தூரம் 5
உறைந்து நின்ற மனைவியின் பார்வையை உணர்ந்து வாசல் பக்கம் திரும்பிய இளங்கோ, அங்கு அதிர்ந்து நின்றிருந்த சங்கரைப் பார்த்ததும், தான் பேசியதை கேட்டிருப்பாரோ என்று ஒரு கணம் நினைத்தான்.
அடுத்த நிமிடமே அதை புறம் தள்ளிவிட்டு, “வாங்க மாமா!” என்று மிகவும் சாதாரணமாக அழைத்தான்.
அவரோ தான் கேட்டதை கேட்காதது போல முகத்தை சாதாரணமாக வைத்துக்கொள்ள பெரும்பாடுபட்டார். வலிய புன்னகையை பூசியபடி உள்ளே வந்தார்.
“உக்காருங்க மாமா, எப்ப வந்தீங்க? உங்க மக கூடவே வந்துட்டீங்களா?” என்றபடியே சோபாவில் அமர்ந்தவன், கலக்கமாக நின்றிருந்த மனைவியைப் பார்த்து, “காபி கொடு.” என்றான் எதுவுமே நடக்காதது போல.
“ஆமாம் தம்பி, பாப்பா கூடயே நானும் வந்துட்டேன். அத்தையை வந்து பார்க்கவே இல்ல. ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுச்சு, இல்லையா? அதையும் பாக்கணும், அதான் வந்தேன்.” என்றவரின் பார்வை கிச்சனிலேயே இருந்தது.
மகள் உள்ளே துடிப்பாளே! அவளுக்கு ஆறுதல் சொல்லக்கூட முடியாத தன் கையாலாகாத தனத்தை எண்ணி இறுகிப்போய் அமர்ந்திருந்தார்.
அதைக் கவனித்தாலும் கண்டுகொள்ளாமல், “இன்னைக்கு இருக்கீங்கதானே மாமா? இல்ல உடனே கிளம்புறீங்களா?” என்றதும்,
“ஆமா தம்பி, இன்னைக்கு இருந்துட்டு நாளை காலை தான் போகணும். இங்க பக்கத்துல ஒரு வேலை இருக்கு, நாளைக்கு அத பாத்துட்டு தான் கிளம்பணும்.” என்றவரிடம்,
“சரிங்க மாமா.” என்றவன், என்ன வேலையென்றெல்லாம் கேட்கவில்லை. இன்றைய விழாவைப் பற்றி பேச ஆரம்பித்து விட்டான். கணேஷ் தனக்கு அழைத்து பேசியதைக் கூறியவன், மனைவியைப் பற்றி பேசியதை மட்டும் கூறவில்லை.
முந்தானையால் முகத்தைத் துடைத்தபடி வந்த கொடி இருவருக்கும் காபியை கொடுத்தவள், இரவு உணவுக்காக மீண்டும் உள்ளே சென்றாள்.
பிள்ளைகளும் டியூஷன் முடிந்து வந்து விடவே நேரம் சரியாக இருந்தது. அனைவரும் சாப்பிட்டு முடிக்க, வழக்கம் போல் குழந்தைகள் ஒரு அறைக்குள் செல்ல, இளங்கோவன் ஒரு அறைக்குள் செல்ல, ஹாலில் தனக்கான இடத்தில் பாயை விரித்தாள் பூங்கொடி.
இன்று முழுவதுமே சங்கரின் பார்வை மகளின் மீதுதான் இருந்தது.
‘விட்டுட்டேன்… நான் விட்டுட்டேன்… என் பொண்ண நான் கவனிக்காமல் விட்டுட்டேன்… கடவுள் கூட என்னை மன்னிக்கமாட்டார்…’ என தந்தையின் மனம் ஆற்றாமையால் துடித்தது.
அன்றைய நாளில் மீண்டும் தன் மனைவியை நினைத்தார். அவள் இருந்திருந்தால் மகளின் பிரச்சனையை இந்நேரம் சரி செய்திருப்பாளோ என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை.
