3
அந்த ஐசியுவின் முன்னே கலக்கமாய் அமர்ந்திருந்தார் சிவகுரு. என்னதான் மனைவியின் செய்கைகள் பிடிக்காமல் போனாலும், அவர் மேல் கடலளவு கோபம் இருந்தாலும், உயிராக நேசித்தவரை இப்படி ஒரு நிலையில் பார்க்க முடியவில்லை. உடல் தளர்ந்து போயிருந்தார். பக்கத்தில் செல்வினும் பதட்டமாகத்தான் நின்றிருந்தான். அவன் வீசிய அம்புதான் வசந்தாவின் இந்த நிலைக்கு காரணம். அவன்தான் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் அவனுக்கு, அவனது மனசாட்சிக்குத் தெரியுமே… அதுவே அவனைக் கொல்லாமல் கொன்றது.
தேவியின் அப்பா முருகேசன் அந்த போன் காலை நம்பாமல், புகழைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தார். அதன் விளைவு அவனது பிஜி படிப்பின் போது, ஒரு பெண்ணோடு ஒரே ப்ளாட்டில் இருவரும் இருந்ததும், சில மாதங்களில் அவனுக்கு ஒரு விபத்தும் நடக்க, அதைத் தொடர்ந்து அந்தப் பெண் காணாமல் போனதும், புகழின் ரிப்போர்ட்ஸில் செல்வின் சொன்னதற்கான உண்மை இருப்பதையும் தெரிந்து கொண்டார்.
சிவகுருவிடம் விசாரிக்காமல் நேரடியாக வசந்தாவிடமே பேசினார். அவரால் இதை நம்பவே முடியவில்லை. இது உண்மையே இல்லை என வாதம் செய்து முருகேசனிடம் சண்டையிட, அதற்கு முருகேசன், “இந்த ரிப்போர்ட்ஸ் சொல்றது பொய்யில்லைனு சொல்றீங்களா? உங்க பையன் காலேஜ் படிக்கும் போதே ஒரு பொண்ணோட குடும்பம் நடத்திருக்கான். அதை பொய்யில்லைனு சொல்றீங்களா? சொல்லுங்க, என் பொண்ணு இப்படி ஒரு தப்பு செஞ்சுட்டு வந்தா, கொஞ்சம் கூட தயக்கம் காட்டாம உங்க பையனுக்கு கல்யாணம் பண்ணுவீங்களா? சொல்லுங்க…”
எனக்கு ஒரு சந்தேகம், “அந்தப் பொண்ணு இருக்காளா, இல்லை கொன்னுடீங்களா? ஏன் கேட்கிறேன்னா, பணக்காரங்க பாருங்க செஞ்சாலும் செய்வீங்க. இந்த உண்மையையே மறைச்சவங்க, அதை செஞ்சிருக்க மாட்டீங்கனு என்ன நிச்சயம்?
நான் இப்பவே போலீஸ் கம்ப்ளைன்ட் பண்றேன், அந்தப் பொண்னைக் காணோம்னு, எங்களை ஏமாத்திட்டீங்கனு மான நஷ்ட வழக்குப் போடுறேன்.” என்று பேசிவிட்டு மடமடவென வெளியேறி விட,
வசந்தாவோ நடந்த எதையும் ஜீரணிக்க முடியாமல் திணறியவர், ‘இவள் என் பிள்ளையின் வாழ்க்கையில் இருந்து போகவே மாட்டாளா? இருந்தாலும் பிரச்சனை, இல்லாமல் போனாலும் பிரச்சனை. கடவுளே! அவளிடம் நான் தோற்றுப் போய்விடுவேனா? என் பிள்ளையை நான் இழந்து விடுவேனா?’ என்று பலவாறு மனதை குழப்பியதில், அவருக்கு மூச்சிரைப்பு வந்தது. வேலையாட்கள் பார்த்து சிவகுருவிற்கு தகவல் கொடுத்துவிட்டு, வசந்தாவை மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிவகுருவிற்கு வேலையாட்கள் மூலம் விசயம் தெரிய, மனைவியின் மேல் கோபம் பொங்கியது. ஆனாலும் இப்போது இருக்கும் நிலையில் அவரை எதுவும் சொல்லாமல் அமைதி காத்தார்.
