9
“எதுக்கு இவ்ளோ கோபம் உன் அண்ணன் மேல? உன்மேல இருக்க பாசத்துலதானே அப்படி செய்தாங்க. அவரை நீ ஹர்ட் பண்ற மாதிரி பேசிட்ட.” மனோகரியிடம் தனியாகப் பேசவேண்டும் என்று, உள்ளே வந்த முரளியைப் பார்த்து சிலைபோல் நின்றவளின் விழிப்பார்வையில் அவனும் அவளையே நோக்க, தேவையில்லாமல் கம்பராமாயணத்தில் வரும், ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ என்ற வரிகள் மனதில் வலம் வர, அதை நினைத்தவனின் உதட்டில் விஷமப் புன்னகை குடியேற, தன்னைப் பார்த்தபடியே நின்றிருந்தவளின் எண்ண ஓட்டத்தை, நிகழ்வுக்கு கொண்டுவரும் பொருட்டு முரளி இதைச் சொன்னான்.
“என்ன, என்மேல பாசத்துல செஞ்சுட்டான், பாசத்துல செய்தாலும் தப்பு தப்புத்தானே? இரவல் நகையை வாங்கி போட்டா வந்தவங்க என்ன நினைப்பீங்க? அது எங்களோடது, எதோ நகை நட்டெல்லாம் வச்சு இருக்காங்க போலனு நினைக்கமாட்டீங்க? அப்புறம் அது ஓசி நகைனு தெரிஞ்சா எங்களைப்பத்தி தப்பா நினைப்பீங்க. காசுக்கும் பணத்துக்கும் ஆசைப்படுறவங்கனு தோனும்.” என தயக்கத்தை உடைத்து படபடனெவ பேசியவளை, ‘ஆவென்று’ பார்த்தான் முரளி.
முரளி உள்ளே வந்ததும், மனோகரியின் அண்ணன் விட்டால் போதுமென ஓடிவிட, சில நொடிகள் இருவருக்கும் அமைதியில் கழிந்தது. அந்த அமைதியை கிழித்தது முரளிதான். “என்னைப் பற்றி உன்கிட்ட நிறைய சொல்லணும், அதுக்கு முன்னாடி உனக்கு என்னைப் பிடிச்சுருக்காத் தெரியணும், தெரிஞ்சாதான் சொல்லமுடியும்.” என,
“எனக்கும் தெரிஞ்சாதான் சொல்லமுடியும்.” என பட்டென்று மனோகரி சொல்ல,
நொடிநேரம் திகைத்தவன் முகத்தில் புன்னகை மலர, “அது சொல்லலாம், பட் எனக்கு ஒரு கொள்கை இருக்கு. என்னை முழுசா ஏத்துக்கிட்டு, என்னைக் கட்டிக்கப் போறவங்ககிட்ட தான் நான் உண்மையை சொல்ல முடியும். நான் ஃபர்ஸ்ட் உண்மையை சொல்ல, நீ வேண்டாம் சொல்லிட்டா? அது எவ்வளவு பெரிய இன்சல்ட்? அதுக்காகத்தான் இந்த முன்னெச்சரிக்கை.” என்றதும் மனோகரி சந்தேகமாய் பார்க்க,
“அதோட நான் சொல்றதுல, என்னைப்பத்தி மட்டும் இல்லாம, என் பேரண்ட்ஸோட ஸ்டோரியும் இருக்கு. அதனாலதான் யோசிக்குறேன். என்னைப்பத்தி நான் சொல்லலாம், ஆனா அவர்களைப்பத்தி யாரோ ஒரு மூன்றாம் மனுஷிகிட்ட சொல்ல முடியாதே.” என்று மனோகரியைப் பார்த்து கண்களை சிமிட்டிவிட்டு, பரிதாபமாய் விழித்தான்.