பெண் குழந்தைகளுக்கு தாயின் முக்கியத்துவம் எவ்வளவு தேவை என, மனைவி இறந்த சில நாட்களிலேயே புரிந்துகொண்டார்.
தன் பெண்மீது கோபம் இருக்கும், காலப்போக்கில் சரியாகும். அவர்களே சரியாக்கி கொள்வார்கள் என்று அனைவரும் நினைத்திருக்க, அவர்கள் வாழ்க்கையோ உடையும் பானையாக விரிசல் விழுந்து கிடக்கிறது.
என்ன நடக்கிறது என் மகளுக்கு? வீட்டுக்குள்ளே ஏன் இப்படியான ஒரு வனவாச வாழ்க்கை என, தனக்குள்ளே கேள்வி கேட்டு புழுங்கி போனார் அந்த பெரிய மனிதர்.
எப்படி வளர்த்த என் மகள், இன்று வேலைக்காரியை விட மோசமாக நடத்தப்படுவதை அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
கட்டிய கணவனும் பெற்ற பிள்ளைகளும் அவளை நடத்தும் விதம் மனதை மொத்தமாக கொன்றது.
அவள், “ப்ப்பா!” என்று அழைக்கும் போது, அவர் உயிரெல்லாம் கரைந்து போகும். அத்தனை பாசமாக அழைப்பாள்.
யாரிடமும் கோபப்பட்டதில்லை, யாரையும் ஒதுக்கியதில்லை. யாரையும் கடிந்து ஒரு வார்த்தை பேசியதில்லை. அப்படிபட்ட பெண்ணின் வேதனையை பார்க்கவே முடியவில்லை.
கடவுளே! நீ அவளை சோதிக்கும் காலம் இன்னும் தீரவில்லையா? என் பெண்ணை விட்டுவிடேன்… அவள் வாழ வேண்டியவள், என்னைக் கூட எடுத்துக்கொள்ளேன் என மனிதர் மனதுக்குள்ளேயே கதறி அழுது கொண்டிருந்தார்.
அப்படி என்ன என் மகள் செய்தாள்? யாரும் செய்யாத ஒன்றை என் மகள் செய்யவில்லையே?!
நினைக்க நினைக்க நெஞ்சே வெடித்துவிடும் போல இருந்தது. அதற்கு மேல் படுக்க முடியவில்லை. எழுந்து அமர்ந்தவர் மற்ற இரண்டு அறைகளையும் பார்த்தார்.
கதவு உள்பக்கமாக பூட்டியிருப்பது புரிந்தது. இதுதான் இந்த வீட்டில் என் மகளின் நிலையா? வலித்த நெஞ்சை தடவிக் கொண்டார். பார்வையை மகளின் புறம் திருப்பியவருக்கு வித்தியாசமாக இருந்தது.
கண்களை மூடித்தான் இருந்தாள். ஆனால் கால்கள் இரண்டையும் ஆட்டிக்கொண்டே இருந்தாள். ஒரு கை வயிற்றை அழுத்திப் பிடித்திருக்க, மற்றொரு கையை கழுத்தில் எதையோ மறைப்பது போல வைத்திருந்தாள்.
யோசனையாக எழுந்தவர், கொடியின் காலடியில் அமர்ந்து அவள் கால்களை எடுத்து மடியில் வைத்து பிடித்துவிட ஆரம்பித்தார்.
அந்த உணர்வில் விழித்தவள், “ப்பா என்ன பண்றீங்க? விடுங்க… விடுங்கப்பா…” என பதட்டமாக கூற, அது சற்று சத்தமாகவே வந்துவிட, அந்த சத்தத்தில் இளங்கோவின் அறைக்கதவு திறக்கப்பட, கெஞ்சலாக தந்தையைப் பார்த்தாள் கொடி.
சங்கரோ மகளையும் பார்க்கவில்லை, இருவரையும் யோசனையாக பார்த்த மருமகனையும் பார்க்கவில்லை. மகளின் கால்களை அழுத்தமாக பிடித்துவிட ஆரம்பித்தார்.
இருவரையும் ஒரு பார்வை பார்த்தவன் உள்ளே சென்றுவிட, சங்கர் அதை கண்டுகொள்ளவில்லை. அவருக்கு மருமகன் மீது கோபம் ஏறிக்கொண்டே சென்றது.