அரக்க பரக்க ஓடி வந்த புகழ், தன் தந்தையின் அருகில் நின்றிருந்த செல்வினைப் பார்த்து, ஒரே எட்டில் அவனிடம் சென்று சட்டையைப் பிடித்தவன், “நீதான்டா இதுக்கெல்லாம் காரணம், எனக்குத் தெரியும். என்னோட விஷயத்துல ப்ளே பண்ற ஒரே ஆளு நீ மட்டும் தான்டா. துரோகி! நம்பிக்கைத் துரோகி! என் மேல உனக்கு கோபம்னா, அதை என்கிட்ட தான்டா காட்டணும். அதை விட்டுட்டு கேவலமா நடந்திருக்க? என் அம்மாவுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும், உன்னைக் கொன்னுடுவேன்டா நாயே!” என்று சரமாரியாய் அடிக்க,
செல்வினோ பதிலுக்கு எதுவும் செய்யவில்லை. அவனது குற்ற உணர்வு கொண்ட மனம், புகழின் அடியைத் தண்டனையாய் ஏற்றுக் கொண்டது. செல்வின் தவறு செய்திருந்தாலும், அதற்கான மகனின் செய்கை சிவகுருவிற்குப் பிடிக்கவில்லை. ஆத்திரமாக மகனை முறைத்தவர் அங்கிருந்து வெளியேற, தந்தையின் பாராமுகம் அவனைத் தளர்த்த, செல்வினைப் பிடித்திருந்த கைகளும் தளர்ந்தது.
அங்கிருந்த சேரில் விழுந்தவனிடம் தண்ணீரைக் கொடுத்து, “சாரி! இப்படியாகும்னு நான் நினைக்கல புகழ். நீ என்கிட்ட பேசின கோபத்துல அப்படி பண்ணிட்டேன், சாரி. நான் என்ன பண்ணணும் தெரியல, மன்னிச்சிடு புகழ்.” என்று கைகளைப் பிடிக்க, அவன் கண்களில் நீர் திரையிட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் வசந்தாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஆகிவிட, அவரை அன்றே வீட்டுக்கு அழைத்துச் செல்ல டாக்டர் குழு பரிந்துரைக்க, புகழும் அவ்வாறே கூற, மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றார் சிவகுரு.
செல்வின் தயக்கமாய் அவரை ஏறிட, “உன் கோபம் எனக்குப் புரியுது, இனி இப்படி ஆகாம பார்த்துக்கோ.” என்றதோடு கிளம்பி விட்டார். இது எதுவும் வசந்தாவிற்கு தெரியாது. செல்வினைப் பற்றிய தவறான எண்ணம் கொண்டவர், அவரிடம் கூறினால் பிரச்சனை பெரிதாகி விடும் என்பதால், தந்தையும் மகனும் அமைதியாகி விட்டனர்.
“ருக்மா, தம்பியை பத்திரமா பார்த்துக்கோ, நான் வர லேட்டாகும். இன்னைக்கு வேக்ஸின் டேட் தெரியும் தானே? மூணு ஹாஸ்பிடலும் போயிட்டு தான் வருவேன், சரியா? நான் கிளம்பிட்டு போன் பண்றேன். பத்திரமாக இருக்கணும், ஓகே?” என்றவள் குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு, “சஷ்டி கண்ணா, அம்மாவுக்கு பாய் சொல்லுங்க, பாய் சொல்லுங்க…” என்றாள்.
“ஓ… குட்டித் தங்கம் பாய் சொல்லிட்டாங்க.” என்றபடியே ருக்மாவிடம் கொடுத்துவிட்டு, தன் கிளினிக் நோக்கிப் பறந்தாள். அவள் வேலைகள் அவளை ஆக்கிரமிக்க, கடைசியாய் ஒரு ஹாஸ்பிடலில் தன் வேலையை முடித்துக் கிளம்பும் நேரம்தான், அந்த சிறுவனைப் பார்த்தாள் சாரு. பார்க்கவே அள்ளிக் கொஞ்சத் தோன்றும் அழகு. ஆனால் அதன் கண்களில் சிரிப்பில்லை, முகத்தில் சிறுவனுக்கே உண்டான ஒரு கலையுமில்லை.
