1
‘துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும், நிமலனருள் கந்தர்
சஷ்டி கவசந் தனை
அமரரிடர் தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.’
விடிந்தும் விடியா அழகான காலைப்பொழுது, பறவைகள் கூட சற்று கழித்து கூவலாம் என்றெண்ணும் அளவிற்கு, மார்கழி மாத பனி. சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள, அழகே உருவான பங்களாவின் பூஜையறையில் தமிழ் கடவுள் முருகனின், ஸ்ரீ கந்த சஷ்டி கவசம் ஒலிக்க, அந்த வீட்டின் ராணியாம் வசந்தா, பாடலை தானும் பாடிக்கொண்டே சாம்பிராணி புகையை, ஒவ்வொரு அறைக்கும் காட்டிக்கொண்டிருந்தார்.
வேலைக்காரர்கள் அனைவரும் அவரவர் வேலையை அட்டேன்சன் பொசிசனில் செய்தாலும், முதலாளி அம்மாவின் மேல் ஒரு கண் வைத்திருந்தனர். அடுத்து அவர் என்ன செய்வார் என்று யோசிக்கும்போதே, அந்த வீட்டின் முதலாளியும் வசந்தாவின் கணவருமான சிவகுரு வந்துவிட, அவரை ஒரு பார்வை பார்த்த வசந்தா, கணவரிடம் தீப தட்டைக் காட்ட, அவரிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை.
“கோமதி அங்க என்ன வேடிக்கை, வேலை செய்ய எண்ணம் இல்லையா? ஐயா வந்து எவ்வளவு நேரமாச்சு, காபி கொண்டு வந்து கொடு. சஞ்சீவ் ஏர்போர்ட்டுக்கு போயிட்டானா? ஏழு மணிக்கு ஃப்ளைட் லேண்டாகிடும். போன் செய்து எங்க இருக்கான்னு கேளு.” என்று வரிசையாய் ஆணையிட்டவர், உன் உதாசீனம் என்னை ஒன்றும் செய்யாது என்பது போல் கணவனைப் பார்க்க, அந்த இடம் காலியாகி வெகு நேரம் ஆகியிருந்தது.
சிவகுருவின் செயலில் வசந்தாவின் மனம் சோர்வடைந்தாலும், எப்போதும் நடப்பது தானே என்று அவரால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. என்று தீரும் இவரது கோபம்? கிட்டத்தட்ட மூன்றாண்டுகள் ஆகிவிட்டது அவர் பேசி. அன்றைய நாளுக்குப் பிறகு, சிவகுரு முற்றிலும் வசந்தியை தவிர்த்து ஒதுக்கிவிட்டார்.
சிவகுரு பெற்றோர் இல்லாமல் பாட்டியின் தயவில் வளர்ந்தவர். சிறிது காலத்தில் பாட்டியும் தவறி விடவே, யாருமற்ற ஆளாய் வந்தாரை வாழ வைக்கும் சென்னையை நோக்கி வந்தார்.
தெரிந்த வேலைகளைச் செய்து ஓரளவுக்கு தன் ஜீவனத்தைத் தொடங்கியவருக்கு, பழகிய ஒருவரின் மூலம் ஆட்டோ ட்ரைவர் வேலை கிடைக்க, அதுதான் அவரது ஏறுமுகம். உழைப்பு மட்டுமே அவரது உயர்வுக்கு காரணம். இன்று சென்னையில் பெயர் சொல்லும் பணக்காரர்களில் ஒருவர். தூரத்து சொந்தத்தில் வசதியான பெண்ணான வசந்தாவை, அவர்களே கேட்டு முடித்து வைத்தனர்.
முதலில் வேண்டாம் என தயங்கினாலும், சொந்தம் எந்நாளும் விட்டுப் போவதில்லை என்ற எண்ணம் கொண்டவர். அதனால் ஏற்றுக் கொண்டார் வசந்தாவை. ஆஸ்திக்கும் அழகுக்குமாய் ஒரே பையன் திருப்புகழ். இந்தியாவின் புகழ் பெற்ற மருத்துவன். புற்றுநோய் ஆராய்ச்சிகளுக்காக சில விருதுகளையும் பெற்றவன். ஒரு ஆராய்ச்சிக்காக ஆஸ்திரேலியா சென்றவன், ஆறு மாதங்களுக்குப் பிறகு இன்றுதான் திரும்புகிறான்.
‘திரு டிராவல்ஸ்!’ சிவகுருவின் தொழில் சாம்ராஜ்யம். நாற்காலியில் தளர்வாய் சாய்ந்திருந்தார். எதிரே இருந்த போட்டோ பிரேமில் தன் பார்வையை ஒரு நொடி நிலைக்க விட்டவர், அதைத் தன் கையில் எடுத்து அதைப் பிரிக்க, அந்த ப்ரேம் இரண்டாகப் பிரிந்தது. அதில் ஒரு பக்கம் அமைதியான அழகுடன் அவள், அடுத்தப் பக்கம் ஆணழகனாய் திருப்புகழ் அவர் மகன்.
