Home Love - Family - Romanceஓடங்கள் – 02

2

“செல்வின், நீ என்ன பண்ணுவியோ தெரியாது. இன்னும் அரைமணி நேரத்துல புகழ் எனக்கு கால் பண்ணிருக்கணும். நாளைக்கு மார்னிங் வந்துடுவான்னு சொல்லி, இன்னைக்கு ஃபோர் டேஸ் ஆச்சு. என்ன பண்ற நீ, உன்னை இதுக்குத் தான் வேலைக்கு வச்சிருக்கா? உன்னோட சீட்டைக் கிழிச்சா சரியா போயிடும். உருப்படியா ஒரு வேலையும் செய்யறதில்ல…” என்று கோபமாய் கத்திக் கொண்டிருந்தார் வசந்தா. அருகில் எனக்கென்ன என்பது போல் சிவகுரு பேப்பரை படித்துக் கொண்டிருந்தார்.

‘இவங்க குடும்ப சண்டைல நம்ம சட்டை தான் எப்பவும் கிழியும். ஞாயித்துக் கிழமை ஒரு நாள் கூட பொண்டாட்டி, பிள்ளைங்களோட நிம்மதியா இருக்கவிட மாட்டாங்க இந்தம்மா. எல்லாம் சாருக்காக மட்டும்தான் பொறுமையா போறேன். இல்லைன்னா இந்தம்மாகிட்ட எல்லாம் யார் வேலை செய்வா?’ என்று மனதுக்குள் நொந்தவாறே, சிவகுருவின் எண்ணிற்கு அழைத்தான். அவரிடம் கேட்காமல் அவனால் எதையும் செய்ய முடியாதே…

அவனது போன் காலை ஆன் செய்து, “நான் குன்றத்தூர் போறேன்.” என்று வைத்து விட்டார். செல்வினும் அடுத்த அரை மணி நேரத்தில் குன்றத்தூர் அடிவாரத்தில் சிவகுருவிற்காக காத்திருந்தான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவரும் வந்துவிட, அவர் பக்க கதவைத் திறந்து விட, அவனைப் பார்த்து நட்பாய் புன்னகைத்தார். சிவகுருவிற்கு செல்வினை மிகவும் பிடித்துப் போனது, இந்த விசயத்தில். அவர் எள் எனும் முன் அவன் எண்ணெயாய் நிற்பான். அதோடு கிட்டத்தட்ட செல்வினின் இளமைக் காலமும் சிவகுருவை ஒத்தே இருக்கும். அவரைப் போலவே அவனும் வாழ்க்கையில் சாதிக்கத் துடிப்பவன், ஜெயிக்க நினைப்பவன். அதனால் செல்வினின் மீதும் அவனது உழைப்பின் மீதும், மரியாதை உண்டு அவருக்கு.

“இன்னைக்கு கூட நிம்மதியா விட மாட்டாங்க போலனு புலம்பிட்டு இருக்கியா…?”

“இல்ல… இல்ல… அப்படியெல்லாம் இல்ல சார். பசங்க தான் இருந்தே ஆகணும்னு ஒரே அடம். அப்புறம் அவங்க அம்மாதான் காம்ப்ரமைஸ் பண்ணா, நான் கிடைச்ச கேப்ல ஓடி வந்துட்டேன்.”

“சாரி செல்வின், நானும் சொல்லிட்டேன் உனக்கு ஒரு பிஏ வச்சிக்கோன்னு, கேட்க மாட்டேங்குற. பாரு, பசங்க ஃபீல் பண்றாங்க இல்ல…”

“என்ன சார் நீங்க? பிஏவுக்கே பிஏவா? பசங்களை நான் சரி பண்ணிடுவேன் சார், நீங்க ஃபீல் பண்ணாதீங்க. மார்னிங் சர்ச் போய்ட்டு, தீம் பார்க் போயிட்டுத் தான் வீட்டுக்குப் போனோம்.”

