்றனர். தன்னவளை அணைத்தவாறே படுத்தவன் நொடியில் உறங்கி போனான் அலுப்பில்.
உறக்கம் சட்டென்று கலைந்திருக்க விடிந்தும் விடியாத அதிகாலை பொழுதில், இருளில் கையைத் துழாவி மனைவியை தேட, மெல்ல கண் விழித்தான். அருகில் காலியாய் இருக்க, எழுந்து அமர்ந்து குளியலறையை பார்த்தான். அங்கு இருப்பதற்கான அறிகுறி இல்லை என்கவும், எழுந்து இவன் விளக்கை போட்டு திறந்திருந்த கதவின் வழியே ஹாலுக்கு வர, அங்கும் அவளில்லை.
அடுத்த அறையில் ஏதோ உருட்டும் சத்தம் கேட்க, ‘இங்க என்ன பண்றா?’ என்று யோசித்தவன், வேகமாய் கதவைத் திறக்க, “ஹவுச்!” என்ற சத்தம் கேட்க, இவனை எதிர்பாராதவள் பயந்து பின்னால் சாய, புகழின் கை அவள் இடையை வளைத்தது.
“இங்க என்னடி பண்ணிட்டு இருக்க?” என்றவன் அறையை சுற்றிப் பார்க்க, அவனுக்கு விஷயம் புரிந்து போனது. என் பர்த்டேக்காக தான் இவ வந்தாளா என்று உவகை அவன் முகத்தில்.
“ம்ச்… நீங்க ஏன் எழுந்து வந்தீங்க? போங்க… சர்ப்ரைஸ் எல்லாம் போச்சு. களைச்சு போய் தூங்குறீங்களே, காலையில் கேக் வெட்டிக்கலாம்னு இப்பவே ரெடி பண்ணிட்டு இருந்தேன்.” என்றாள் அவள் சலிப்பாய்.
“ப்பா, அதான் முழிச்சுட்டீங்களே, கேக் வெட்டிடலாமா?”
“ஓ… வெட்டலாமே…”
“வேற ட்ரெஸ் மாத்திட்டு வர்றீங்களாப்பா?”
“எடுத்து வச்சிருக்கியா என்ன?”
“ஹ்ம்ம்…” என்றவள் அவனுக்கான உடையை எடுத்துக் கொடுக்க, அறைக்கு சென்றவன் குளித்து அந்த உடையை அணிந்து கொண்டு வந்தான்.
அங்கு அவன் மனைவி, தன்னவன் அவளின் பிறந்த நாளிற்காய் எடுத்து கொடுத்த புடவையை அணிந்திருக்க, கண்ணில் மின்னல் ஓட வேகமாய் வந்து அவளை அணைத்துக் கொண்டான்.
“இதான்டி எனக்கு பெரிய சர்ப்ரைஸ்! சாரியே கட்டாம எனக்கு போக்கு காட்டிட்டு இருப்ப, இப்படி அதிர்ச்சி கொடுக்குறியே… லிட்டில் ஹார்ட் எவ்வளவு அதிர்ச்சி தான் தாங்கும் சொல்லு?” என்று நெஞ்சைப் பிடித்தான்.
“நான் புடவை கட்டினாலே உங்க பார்வை எங்கெல்லாமோ பார்க்குது. அதான் நான் கட்டாம இருந்தேன்.”
“இப்போ…” என்றவனின் பார்வை ரசனையாய் அவளை வருட, “கேக் வெட்டுங்க முதல்ல…” என்று பேச்சை மாற்றினாள் அவள். பெருமூச்சு ஒன்றை வெளியேற்றியவன், அவள் சொன்னதை செய்தான். கேக்கை அவன் வெட்டவும் அவனுக்கு முன்னே அதை எடுத்து அவள் தன்னவனுக்கு ஊட்ட, பதிலுக்கு ஊட்டாது நின்றான் அவன்.
“எனக்கு ஊட்ட மாட்டீங்களா?”
“கேக் எனக்கு தானே, அப்போ நான்தான் சாப்பிடுவேன்.” என்றவன், ஒரு துண்டை வெட்டி அவன் வாய்க்கு கொண்டு சென்றவன், சட்டென்று அவள் வாயில் ஊட்டவும் அதிர்ந்து அவள் வாங்கிக் கொள்ள, ஊட்டியவனே அதை வேறு விதமாய் எடுத்துக் கொள்ளவும், அங்கு சத்தங்கள் மட்டுமே மொழியாகியது.
“என்னால முடியலைடி சாரு…” என்று அவள் இடையில் அழுத்தம் கொடுத்தவன், அவள் காது மடலை உரசியவாறே சொல்ல, அவளும் மயங்கி நின்றிருந்தாள். காதைத் தீண்டிய அவனின் ஊஷ்ணமான மூச்சுக்காற்றே சொன்னதே அவன் நிலையை.