“சாரும்மா என்னை மன்னிச்சுருடா, என்னை மன்னிச்சுடு! உனக்கு ஒரு கஷ்டம் வந்தப்போ, நான் இல்லாம போயிட்டேனே.. நான் பாவிடா கண்ணா! இப்போ எங்கே இருக்க? இந்த மூணு வருஷமா உனக்கு இந்த பாவி மாமாவைப் பார்க்கணும்னு தோனவே இல்லையாடா..?” என்று, போட்டோவை நெஞ்சோடு அழுத்திக் கொண்டவர் தன் போக்கில் புலம்பினார்.
அறைக் கதவைத் தட்ட சுயத்திற்கு வந்தவர், “யா! எஸ் கமின்!” என்று, தன் கம்பீரக் குரலில் அனுமதித்தார்.
“சார், புகழ் சார் இந்த ஃப்ளைட்ல வரல சார். டெல்லில ஒரு மீட் இருக்குனு, அங்கேயே இறங்கிட்டதா சொன்னார். நீங்களும் மேடமும் தூங்கிட்டு இருப்பீங்க, டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு எனக்கு மெசேஜ் பண்ணிருக்கார்.” எனவும்,
“ஓ.. ஓகே செல்வின், அவங்க அம்மாவுக்கு மெசேஜ் பாஸ் பண்ணிடு. அந்த தர்மபுரி ப்ரான்ச் மேனேஜரை இன்னைக்கு வர சொல்லிருந்தேனே, வந்துட்டாரா? வரச் சொல்லு, ரிசப்சனிஸ்ட் தீபா மேரேஜ் நாளைக்குத் தான? வொர்கர்ஸ் ப்ளான் என்னனு கேளுங்க, நம்ம கம்பெனி சார்பா ஒரு ஸ்கூட்டி கொடுத்துரு கிஃப்டா. மணியா டென் தவுசன்ட் பண்ணிடு. ஒன் மன்த் லீவ் அலார்ட் பண்ணிடு, குன்னூர்ல மூணு நாட்களுக்கு ஹனிமூன் சூட் புக் செஞ்சு, நம்ம ட்ராவல்ஸ்ல டிக்கெட் போட்டுடு.” என்று அடுக்க, அனைத்திற்கும், “எஸ் ஸார்! எஸ் ஸார்!” என்ற பதில் மட்டுமே செல்வினிடம்.
எல்லாம் சொல்லியாகி விட்டது, அவ்வளவு தான் என்பது போல் சிவகுரு ஒரு ஃபைலை எடுக்க, செல்வன் அறையை விட்டு வெளியேற, “செல்வின், புகழ் அம்மாவுக்கு சொல்லிடு. அப்படியே புகழுக்கும் மெசேஜ் பண்ணிடு, நாளைக்கு மார்னிங் வீட்டுல இருக்கணும்னு.” என்ற சிவகுருவின் சொல்லுக்கு மீண்டும் ஒரு, “எஸ் ஸார்” உதிர்த்துவிட்டு வெளியேறினான் செல்வின்.
“வெல்கம் புகழ்! யூ ஆர் மோஸ்ட் வெல்கம் அண்ட் வெரி சாரி ஃபார் அ டிஸ்டர்பன்ஸ். சீ இஸ் வெரி கிரிடிகலி அண்ட் சீ வாஷ் கவுண்டிங் ஹெர் டேஸ். பட் எனக்கு நம்பிக்கை இருக்கு, இவ பிழைச்சுடுவா. ஆனால் பேசன்ட்டுக்கு எந்த பாசிடிவ் தாட்டும் இல்லை. சோ, அவங்க பயம் அதிகமாகிட்டே இருக்கு, நமக்கு கோ ஆப்ரேட் பண்ண மாட்டேங்கிறாங்க. என்ன பண்றது யோசிக்கும் போதுதான், நேத்து ஃபேஸ்புக்ல உன்னோட ஸ்டேடஸ் பார்த்தேன். இன்னைக்கு இந்தியா வரதா போட்டிருந்த, அதான் லாஸ்ட் மினிட்ல உன்னைப் பிடிக்க வேண்டியதாப் போச்சு.” என்று, தன் விளக்கம் கொடுத்தான் நண்பன் விமல்.
“ஹேய், நோ விமல்! என்னோட வொர்க் பத்தின எந்த ஹெல்ப், யார் கேட்டாலும் நான் செய்வேன். டோண்ட் வொர்ரி! நான் ஒரு டென் ஓ க்ளாக் ஹாஸ்பிடல் வந்துடுறேன். அந்த பேசன்ட்ஸோட ரிப்போட்ஸ் மட்டும் எனக்கு மெயில் பண்ணிடு, தென் யூ கேரி ஆன்.” என்று அறைக்குள் நுழைந்தான்.
அடுத்த அரை மணி நேரத்தில் அவன் எதிர்பார்த்த ரிப்போர்ட்ஸ் அவன் மெயில் பாக்ஸில் இருந்தது. ஒவ்வொரு வரியையும் விடாமல் படித்துக் கொண்டிருந்தவனுக்கும், விமலின் எண்ணம் தான். நிச்சயம் இதை சரி செய்து விடலாம் என்று மனதிற்குள் நினைத்தவன், பேசன்டின் வயதைப் பார்க்க இருபத்து ஆறு எனவும், பெயரைப் பார்க்க, ‘சாரு’ என்றிருந்தது. பெயரைப் பார்த்ததும் ஷாக் அடித்தது போல், தன் மொபைலை கீழே விட்டான் புகழ்.