“ம்ம்… ஃபேமிலியோட டைம் ஸ்பென்ட் பண்ணணும் செல்வின். அது லைஃப்க்கு ரொம்ப முக்கியம். ஒரு அப்பாவா இது என்னோட ரிக்வெஸ்ட், நான் இழந்தது ரொம்ப அதிகம் செல்வின். அட்வைஸ் பண்றதா நினைக்காத, மனசுல பட்டதை சொன்னேன்.”

“சார் இதெல்லாம் நீங்கதான் எனக்குச் சொல்லணும். எங்க ரெண்டு பேருக்கும் உங்களை விட்டா யார் இருக்கா? நீங்கதான் சார் என்னோட கைட், சீப் அண்ட் வெல்விசர் எல்லாம். இந்த லைஃப் நீங்க எனக்குப் போட்ட பிச்சை. அதை எப்பவும் மறக்க மாட்டேன், இனி இப்படிப் பேசாதீங்க சார், மனசு கஷ்டமா இருக்கு.”

“நான் அந்த அர்த்தத்துல சொல்லல செல்வின். நீயும் எனக்கு ஒரு மகன் போலத் தான். நான் அப்படித்தான் நினைக்கிறேன். நான் பேசினது உன்னை ஹர்ட் பண்ணிருந்தா ஐயாம் வெரி சாரி செல்வின்.”

“அய்யோ! என்ன இது பெரிய வார்த்தையெல்லாம் பேசிட்டு… விடுங்க சார், இப்போ நான் என்ன பண்ணணும், அதை மட்டும் சொல்லுங்க.”

நைனிடால்ல இருக்க நம்ம ப்ரான்ச் மேனேஜருக்கு சிக் லீவ் கொடுத்துருக்கு, அவர் பையனுக்கு ப்ரைன் கேன்சராம். நம்ம லேபர்ஸ நாம கண்டிப்பா கேர் எடுத்துப் பார்க்கணும். ஒரு ஒன் வீக் நைனிடால் போற மாதிரி ப்ளான் இருக்கு நமக்கு. டெஸ்ட்ஸ் எடுத்துருக்காங்களாம், ரிசல்ட்ஸ் மார்னிங் தான் கிடைக்குமாம். அந்த ரிப்போர்ட்ஸ்ல ஒரு காப்பி புகழோட ஐடிக்கு மெயில் பண்ணிடு. நெக்ஸ்ட் ஒரு த்ரீ டேஸ் அவனோட அப்பாயிட்மென்ட்ஸ் கேன்சல் பண்ணிட்டு, ஃப்ரீ பண்ணிக்க சொல்லிடு. நாம போனதும், டூ டேஸ் கழிச்சு வர மாதிரி இருக்கணும்னு மெசேஜ் பண்ணிடு.”

“எஸ் சார்! பட் மேடம், புகழ் சாரை விடுவாங்களா தெரியாதே… என்கேஜ்மென்ட்டுக்கும் வரல, மேரேஜ் டேஸ் வேற பக்கத்துல இருக்கு.”

“நீ இன்ஃபார்ம் மட்டும் பண்ணிடு, அவங்க அம்மாவை அவனே மேனேஜ் பண்ணிப்பான். நமக்கு அந்தக் கவலை இல்லை.”

“எஸ் ஸார், நான் புகழ் சாருக்கு சொல்லிடுறேன். மேடம் வேற பேச சொன்னாங்க. பொண்ணுக்கு புகழ் சார் நம்பர் கொடுக்க சொல்றாங்க, கொடுத்தா அவர் திட்டுவார், கொடுக்கலன்னா மேடம் திட்டுவாங்க, என்ன சார் செய்யணும்?”