அவள் மட்டும் வேண்டாம் என்றா எண்ணினாள்? அவளும் விரும்பியே அவனுடன் இழைந்து நின்றிருந்தாள். “சாரு பதில் சொல்லுடி…” என்று அவன் மீண்டும் கேட்க, “உங்க பர்த்டே கிஃப்ட் நான் தான்னு என் வாயால வேற சொல்லணுமா?” என்ற அவளின் பதிலில் மகிழ்ந்தவன், அவளை இரு கைகளால் தூக்கிக் கொண்டு தங்கள் அறைக்குள் நுழைந்து, அவளுடன் கட்டிலில் சரிந்தான்.
தன்னை அவனுக்கு முழுதாய் கொடுத்தவள் தானும் அவனை மொத்தமாய் எடுத்துக் கொண்டிருந்தாள். யார் ஆட்கொண்டது, யார் ஆண்டது என்ற கேள்விக்கே இடமின்றி, இருவருமே சரிசமமாய் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டிருந்தனர்.
அவர்களின் இத்தனை வருட காதலும் காத்திருப்பும் அன்பின் விருந்தாய் பரிமாறிக் கொண்டார்கள் இருவரும். அவள் அங்கிருந்த மேலும் பத்து நாட்களும் புகழ் வெளியே செல்லவேயில்லை. அறை மட்டுமே அவர்கள் உலகமாய் இருந்தது.
பசித்தால் வெளியே சென்று உண்டனர். அவளை வெளியே அழைத்து செல்லவே இல்லையே என்று, ஒரு நாள் அவள் விரும்பியவாறு நயாகரா பார்க்க அழைத்துச் சென்றிருந்தான்.
***
விமானத்தில் அறிவிப்பு கேட்க, சீட் பெல்டை மாட்டி நிமிர்ந்து அமர்ந்திருந்தான் திருப்புகழ். சற்று நேரத்தில் டெல்லி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியது.
அங்கிருந்து மாலை தான் வேறு விமானம் என்பதால், அருகில் இருந்த ஹோட்டல் ஒன்றில் அறைய எடுக்க பார்க்க, ஏதோ மந்திரிகள் மாநாடு என்று சீக்கிரத்தில் அவனுக்கு அறையே கிடைக்கவில்லை.
சற்று தொலைவில் இருந்த ஹோட்டல் ஒன்றில் அறையை புக் செய்தவன் கட்டிலில் வந்து விழுக, அலைபேசி அழைப்பு விடுத்தது. எடுத்துப் பார்க்க செல்வின் என்றிருந்தது. “சொல்லுடா…” என்றான் இவன்.
“நீயெல்லாம் மனுஷனே இல்லை தெரியுமா? இப்போ உனக்கு நிம்மதியாடா? என் தங்கச்சியை நீயும் உங்கம்மாவும் சேர்ந்து பேசி ஊரை விட்டே போக வச்சுட்டீங்கள்ல… சந்தோசம் தானே உனக்கு? நிம்மதியா இருங்க, நீங்க மட்டும் நிம்மதியா இருங்க. அவளுக்கு எதாச்சும் ஆச்சு, நண்பன்னு கூட பார்க்க மாட்டேன்.” என்று எதிர்முனையில் கத்தியவன், இவன் பேசவே இடம் கொடாது போனை வைத்துவிட, புகழுக்கு பதட்டம் கூடியது.
‘எங்க போயிருப்பா?’ அறையில் இருக்க முடியவில்லை. மாறி மாறியாவது பிளைட் பிடித்து சென்றுவிடுவோம் என்று எண்ணி கிளம்பிவிட்டான்.
அவன் போதாத நேரம் அவன் சென்ற கார் விபத்துக்குள்ளாகிவிட, நினைவு மங்கும் நேரம் கூட தன்னவளைக் காணாது அவளை விட்டுச் சென்றுவிடுமோ என்ற எண்ணம் ஓட, “சாரு” என்றவாறே தான் அவன் நினைவு பிரிந்தது.
ஆயிற்று, அவன் நினைவு திரும்பி அவன் உடல்நிலை தேற ஒரு மாதத்திற்கும் மேலானது. கண்களில் ஜீவனே இல்லாது இருந்தவனைப் பார்த்தாலும், மனமிறங்காது அவனிடத்தில் பேசாது அமைதி காத்தார் சிவகுரு.
காரணம், மனைவியின் பேச்சை அரைகுறையாய் கேட்டு, மருமகளை பேசி அவளை தொலைத்து நிற்கிறானே மகன் என்ற கோபம், அவரை அவனிடத்தில் பேச செய்யவில்லை.