‘ஹான்!’ என்று வாய் பிளந்தவள், என்ன செய்தான். இப்போ, கண்ணடிச்ச மாதிரி தானே தெரிந்தது, ஆனா பாவமாய் நிக்குறான்.’ என்று யோசித்தபடியே நின்றவளைப் பார்த்தவன்,
“நான் என்ன அவ்வளவு கோரமாவா இருக்கேன்? சரி, நீ யோசிச்சு உன் அண்ணன்கிட்ட சொல்லிவிடு, நான் பிறகு வந்து பேசுறேன்.” என்று முரளி கிளம்பப்போக,
“எனக்கு படிக்கணும்.” என அறிவிப்பாய் அவள் சம்மதத்தைச் சொல்ல, முரளியின் முகத்தில் புன்னகையின் சாயல்.
“நான் எப்போ வேண்டாம்னு சொன்னேன். நீ படிக்கலாம், வேலைக்கும் போகலாம், உன்னோட வருமானத்தை நீ உங்க வீட்டுக்கே கொடுக்கலாம். எனக்கோ, அம்மா, அப்பாவுக்கோ அதுல எந்த ஆட்சேபனையும் கிடையாது.”
“தேங்க்ஸ், ஆனா அண்ணன் வாங்கிக்க மாட்டான்.” என்றாள் சோகமாய்.
“அதை அப்போ பார்த்துகலாம்.” என்றவன் திரும்பி நடந்துவிட, “நான் சரி சொன்னா, நீங்க என்கிட்ட உண்மையை சொல்றதா சொன்னீங்க.”
“எல்லாரும் நமக்காகத் தான் வெயிட் பண்றாங்க.” என்று வாய் விட்டே யோசித்தவன், அவள் முகத்தில் தெரிந்த கடுப்பைக் கண்டு சிரித்தப்படியே, தன் பிறப்பின் ரகசியத்தைச் சொல்லி முடித்தவன், “நானோ இல்லை மத்தவங்களோ உன்னைக் கட்டாயப்படுத்த மாட்டோம். நீ யோசிச்சு பதில் சொன்னா போதும்.” என்றதும் தீப்பார்வை பார்க்க, “அது உன்னை சும்மா சீண்டுறதுக்கு சொன்னேன். எப்படி இருந்தாலும் உண்மையை சொல்லித்தான் சம்மதம் வாங்கணும்னு முடிவே பண்ணிருந்தேன்.” என்று புன்னகைத்தவனை, முறைக்க முயன்றுத் தோற்றவளும் அவனோடு சிரித்தாள். கூடவே “தேங்க்ஸ்” என்ற வார்த்தைகளோடு.
“இந்த தேங்க்ஸ், சாரி என்ற வார்த்தைகள் நமக்குள்ள தேவைப்படாதுனு நினைக்கிறேன்.” என்றான் விழிகளில் குறும்பு மின்ன.
அன்றைய நாளில் இருவருக்குமே புன்னகைதான். “குட்டிம்மாவுக்கு விவரம் தெரியும்போது, நாம எல்லாம் ஒன்னா இருக்குறது போல பார்த்துக்கலாம். இப்போதைக்கு நீ ஜாயின் பண்றது தான் பெஸ்ட்னு தோனுது. வீக்லி ஒன்ஸ் மீட் பண்ற மாதிரி பார்த்துக்கலாம். என்னோட ஒபினியன் நான் சொல்லிட்டேன், இனி நீதான் முடிவு பண்ணணும்.” என்று முரளி முடித்துவிட, மனோகரிக்குத்தான் குழப்பமாயிருந்தது. பெரியவர்களிடம் பேசி ஒரு முடிவுக்கு வரலாம் என்று யோசித்து,
அதன்படியே அவளும் கூற, முரளி கூறியதையே அவர்களும் கூற, வேறு வழியின்றி அடுத்த ஒரு மாதத்தில் திருச்சியில் வேலையில் சேர்ந்தாள் மனோகரி. வார இறுதியில் இவள் வருவதும், அவர்கள் போவதுமாய் காலங்கள் கடுகாய் கரைந்தன.
அந்த வாரம் மனோகரி, நாங்குனேரி வந்திருந்தாள். முரளியின் வேலைப் பளுவால் வரமுடியாது என்றிருக்க, மனோகரி வந்திருந்தாள். அவளுக்கு தன் அண்ணனிடம் சில காரியங்கள் பேச வேண்டியிருந்தது.