“தேவிக்கு நீ நம்பர் கொடுத்துடு, புகழ் கேட்டா மேடம்தான் தர சொன்னாங்க சொல்லிடு. அவனே பேசிப்பான், மேடத்துக்கிட்ட…”

“ம்ம்… சரிங்க சார். அப்புறம் நான் ஒன்னு கேட்கட்டுமா, நீங்க தப்பா எடுத்துக்கிட்டாலும் பரவாயில்லை. லாஸ்ட் த்ரீ இயர்ஸா நம்ம ப்ராபர்டீஸ் எல்லாம் சாரு மேடம் பேர்லயே வாங்குறீங்களே, இது வசந்தா மேடமுக்கு தெரிஞ்சா பிரச்சனை ஆகிடாதா? புகழ் சார் உங்களோட பேசுறதே இல்ல. இது எல்லாம் தெரிஞ்சா என்ன சொல்லுவாரோ தெரியல. இப்போ சாரு மேடம் இருக்குற இடம் நமக்குத் தெரியாது. அவங்க இருக்காங்களா கூடத் தெரியாது. பிறகு எந்த நம்பிக்கைல சார் இவ்வளவு பண்றோம்?”

“ஸ்டாப்பிட் செல்வின்! ஐ செட் ஜஸ்ட் ஸ்டாப்பிட்! என்ன பேசுற? அவ என்னோட மருமகள், என் வீட்டு மகாலட்சுமி. அவளுக்கு எதுவும் ஆகிருக்காது. கண்டிப்பா ஒரு நாள் வருவா, எனக்காக என்னைப் பார்க்க. அவளுக்குத் தெரியும், நான் அவளுக்காக மட்டும் தான் இந்த உயிரை பிடிச்சு வச்சுருக்கேன்னு. என் சாரும்மா வருவா செல்வின், என் குடும்ப வாரிசோட வருவா. என் வீட்டுக்கு விளக்கேத்த மறுபடியும் வருவா. இது பலிக்கத்தான் போகுது, நீயே ஆச்சரியப்படப் போற பாரு.”

சிவகுருவின் உறுதியானப் பேச்சில், செல்வின் அசந்துதான் போனான், எப்படி இவ்வளவு நம்பிக்கையா பேசுறார் இவர் என்று. அவர் நினைத்தது நடக்குமா, நடக்காதா தெரியாது. ஆனால் அவர் நம்பிக்கை ஜெயிக்க வேண்டும், உண்மை விழித்துக் கொள்ள வேண்டும் என்று, அவசரமாய் தன் கடவுள் கர்த்தருக்கு வேண்டுதல் வைத்தான். அதுவே இன்னும் சில நாட்களில் நடக்கப் போவது தெரியாமல்!

குன்னூரில் தன் ஆராய்ச்சி கூடத்தில் ஒரு முக்கியமான ரிசர்ச்சுக்கான வேலையில் இருந்தான் புகழ். டெல்லியில் அந்த சர்ஜரி கேஸை வெற்றிகரமாய் முடித்தவன், அடுத்த நாள்தான் அவனுக்கும் தேவிக்கும் நிச்சயதார்த்தம் எனத் தெரிய, தாயிடம் கோபம் கொள்ள முடியாது என்பதால், ‘என்னவோ செய்ங்க’ என்பது போல் ஒரு பதிலைக் கொடுத்துவிட்டு, யாரிடமும் சொல்லாமல் எதிலிருந்தோ தப்பிபது போல், தன் ரிசர்ச் சென்டருக்குள் வந்து புகுந்து கொண்டான். ஒளிந்து கொண்டான் என்பதே பொருத்தமானது.

தந்தையின் குற்றம் சாட்டும் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காகவே இந்த ஏற்பாடு. மகன் இதைத் தான் செய்வான் என்று முன்னமே தெரிந்தது போல், சிவகுருவும் புகழை எதிலும் கட்டாயப்படுத்தவில்லை. தெரியாமல் தப்பு செய்தால் தட்டிக் கேட்கலாம், சுட்டிக் காட்டலாம். தெரிந்தே முட்டாள் தனம் செய்பவனிடம் என்ன பேசுவது என்று, சிவகுரு மகனிடம் பேசுவதில்லை. குற்ற உணர்ச்சியின் காரணமாக புகழும் தந்தையிடம் பேசுவதைக் குறைத்துக் கொண்டான். வீட்டில் இருந்தால் பேசுவதைத் தவிர்க்க முடியாது என்பதால், தன் வீட்டிற்கு செல்வதையே குறைத்துக் கொண்டான்.