அமைதியாய்… மிகவும் அமைதியாய் இருந்தது முகம். திடீரென முகத்தைச் சுருக்குவதும், பின் இயல்பாவதும் என இருக்க, சற்று நேரம் கூர்ந்து நோக்கியவளுக்கு, அது வலியால் என தெரிய துடித்துப் போனாள். இச்சிறு குழந்தைக்கு என்ன என்ற கேள்வியே பிரதானமாய் தோன்ற, அங்கிருந்த மருத்துவர்களிடம் விசாரிக்க, அவரோ அவனுக்கு ப்ரைன் கேன்சர் என்று கூற, அய்யோ என்றானது சாருவிற்கு.
தானும் ஒரு மருத்துவர்தான் என்பதை மறந்து, சிறிது நேரம் கலக்கமாய் இருந்தவள், பின் மருத்துவர்களிடம் அவனது நோயின் தீவிரத்தைப் பற்றி விசாரித்து, அவனுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சிகிச்சைப் பற்றியும் கேட்டுவிட்டு, கனத்த மனதுடன் கிளம்பினாள். மனம் அவனையேச் சுற்றிக் கொண்டிருந்தது.
அடுத்து வந்த நாட்களையும் அவளால் சுலபமாய் கடக்க முடியவில்லை. போன் செய்து கேட்போம் என்று நினைத்தவுடன் தான், அச்சிறுவனின் பெயர் கேட்காமல் வந்துவிட்டோம் என்று புரிந்தது. பிறகு அவர்களிடமே கேட்க, ‘நவ்தீப்’ என்றனர்.
வேலை முடிந்த நேரங்களில் நவ்தீப்பைச் சென்று பார்ப்பதும், அவனிடம் சிரிக்க சிரிக்கப் பேசுவதும், அவன் பெற்றோரிடம் இதெல்லாம் ஒன்றுமே இல்லை, சரியாகி விடும் என்று பேசியே அவர்களின் நெகடிவ் எண்ணங்களை மாற்ற ஆரம்பித்து இருந்தாள். அன்றுதான் அவள் சஷ்டியை முதன் முதலாய் நவ்தீப்பைக் காண அழைத்து வந்திருந்தாள். சஷ்டியைப் பார்த்ததும், நவ்தீப்பின் தந்தை சந்தீப்பிற்கு குழப்பமாய் இருந்தது. இந்தக் குழந்தையை எங்கேயோ பார்த்திருக்கிறோமே… எங்கே? எங்கே? என தன் மூளையை கசக்க ஆரம்பித்தார்.
சிவகுரு தன் அலுவலகத்திலும் புகழின் ஒன்றரை வயது புகைப்படத்தை மாட்டியிருப்பார். சந்தீப் வேலை பார்க்கும் நைனிடால் கிளையிலும் அந்த போட்டோ இருக்கிறது. சாருவும் சஷ்டியும், நவ்தீப்புடன் சிறிது நேரம் இருந்துவிட்டு கிளம்பும் நேரம், சாருவிடம் சென்ற சந்தீப், “மேடம், உங்க பார்பி டாலை நான் எங்கேயோ பார்த்து இருக்கேன், எங்கேனு தெரியல. ஆனா உங்களை இப்போதான் முதல் தடவை பார்க்குறேன்.” என்றதும்,
“ஓ… சாரி ப்ரதர், அதுக்கு சான்சஸ் இல்லை. நான் அவனைத் தனியா விடுறதே இல்லை. தென் அவுட்டிங்கே ரேராதான் அழைச்சுட்டு வருவேன். சோ, அது வேற யாரோ போல… ஓகே ப்ரதர், நான் கிளம்புறேன். ஒரு டூ டேஸ் நான் வர முடியாது, நவ்தீப் கேட்டா சொல்லுங்க. அப்புறம் அவனோட ஆப்ரேசன்ல நான் கண்டிப்பா இருப்பேன்.” என்று அவள் வாக்கு கொடுக்க, சந்தீப் அவளிடம் மனதார நன்றி கூறி புன்னகைக்க, விதியும் அவளைப் பார்த்து அகோரமாய் சிரித்தது.