ஆனால் கொடிக்கு அப்படியில்லையே? தந்தை சென்றபிறகு இதற்காகவும் பேசுவானே என்ற பயம். அந்த வார்த்தைகளை தாங்கும் சக்தியைதான் அவள் இழந்து கொண்டிருக்கிறாளே?!
ஒரு கட்டத்தில், “போதும்ப்பா…” என தன் கால்களை வலுக்கட்டாயமாக உருவிக்கொண்டாள் கொடி.
அன்றைய இரவில் சங்கர் ஒரு முடிவோடுதான் தூங்க ஆரம்பித்தார்.
அறைக்குள் இருந்த இளங்கோவிற்கு முதலில் கோபம்தான் வந்தது, எப்படியெல்லாம் நடிக்கிறாளென்று. இப்படி நடித்துதானே தன்னை ஏமாற்றினாள் என்று பல்லைக் கடித்தான்.
அறைக்குள்ளே நடந்தான். கோபம் சற்று மட்டுப்பட்டது போல இருந்தது. இப்போது அமைதியாக அமர்ந்தான். மனைவியின் செய்கைகளை யோசித்துப் பார்த்தான்.
கணேசன் சொன்னது போல உடல் எடை குறைந்து மெலிந்திருக்கிறாள், கருத்திருக்கிறாள். இதெல்லாம் காட்டு வேலைக்கு செல்பவர்களுக்கு நடப்பதுதான். இதை அவனே கவனித்திருக்கிறான். அப்போழுது தான் கணேசன் சொன்னது நினைவுக்கு வந்தது. கழுத்தில் எதோ வீக்கம் போல் என்பது. அதனை அவன் கவனிக்கவில்லை. ஒருவேளை இருக்கோ? நான் பார்க்கவில்லையோ என்று யோசித்தவன் வேகமாக எழுந்து வெளியில் வந்தான்.
மனைவியும் மாமனாரும் நல்ல உறக்கத்திற்கு சென்றிருந்தனர். மனைவியின் அருகில் நின்று கைகளைக் கட்டிக்கொண்டு அவளையே பார்த்தான்.
இப்போதும் வயிற்றை ஒரு கை அழுத்தியும், கழுத்தை ஒரு கை மறைத்தும் தான் இருந்தது. வித்தியாசமாக இருந்தது.
வயிற்றில் இருந்த கை அமிழ்ந்திருந்த விதம், ஏதோ வலியை குறைக்க வைத்தது போல்தான் இருந்தது.
‘நடிக்கிறாள்’ எனப் பட்டென்று சொன்ன ஒரு மனதை அடக்கி, தூக்கத்திலுமா நடிப்பார்கள் என மற்றொரு மனது அடக்கியது.
இவள் இப்படி உறங்குபவள் அல்லவே என யோசனையாகவே தன்னறைக்கு சென்றான்.
அடுத்த நாளும் வழக்கம் போலவே சென்றது. சங்கர் இருக்கிறார் என்றெல்லாம் யாரும் எதையும் மாற்றிக்கொள்ளவில்லை. கணவனும் பிள்ளைகளும் கிளம்பியதும் தான் தந்தையும் மகளும் சாவகாசமாக அமர்ந்தனர்.
கணவனைப் பற்றி, பிள்ளைகளைப் பற்றி, தானே கெடுத்துக் கொண்ட இந்த வாழ்க்கையைப் பற்றி ஏதேனும் கேட்பாரோ என கொடி தயக்கத்துடன் அமைதியாக இருக்க,
மகளின் இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டவர் “கண்ணு, உங்கம்மா இல்லன்னு இப்போ நான் ரொம்ப வேதனைப்படுறேன். அவ இருந்திருந்தா உனக்கு இவ்வளவு கஷ்டம் வந்திருக்காதுல்ல? எனக்கு உன்னை கவனிக்க, உன் பிரச்சனையை தீர்க்க தெரியலயே கண்ணு. கையாலாகாத இந்த அப்பன மன்னிச்சிடு கண்ணு…” என்றவரின் குரல் கலங்கிப் போய் வந்தது.