வேலையில் இருக்கும் பொழுது அவனது போன் எப்பொழுதும் சைலண்ட் மோடிலேயே இருக்கும். அனைத்தும் முடிந்த பிறகு அவனாக ஒவ்வொரு எண்ணையும் பார்த்து திரும்பி அழைப்பான். முக்கியமான தகவல்கள் என்றால் வாட்ஸ் ஆப்பில், மெசேஜ்கள் இருக்கும். அதனால் அதைப் பார்த்து தெரிந்து கொள்வான்.

இன்றும் அப்படித்தான் வேலை முடித்துப் பார்க்க, நிறைய மிஸ்டு கால்கள், மெசேஜ்கள். செல்வின் ஒரு முறை, மற்றபடி அனைத்தும் ஒரே புதிய நம்பரில் இருந்து. நெற்றியைத் தடவியபடி யோசித்தவன், முதலில் செல்வினுக்கு அழைத்தான்.

“ஹலோ செல்வின் என்ன மேட்டர், கால் பண்ணிருக்க…?” நக்கல் வழிந்தது புகழின் குரலில்.

“எஸ் ஸார்! மேடம் உங்க நம்பரை, உங்க வருங்கால மனைவிக்கு கொடுக்க சொன்னாங்க, கொடுத்துட்டேன். அதான் உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணதான் கால் பண்ணேன்.” அதே நக்கல் குரலில் பதிலளித்தான் செல்வின்.

“ஹேய் இடியட்! யாரைக் கேட்டுக் கொடுத்த?” நக்கல் மறைந்து கோபம் பொங்கிய குரலில் கத்தினான் புகழ்.

“சார், மேடம்தான் கம்பல் செய்தாங்க, குரு சாரும் கொடுத்துட சொன்னாங்க. உங்க வருங்கால மனைவிகிட்ட மனசு விட்டுப் பேசி, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கணுமாம். அதுதான் இந்த ஏற்பாடு. ஆனா பாருங்க சார், பொண்ணுங்ககிட்ட எப்படி பேசணும்னு உங்களுக்குத் தெரியாதாம், உங்கம்மா சொல்றாங்க. இதையெல்லாம் கேட்க வேண்டிய நிலமையில் நான் இருக்கேன், ச்சை…!”

“திஸ் இஸ் த லிமிட் செல்வின்! இதுக்கு மேல ஒரு வார்த்தை நீ பேசினா, நான் கொலைகாரன் ஆயிடுவேன். யாருகிட்ட பேசுறனு தெரிஞ்சு தான் பேசுறியா? நான் நினைச்சா நீ ஒன்னுமே இல்லாம நடுத்தெருவுல நிக்கணும் ரைட்! மைண்ட் யுவர் வேர்ட்ஸ் டேமிட்…!”

“வாட்! என்ன சொன்ன? நீ, என்னை நடுத்தெருவுல நிறுத்துவியா? ஹா… ஹா… செம காமெடி! உனக்கெல்லாம் காமெடி சென்ஸ் இல்லனு, என் தங்கச்சி சரியா தான் சொல்லிருக்கா. வராததை நீ ஏன் முயற்சி பண்ற? ஜஸ்ட் லீவிட்! பட், உன்னோட காமெடில எனக்கு கொஞ்சம் சிரிப்பு வருது.”

“டேய்! அவளைப் பத்தி என்கிட்ட பேசாதனு சொல்லிருக்கேன். உன்னை மட்டும் நேர்ல பார்த்தேன், கொன்னுடுவேன்டா ராஸ்கல்! ஒன்னுமே தெரியாத மாதிரி இருந்து, ஒரு குடும்பத்தையே ஏமாத்திட்டு போனவ உனக்கு தங்கச்சியா? ஒரு ஏமாத்துக்காரி உன்னோட தங்கச்சின்னா, அவளால ஏமாந்து போன நான் யாருடா உனக்கு? நான் உன்னோட நண்பன் இல்லையாடா செல்வின்? என் மேல ஏன்டா இவ்வளவு கோபம்?”