வசந்தா அத்துடன் விட்டாரா? சிவகுருவையும் அதிகம் பேசிவிட்டார். ஆட்டோ ஓட்டிட்டு தானே இருந்தீங்க, நீங்க எனக்கு சமமா என்று, அதனால தானே அவ பேசினா என்று சொல்லி, கணவரின் அன்பையும் கொன்றுவிட, அன்றில் இருந்து அவர் மனைவியிடத்திலும் பேச்சை நிறுத்திவிட்டார்.
‘என்னை தேட வேண்டாம், மீறினால் என் தாய், தந்தையிடம் சேர்ந்துவிடுவேன்.’ என்ற அவளின் மெசேஜை பார்த்தவர், மேற்கொண்டு ஒன்றும் செய்யவில்லை. அவளை அழைத்து வந்து அவரின் மனைவி என்னும் அரக்கியிடம் விட அவரால் முடியாது.
மனைவிக்கு காவலாய் நிற்க வேண்டியவன், அன்னைக்கு பார்த்து மனைவியை பேசியிருக்க, அவனை நம்பி மருமகளை அழைத்து வரவும் அவர் விரும்பவில்லை.
செல்வின் தான் சாருவை விடாது தேடி பிடித்திருந்தான். அவனிடம் அவள் உயிரை மாய்த்துக் கொள்வேன், யாரிடமும் சொல்லக் கூடாது என்றிருக்க, எட்டி நின்று அவளுக்கு பாதுகாவலனாய் நின்றான்.
அவன் மனைவியிடத்தில் அவ்வளவு சண்டை பிடித்திருந்தான். சிவகுரு தான் அவனை சமாதானம் செய்திருந்தார். “வேணும்னா அவ சொல்லியிருப்பா, என்னைக்கு உண்மை தெரிஞ்சு இருந்தாலும் வசு இதைதான் செஞ்சிருப்பா.” என்று அவர் முடித்துவிட்ட பின்னே தான் அவன் அமைதியானான்.
ஆனாலும் அவ்வப்போது மனைவியை வறுத்து எடுத்து விடுவான். ஜெனிக்கும் தன்னால் தான் என்ற குற்றவுணர்வு. அதனால் தான் சாருவைப் பற்றிய விஷயங்களை, திருப்புகழ் மருத்துவமனையில் இருந்து சரியாகி நேரே அவன் வீட்டிற்கு வந்த அன்றே சொல்லியிருந்தாள்.
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவன் நேரே சென்று நின்றது செல்வினின் வீட்டிற்கு தான். “என்ன வேணும்?” என்று வீட்டிற்குள்ளே விடாது, வாசலிலேயே வழிமறித்தான் நண்பன்.
“சாரு எங்கடா?”
“நீ வெளிய அனுப்பிட்டு என்கிட்ட வந்து கேட்குறியா?” என்று காய்ந்தான் மற்றவன்.
எட்டி அவன் சட்டையைக் கொத்தாய் பற்றிய புகழ், “மரியாதையா சொல்லப் போறியா, இல்லையா?” என்றான் அவனுக்கு குறையாத கனலுடன்.
“எனக்கு தெரியாது. என்கிட்ட கூட அவ சொல்லிட்டு போகலை, எல்லாம் உன்னால…” என்று அவன் முகம் பார்க்காது சொன்னவனை, புகழ் நம்பவில்லை. ஆனால் அவன் சட்டையை விட்டான், என்ன கேட்டாலும் இவன் சொல்ல மாட்டான் என்று புரிந்தது அவனுக்கு.
பிடிவாதக்காரிக்கு அண்ணன் ஆயிற்றே! அழுத்தகாரானாய் தானே இருப்பான் என்று எண்ணியவன், விரக்தியாய் அங்கிருந்து நகர, அன்று மாலையே அவனை அழைத்து விபரத்தைக் கொட்டிவிட்டாள் ஜெனி. உடன் அவனின் மன்னிப்பும் வேண்டி அழுதவளை, சமாதானம் செய்தவன் தன்னை சரி செய்து கொண்டான்.
இருவருக்குமே இந்த பிரிவு தேவை என்று உணர்ந்தவன், அவளை தன் கண்காணிப்பிலேயே வைத்திருந்தான். இப்போது கூட அவன் அவளை அழைத்து வந்தது சமாதானம் செய்யவல்ல. அவனின் அன்னை அவனுக்கு பொண்ணை பார்க்கிறேன், திருமணம் செய்து வைக்கிறேன் என்று அவன் உயிரை எடுப்பதால் மட்டுமே.
தன் மகனை பார்த்தாலாவது அன்னை மாறுவார் என்ற எண்ணமும் தான். மனைவியை சமாதானம் செய்ய அவனால் முடியுமாவென்று இன்னமும் கூட அவனுக்கு தெரியவில்லை.
***
1 comment
எதுக்குடா சமாதானம் ஆகணும்..? நீங்க திரும்ப திரும்ப காயப்படுத்தவா..?
😔😔😔
CRVS (or) CRVS 2797