***
“ஷ்ஷ்ஷ்… கண்ணா, மம்மிக்கு டைம் ஆகுது. வா… வா…”
“ம்ம்… ம்ம்… வேண்டாம் மம்மி.” சிணுங்கினான் இரண்டரை வயது குட்டிப்பையன்.
ஓ… குட்டிப்பாக்கு குளிருதா? ஸ்வெட்டர் போட சொன்னா, கேட்கணும் தானே தம்பி? போடாமல் விட்டா குளிரத்தானே செய்யும். ஓகே வாங்க, மம்மியை ஹக் பண்ணிட்டா குளிரவே குளிராது. கம் ஆன்… கம் ஆன்…” என்றதும், பாய்ந்து வந்து அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டது அந்த வாண்டு. குழந்தையிடம் பேசியபடியே அவனுக்கு வேண்டியதைச் செய்து, கிளப்பி, உண்ணச் செய்து என்று அனைத்தையும் முடித்தவள், காரின் முன் பக்கத்தில் அமர வைத்து சீட் பெல்டை மாட்டி தானும் அமர்ந்து காரை எடுத்தாள்.
‘செல்லமே செல்லம்’ எனும் குழந்தைகள் கேட்கும் பாடல் தொகுப்புகளை ஓடவிட்டு, தன் மகவையும் ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சாலையில் கவனம் பதித்தாள் சாரு.
இயற்கையின் அனைத்து எழிலையும் மொத்தமாய் உள்ளடக்கிய நைனிடால் நகரம். பசுமைகளின் பிறப்பிடமாய் திகழும் இடம். இந்தியாவின் பேரழகி நைனிடால் சிட்டி.
நைனிடால் நகரத்தில் இருந்து எழுபது கிமீ தூரத்தில் இருக்கும், சில மலைக் கிராம மக்களுக்குத் தேவையான மருந்துகள் மற்றும், குழந்தைகளுக்குத் தேவையான தடுப்பூசிகளுடன் கிளம்பிவிட்டாள் சாரு. மாதம் ஒருமுறை இது அவளது வழக்கம். தன் வீட்டில் வேலை செய்யும் ருக்மா எனும் பெண், இந்த மலைக் கிராமத்தைச் சேர்ந்தவள். அவள் மூலமாகத் தான் அவர்களது கிராமங்களுக்கு, அடிப்படை மருத்துவ வசதி கூட இல்லையென்று தெரிய வந்தது சாருவிற்கு. தன் ஏழு மாதக் கருவை சுமந்துகொண்டு ருக்மாவையும் அழைத்துக் கொண்டு முதன் முறையாக அங்கு சென்றாள். படிப்பறிவு பெருகி விட்ட இந்தக் காலத்திலும் கூட, அனைத்திலும் பின்தங்கிய மலைக் கிராமங்கள் அவை. அவர்களின் கஷ்டங்களைப் பார்த்து இந்த மனிதர்களுக்கு, ஏதேனும் செய்தே ஆக வேண்டும் என்று தோன்றியது அவளுக்கு.
சினிமாவில் காட்டுவதைப் போல், உடனடியாக எதையும் செய்து விட முடியாது என்பதும் புரிந்துதான் இருந்தது. முதல் முறையும் சரி, அடுத்த இரண்டு முறைகளும் சரி, அவள் அங்குள்ள மக்களிடம் பழகுவதையும், சுற்றுப் புறத்தை அலசுவது என்பதை மட்டுமே செய்தாள்.
தனக்குத் தெரிந்த சில மருத்துவ நண்பர்களிடம் பேசி, அவர்களோடு சேர்ந்து கேம்ப் மாதிரி முதலில் ஆரம்பித்தாள். அவர்களுக்கு கிடைக்கும் சாம்பிள் மெடிசின்களை கொடுக்க தொடங்கினாள். அங்குள்ள அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளை புறக்கணித்து, மக்களுக்குத் தேவையான சில அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தாள். சாருவின் பாதுகாப்பிற்கு அந்த கிராம மக்களே வாரம் இரு இளைஞர்கள் என்ற வகையில், அவளின் வீட்டிற்கு முன் காவலிருந்தனர்.
அவளது நல்ல செயல்கள் வெளி உலகிற்கு தெரியாத வகையில் வைத்துக் கொண்டாள். யாரும் அவளைத் தேடி வருவதில் அவளுக்கு உடன்பாடில்லை. ‘வேண்டாம் என்று விட்டுப் போனவர்கள், எனக்கும் வேண்டாம்.’ என்பதில் இறுதியாய், உறுதியாய் இருந்தாள் சாருகேஷி.
என்னை விட உன்னை
புரிந்தவன் யாரும் இல்லை
என்றாய்
ஆனால் புரிந்தவன்
புரிந்து கொள்ளாமல்
போனதும் ஏனோ
***