தந்தையின் இந்த பேச்சில் அப்படியொரு அழுகை கொடியிடம். பெருங்கேவலுடன் பிடித்திருந்த கைகளிலேயே முகத்தைப் புதைத்துக் கொண்டு கதறியழ ஆரம்பித்தாள்.
இவளின் சத்தத்தில் பின்பக்கம் வீட்டிலிருந்த சுப்புவும் கந்தவேலுவும் பதறியடித்து ஓடிவந்தனர்.
வந்தவர்களின் பார்வையில் இருவரும் பட, அப்படியே தளர்ந்து போய் அமர்ந்துவிட்டார் கந்தவேல்.
எதை பார்க்கக்கூடாது என்று நினைத்தாரோ? அது தன் கண் முன்னே நிகழ, செய்வதறியாது திகைத்துப் போனார்.
கல் கூட கரைந்துவிடும் இப்படியொரு காட்சியில். சுப்பு எம்மாத்திரம்? மனிதன் தானே!? அவ்வப்போது மாறும் குணம் உள்ளவன் தானே?
உடனே கிச்சனுக்கு சென்று நீரை எடுத்து வந்தவர் மருமகளை குடிக்க வைத்தவர், “அண்ணா முதல்ல தண்ணிய குடிங்க, நீங்க கலங்கி நின்னா, அவ கஷ்டம் தீர்ந்துடுமா? புள்ளய சமாதானம் செய்யாம, இன்னும் அவளை நோகடிக்காதீங்க.” என கண்டிப்பான குரலில் சொல்ல,
அவரிடமிருந்த தண்ணீரை வாங்கி கையில் வைத்தபடியே அமர்ந்திருந்தார் சங்கர்.
“அண்ணா…” என மீண்டும் ஒரு அதட்டல் சுப்புவிடமிருந்து. நீரைப் பருகிவிட்டு செம்பை ஓரமாக வைத்தவர், “கந்தா என் பொண்ணை நான் கூட்டிட்டு போறேன்.” என்றார் அறிவிப்பாக.
‘அழைத்து போகட்டுமா?’ என்றெல்லாம் கேட்கவில்லை, அழைத்துப் போகிறேன் என்றுதான் சொன்னார்.
‘மச்சான்’ என்றழைப்பு போய், ‘கந்தா’ என்றழைப்பிலேயே மாமனின் மனம் புரிந்துவிட, “உங்க விருப்பம் மாமா, கொடி வந்தா கூப்பிட்டு போங்க. அவ இல்லன்னாதான் அவளோட அருமை தெரியும்.” என்ற கந்தவேலை,
“என்ன பேசுறீங்க நீங்க? பிரச்சனை தீர வழி சொல்றீங்களா? இல்ல, தீரவேக் கூடாதுனு வழி சொல்றீங்களா? இவ போயிட்டா அவன் உடனே திருந்திடுவானா? தேடி போயி கூப்பிடுவானா?” என சுப்பு கணவனிடம் கத்த,
“வாய மூடுடி முதல்ல… நீ ஆரம்பிச்சு வச்சதுதான் எல்லாம். உன்னால தான் இன்னைக்கு என் பிள்ளைங்களுக்கு இப்படியொரு நிலைமை. ஆளு வளர்ந்த அளவுக்கு அறிவும் வளரல, பொறுப்பும் வரல.” என அவரும் பதிலுக்கு கத்த, அப்படியே அமைதியாகிவிட்டார் சுப்பு.
“மாமா நீங்க கொடி வந்தா கூப்பிட்டு போங்க. பிரச்சனை வந்தா பார்த்துக்கலாம். எத்தனை நாளைக்கு இப்படியே விட்டுட்டு இருக்க முடியும்?” என முடிவாக கந்தவேல் சொல்ல, சுப்புவால் மறுக்க முடியவில்லை.