“நீ என்னோட நண்பன் கிடையாது. இருந்த, நண்பனா ஒரு காலத்துல… அந்த ஒரு காலத்துல கூட என் தங்கச்சி சொல்லிதான் நான் உன் நண்பன் ஆனேன். இன்னைக்கு அவளே இல்ல, அவளால வந்த நீயும் வேணாம். அவள் மேல இருக்குற குற்றச்சாட்டுகள் எல்லாம் அப்படியே இருக்கும் போது, அவளோட அண்ணனான எனக்கும் அதுல சரி பங்கு இருக்கு தானே? அப்படி இருக்க, நான் மட்டும் எப்படி உன்னோட நண்பன் ஆக முடியும்? அவ உண்டு, அவ வேலை உண்டுனு இருந்தா. எப்படி வந்தியோ, அவ வாழ்க்கையில் தன்னோட இயல்பு மறந்து, உன் பின்னாடி அழைஞ்சா…

‘லவ் யூ, லவ் யூ’னு பின்னாடி அவ சுத்தினதுனால தான், உனக்கு இளக்காரமா போச்சா? அவ காதல் புனிதமானதுடா! அதை ஒரு நாள் நீ புரிஞ்சுப்ப. ஆனா அப்போ அவ உன் வாழ்க்கையில எந்த இடத்திலும் இருக்க மாட்டா. உடம்பை பார்த்து மருந்து எழுதுற உனக்கு, உணர்வுகளைப் பத்தி என்ன தெரியும்? ஒரு பொண்ணை மொத்தமா, அவ உணர்வுகளைக் கொன்று ஜடமாக்கிட்டு, நீயெல்லாம் எப்படி வெளியே ஆம்பளைனு சுத்திட்டு இருக்க? இன்னொரு தடவை நீ வேலையைத் தவிர, வேற விசயங்கள் பேசுறதா இருந்தா, நான் வேலையை விட்டு நிக்கிறதுதான் நடக்கும்.”

“ம்ம்… ஓகே மிஸ்டர் செல்வின், இனி உங்க பெர்ஸ்னல் விசயங்களை, நான் கேட்க மாட்டேன், பேசவும் மாட்டேன். நீங்கதான் என் அப்பாவுக்கு சிறு நிம்மதியைக் கொடுக்குறிங்க, அதைக் கெடுத்து அவரை வருத்தப்பட வைக்க நான் முயற்சிக்கல. தென், தேங்க்ஸ்! என் வருங்கால மனைவிக்கு நம்பர் கொடுத்ததுக்கு, நான் பேசிக்குறேன்.” மிகவும் கூலான குரலில் புகழ் கூற,

“ச்சீ… நீயெல்லாம் திருந்தாத ஜென்மம்டா. அந்த மேனா மினுக்கித் தான் உனக்கு சரியான ஆளு.” என, பல்லைக் கடித்து போனை அணைக்கப் போக,

“ஒரு நிமிஷம் செல்வின், அப்புறம் நான் ஆம்பிள்ளையா இல்லையானு, உன் தங்கச்சிகிட்ட கேளு சொல்லுவா.”

விருப்பு என்பதை

உணர வைத்த நீயே

வெறுப்பு என்பதையும்

எனக்கு காட்டினாய்

உன்னை நினைக்கும்

ஒவ்வொரு நிமிடத்தையும்

வெறுக்கிறேன்..!

***

You may also like

1 comment

M. Sarathi Rio May 17, 2026 - 7:45 pm

ஓ… இதுலத்தான் புகழோட ஆம்பிளைத்தனம் இருக்குதோ…? சூப்பர்.

😀😀😀

CRVS (or) CRVS 2797

Reply

Leave a Comment

About Me

Featured