வீட்டிற்கு வந்தவள் ருக்மாவிடம் சஷ்டியைக் கொடுத்துவிட்டு, தன் மருத்துவமனைக்கு கிளம்பும் நேரம் அவளது போன் அடித்தது. எடுத்துப் பார்க்க அது செல்வின் என காட்ட, மனதில் பொங்கிய மகிழ்ச்சியுடன், ‘அண்ணா…’ என்று கூட சொல்லவில்லை. அவன் பேசுவதையெல்லாம் பேசிவிட்டு வைத்து விட்டான்.
என்ன நடந்தது? எதற்கு போன் செய்தான்? எதற்கு இவ்வளவு கோபம்? இவன் இப்படி கோபப்படும் அளவிற்கு அங்கே என்ன நடந்திருக்கும்? அத்தை ஏதேனும் செல்வினிடம் வம்பிழுத்திருப்பாரோ? இல்லையென்றால், ‘திரு… திரு… திருவா…?” அப்படியென்றால் திருதான் எதுவோ பேசியிருக்க வேண்டும். ஆமாம், அத்தை என்ன பேசினாலும் செல்வின் கோபப்பட மாட்டான். அப்போ திருவே தான் செல்வினின் கோபத்திற்கு காரணம். மூளையும் மனமும் செயலிழக்க, அப்படியே தொய்ந்து போனாள் சாரு.
யாரிடமும் மயங்காத மனம், யாரையும் நேசிக்காத உள்ளம், இவனிடம் மயங்கிய காரணம் கடவுளே! மீண்டும் அவனைப் பார்க்க வேண்டுமா? வேண்டாம் என ஒருத்தனை வெறுத்து, ஒதுக்கி அவன் வாழ்க்கையில் இருந்து பிடிவாதமாய் வெளியேற்றப்பட்டவள். அவனிடம் இருந்து தன்னைப் பிரித்த காரணங்கள் அனைத்தும் அப்படியே இருக்க, மீண்டும் அவன் இருக்கும் ஊருக்கா? நெஞ்சே நடுங்கியது.
சஷ்டியின் வரவை அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? சஷ்டி தானே இந்த பிரிதலுக்கு முக்கியக் காரணம். அலைகடலென பொங்கிய காதல் துளிகள் கடலோடு சங்கமித்து, சிப்பிக்குள் முத்துவாய் உதித்தவன் தன் மகன். அவனைக் கேலியாய் பார்த்தால், நிச்சயம் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியாது.
தன் உயிரே போனாலும், குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்கும் தைரியம் அவளுக்கு வரவில்லை. என்னால் என் குழந்தையின் அனைத்தையும் பார்த்துக் கொள்ள முடியும் என்ற உறுதி, அவளது கருவறையைத் தாண்டி, சஷ்டி இந்தப் பூவுலகைப் பார்க்கும் அந்த நொடி தின்னமாய் தோன்றியது. செல்வினும் அவன் மனைவி ஜெனிஃபரும் உடன் இருந்து பார்த்துக் கொண்டனர். அவளுக்குத் தனிமையை கொடுக்கவில்லை. ஆனால் அவளது மனமோ, தனிமையை மட்டுமே எடுத்துக் கொண்டது.
கழுத்தில் தாலி இல்லாமல் இரண்டு மாத கருவோடு அந்த ஊரில் இருக்க முடியாமல், பாபர்ப்பவர்கள் எல்லாம் அவளையே பார்ப்பது போலவும், அவளைப் பற்றியே பேசுவது போலவும், தன் நிலையை எண்ணி வெட்கி, யாரையும் பார்க்க தைரியம் இல்லாமல், இந்த சமுதாயத்திற்கு பயந்து தற்கொலை முயற்சி எடுத்து, அதிலும் காப்பாற்றப்பட்டு, செல்வின் அவளிடம் கோபப்பட்டு, அவளை இங்கே அனுப்பி என்று ஒவ்வொன்றையும் யேசிக்க,
“சாஷிமா! சாஷிமா!” என ருக்மா உலுக்க, திடுக்கிட்டு விழித்தவள் ருக்மா கையில் போனோடு நின்றிருந்தாள்.