ஞாயிறன்று தன் வீட்டிற்கு சென்றவள் அவனிடம், “அப்படியென்ன தலை போற பிரச்சனை? எதுக்கு இவ்ளோ அவசரமா வர சொன்ன? இன்னும் அவர் வீட்டுக்கு வரல.” என்றதும்,
“என்ன, என்ன சொல்ற? அத்தான் இன்னும் வரலையா? போன் செய்து கேட்டியா?” என்று பதறியவன், தன் வீட்டில் இருந்து முரளிக்கு அழைக்க, ரிங் போய்கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை.
அண்ணனின் பதட்டம் அவளையும் தொற்றிக்கொள்ள, “எதுக்கு இவ்வளவு பயம், பதட்டம்? எங்கிட்ட எதையும் மறைக்கிறீங்களா? உண்மையைச் சொல்லுங்க, என்ன நடக்குது இங்க? அவருக்கு என்ன?” என்று பயத்தில் கத்த,
“ஷ்ஷ்…! மனோ கொஞ்சம் பொறுமையா நான் சொல்றதைக் கேளு. நீ அவசரப்பட்டா ஒன்னுமே நடக்காது, அமைதியா இரு. அப்போதான் நான் சொல்றது உனக்குப் புரியும்.” என்றவன், அவளுக்கு குடிக்க நீரைக் கொடுத்து ஆசுவாசப்படுத்தினாலும், மனம் முரளிக்கு என்ன, என்ன என்பதிலேயே ஓடியது.
“அண்ணா இங்க பாரு, எனக்கு ஒன்னும் இல்ல. ஐ ஆம் ஆல்ரைட், மறைக்காம சொல்லு ப்ளீஸ்…”
மனோகரியின் வகையில் அவளின் குடும்பம் மட்டுமே வசதியில்லாதது. அவளின் சித்தப்பா, பெரியப்பாக்கள் எல்லாரும் ஓரளவிற்கு வசதியானவர்கள் தான். ரியல் எஸ்டேட் பிஸினஸில் இறங்கியவர்கள், இப்போது ஊருக்குள் பெயர் சொல்லும் அளவிற்கு வசதியானவர்கள்.
குறைந்தப் பணத்தைக் கொடுத்து, மிரட்டி நிலத்தை வாங்கி, அதைப் பலமடங்கு லாபத்தில் விற்று என, சட்டத்திற்கு புறம்பான சில செயல்களையும் செய்துள்ளனர்.
அதே ஊரில் உள்ளத் தர்மகர்த்தாவை கையில் போட்டுக்கொண்டு, கோவில் நிலத்தையும் ஏமாற்றி ரிஜிஸ்டர் செய்திருக்கிறார்கள். இதை ஊர் பொதுமக்களில் சிலர் மனு எழுதிக் கொடுக்க, அதை விசாரிக்கவும் நிலத்தை அளக்கவும் என, முரளியை அழைத்திருக்கிறார்கள்.
முரளியும் அவர்கள் செய்த குற்றங்களையும் குற்றவாளிகளையும் பட்டியலிட, அங்கே ஆரம்பித்தது பிரச்சனை. கோர்ட்டில் வழக்குப் போட பொதுமக்கள் யாரும் முன் வராமல் போக, முரளியே அதையும் செய்ய, வில்லன்களின் கோபம் முழுவதுமாய் முரளி மேல் திரும்பியிருந்தது.
அதோடு விடாமல் தேவையான ஆதாரங்களை அவர்களுக்கு எதிராகவும் திரட்டி கோர்ட்டில் வழங்க, குற்றவாளிகளுக்குத் தண்டனை உறுதியாகி விட்டது. இப்போ அவனோட ஆட்கள் முரளியைத் தேடிக்கிட்டு இருக்காங்க என்றவன்,
“நான் போய் எவ்வளவு கெஞ்சியும் அத்தான் கேட்கவே இல்ல. போலீஸ்க்கு போனாலும் ரெண்டு நாள், மூணு நாள் பாதுகாப்பு கொடுப்பாங்க, அப்புறம்?” என்றபடி மனோகரியைப் பார்க்க, அவளோ மிரண்டு போயிருந்தாள்.