அதற்குள் கொடியும் நிதானத்திற்கு வந்துவிட, “ப்பா, நான் சொல்றதை கொஞ்சம் கேளுங்க. அன்னைக்கு சொன்னதுதான் இன்னைக்கும். அந்த கடனை அடைக்காம இங்க இருந்து நான் வரமாட்டேன். அப்படி இங்க இருந்து போனா அது என் பொணமாதான் இருக்கும்.” என்றதும்,
“கொடி… கண்ணு…” என அதட்டல்கள் வர,
“ஆமாப்பா, அதை நான்தான் அடைக்கணும். நான் தானே காரணம். யாரை நம்பணும், யாரை நம்பக் கூடாதுனு தெரியாம ஒருத்தரை நம்பி உதவ போய் எனக்கு கிடைச்ச பேர் என்னப்பா? ஏமாளி!
“மனிதாபிமானத்தோட உதவி செஞ்சா அதுக்கு கிடைக்கிற பேர் ஏமாளி! ஏன்ப்பா…?” என்றவளுக்கு பேச முடியாமல் வாய் வலித்தது.
அதை யாருக்கும் காட்டாமல், “இன்னும் கொஞ்ச நாள் தானேப்பா. மொத்தமா முடிச்சிட்டு கிளம்பிடுறேன், யாரும் இருக்கச் சொன்னாக்கூட இருக்க முடியாது.” என்றாள் தீர்மானமாக.
ஆண்களுக்கு வேண்டுமானால் அவள் வார்த்தை புரியாமல் போகலாம். ஆனால் சுப்புவிற்கு எப்படி புரியாமல் போகும்? கலங்கிப்போய் மருமகளைப் பார்த்தார்.
ஏதோ தவறாக முடிவெடுத்துவிட்டாள் என்று மட்டும் புரிந்தது. இப்போது பேசி மற்றவர்களையும் கலவரப்படுத்த வேண்டாம் என்று அமைதி காத்தார்.
பின், “கொடி எந்திரி, அப்பாவுக்கு சாப்பிட கொடு. மணி என்னனு பாரு, அவருக்கும் நேரம் ஆகுது.” என சூழ்நிலையை மாற்ற வேண்டி பேச அது சரியாக வேலை செய்தது.
அதற்குள் கணேசனும் வந்துவிட, இந்த பேச்சு அப்படியே நின்றது. நால்வரின் முகத்தையும் பார்த்தவனுக்கு சூழல் சரியில்லை என்று புரிய, மாமானாரிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று நினைத்து அமைதியாகிவிட்டான்.
கேள்வியாக பார்த்த பூங்கொடிக்கு, “பக்கத்துல ஒரு வேலை. அதை முடிச்சிட்டு அப்படியே மாமாவை கூட்டிட்டு போக வந்தேன் கொடி.” என்று முடித்துவிட,
கணேசனுக்கும் சேர்த்து டிபன் பரிமாறியவளிடம், “மதிய சாப்பாட்டுக்கு வந்துட்டுதான் போவேன் கொடிமா. இன்னைக்கு வீட்டுல இரு.” என சங்கர் சொல்ல,
“சரிப்பா.” என்றவளின் முகம் மலர்ந்து போனது. அதை உள்வாங்கியபடியே சாப்பிட்டவர்கள் கிளம்ப, கந்தவேலையும் தங்களோடு அழைத்துக் கொண்டனர்.
ஆண்கள் மூவரும் கிளம்பிய பிறகும் கூட, சுப்பு அங்கிருந்து கிளம்பாமல் மருமகளையே பார்வையால் தொடர்ந்து கொண்டிருந்தார்.
அவள் விட்ட வார்த்தைகள் விரக்தியின் உச்சம் என்று அவருக்கு புரிந்துவிட்டது. அவர்களே சரி செய்து கொள்வார்கள் என்று விட்டது தவறுதான்.
தவறாக எதுவும் முடியும் முன் ஏதேனும் செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தார். அது காலங்கடந்த முடிவென்பதை அவருக்கு யார் சொல்வது?
‘நரகம் காலியாக இருக்கிறது. காரணம், பிசாசுகள் எல்லாம் இங்கே இருக்கே…
அவர் விதைத்த துயரங்கள், தூரங்களை தூரங்களாக்கிவிட்டது.’
***