சட்டென்று சுயநினைவுக்கு வந்தவள்” “என்ன ருக்மா?” என, “போன் உங்களுக்கு, ஹாஸ்பிட்டல்ல இருந்து.” என்றதும் வாங்கியவள்,
“ஹலோ! ம்ம்… யா, டாக்டர் சாஷி ஹியர்!”
“ஓ… எஸ் டாக்டர், ஷ்யூர்! ஐ வில் கமிங்க் தேர்.”
“எஸ் டாக்டர்.”
“ஓகே டாக்டர்.”
“ட்வென்டி ஃபிப்த் தானே, வந்துடுறேன். நான் ஃப்ரீ தான். நோ… நோ… நவ்தீப்காக நான் ஃப்ரீ பண்ணிக்கிறேன். டோன்ட் வொரி டாக்டர், தேங்க்யூ டாக்டர்.” என்று போனை வைக்க, ருக்மா கேள்வியாய் பார்க்க,
“நவ்தீப் ஆப்ரேசனுக்கு அனஸ்தீசியா கொடுக்க கூப்பிட்டாங்க. டாக்டர் எட்வர்டு அவுட் ஆஃப் ஸ்டேட் போல அந்த டேட்ல, யாரோ ஃபாரின் ரிட்டர்ன் டாக்டர் சர்ஜரி பண்றதா சொல்றாங்க. யார் வந்தா என்ன, அங்க போய் பார்த்துக்கலாம். கேஸ் டீடைல்ஸ் ஆல்ரெடி தெரியும், ஆனா எதுக்கும் ஒரு காப்பி கொடுக்க சொல்லிருக்கேன். செக்யூரிட்டி கொண்டு வந்து கொடுப்பார், வாங்கி வச்சுடு. நான் நைட் வந்து பார்க்குறேன். ட்வென்டி ஃபிப்த் நீ லீவ் போட்டுடாத, வேணும்னா உன்னோட சிஸ்டரையும் இங்கே வரச் சொல்லு.” என்று பேசியபடியே கிளம்பிவிட்டாள் மருத்துவமனை நோக்கி.
“என்னங்க இப்படி கிறுக்குத் தனம் பண்ணி வச்சுருக்கீங்க? ஆன்ட்டிக்கு மட்டும் ரிஸ்கா ஏதாவது ஆகிருந்தா, என்ன செஞ்சிருக்க முடியும்? அங்கிள் முகத்தை எப்படி பார்க்குறது? புகழ் ண்ணா இடத்துல நீங்க என்ன செஞ்சுருப்பீங்க?” என செல்வினின் மனைவி ஜெனிபர் கணவனைத் திட்ட,
“அந்தம்மாக்கு ஒன்னும் ஆகல, வாயை மூடிட்டு போய் வேலையை பாரு. இருக்குற எல்லாரையும் நிம்மதி இல்லாம ஆக்கிட்டு தான் அந்தம்மா போகும், டென்சன் பண்ணாம போடி.” என்று செல்வின் கத்த,
“உங்களையெல்லாம் திருத்தவே முடியாது. தேவையில்லாம பிரச்சனையை இழுத்து விட்டுட்டு திரியாதீங்க.”
“ம்ம்ச்… ஜெனி, நான் இத்தனை வருசத்துல எப்பவாச்சும் இந்த மாதிரி பிஹேவ் பண்ணிருக்கேனா சொல்லு? கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, சாருவை பத்தி என்கிட்டயே பேசுறான் அவன். நான் எப்படித் தவிச்சுப் போயிட்டேன் தெரியுமா? என்னை விட அவனுக்குத் தானடா, அவளை நல்லாத் தெரியும். அப்புறம் எப்படிடா இப்படி பேச மனசு வந்துச்சு அவனுக்கு?” குரல் கரகரத்தது செல்வினுக்கு.
***
1 comment
நிறைய பேருக்கு தான் செய்யுற தப்பு தெரியவே தெரியாதாம்..
அது மாதிரித் தான் திருப்புழுக்கும்… மனசுல தான் தப்புக்கு அப்பாற்பட்டவன் என்கிற நினைப்பு. நினைப்புத்தான் புழைப்பை கெடுக்குமாம்.
😀😀😀
CRVS (or) CRVS 2797