“மனோ… மனோ… நீதான் அத்தான்கிட்ட பேசணும். அவரையும் ட்ரான்ஸ்ஃபர் வாங்க சொல்லி திருச்சிக்கு கூட்டிட்டுப் போயிடு. இங்கேயே இருந்தா பிரச்சனை முடியவே முடியாது.” என்றான்.
“எலிக்கு பயந்து வீட்டைக் கொழுத்தினக் கதைதான் இது. இதைச் சொன்னா அவர் என்ன சொல்லுவாரோ தெரியலயே. நான் மாமாகிட்ட பேசிட்டு, அவரையே பேசச் சொல்றேன். ஆனா அத்தையும் மாமாவும் அவரை விட்டு இருக்க மாட்டாங்களே…” என்றாள் யோசனையோடு.
“இதை முதல்ல சொல்லு, மாமாவே நான் சொல்றதைத்தான் சொல்வார். அவங்க சரி சொன்னா, அப்புறம் மத்ததை யோசிப்போம்.” என்றான்.
“ம்ம், சரி.” என்றதோடு கிளம்பியவள், தன் மாமனாரிடம் இதைப்பற்றி பேச, அவருக்கும் இதெல்லாம் முன்பே தெரிந்திருந்தது. ஆனால் அவர்களை மீறி என்ன செய்து விடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. அதோடு அவர்கள் வீட்டாட்கள் மேல் கை வைக்க எவனுக்கு தைரியம் இருக்கிறது என்ற எண்ணமும் இருந்தது.
ஆனால் மனோகரியின் பயம் அவருக்கு வேறு கதை சொல்ல, அவளது பயத்தையும் மதிக்க வேண்டும் என்பதால், முரளியிடம் பேசுவதாகக் கூறினார்.
அதுபோலவே அன்றிரவு வந்த முரளியிடம் பேச, அவனோ ஒத்துக் கொள்ளவே இல்லை. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் மனஸ்தாபங்கள் வர, அந்த வாரம் அவள் திருச்சியிலேயே இருக்க, முரளியும் செல்லவில்லை. இப்படியே இரண்டு வாரங்கள் நகர்ந்துவிட, முரளியின் பெற்றோர் அவனை வற்புறுத்த, வேறு வழியில்லாமல் தன் வேலை மாற்றத்திற்கு எழுதிக் கொடுத்தான்.
பெரியவர்களிடமே குழந்தை இருக்கட்டும் என்று முடிவு செய்து, முரளியும் மனோகரியும் திருச்சியிலேயே இருந்தனர். மனோகரியின் அண்ணனிடம் பொறுப்புகளில் பாதியைக் கொடுத்து விட, முதலில் தயங்கினாலும் முரளியின் கட்டாயத்தில் சரி என்று விட்டார். நாட்கள் கடந்து வருடங்கள் ஆகிவிட, சாருவைத் தவிர அவர்களுக்கு வேறு குழந்தையும் இல்லாமற் போனது.
மனோகரியின் அண்ணனும் திருமணமே வேண்டாம் என்று விட, இரு குடும்பத்திற்கும் சாரு மட்டுமே வாரிசாகியிருந்தாள். அனைத்தும் சரியாகத்தான் போய் கொண்டு இருந்தது, முரளியின் மூலம் சிறைக்கு சென்றவன் திரும்பும் வரை.
திரும்பி வந்தவன் அவர்களை குடும்பத்துடன் கொன்று விடுவதாக மிரட்டிச் சென்றான். அவன் அடிப்பட்ட பாம்பு, அவனை அப்படியே விடமுடியாது என்று முரளியின் அப்பா நினைத்து அடுத்து என்ன செய்யலாம் என்று யோசிப்பதற்குள் அனைத்தும் முடிந்திருந்தது. அந்தக் குடும்பத்தில், சாருவும் அவளின் தாத்தா மட்டுமே உயிருடன் இருந்தனர்.
***
1 comment
பின்னே… அத்தனை தீவிரமா இருந்தவங்க எல்லாரையும் அத்தனை லேசுல விட்டுடுவாங்களா என்ன?
😀😀😀
CRVS (or) CRVS 2797