அத்தியாயம் 1
ஊரே பயந்த மாளிகை
மதுரையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தள்ளியிருந்த அந்தச் சிறிய கிராமத்துக்குள் நுழைந்தாலே, காலம் மெதுவாக நடப்பது போலத் தோன்றும். காலை எழுந்ததும் வயலுக்குப் போகும் ஆண்கள், வாசல் தெளித்து கோலம் போடும் பெண்கள், பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள், மதிய வேளையில் ஆலமர நிழலில் சீட்டாடும் முதியவர்கள் என்று எல்லாமே வழக்கம்போல நடந்துகொண்டே இருக்கும். ஆனால் அந்த ஊரில் மட்டும் ஒரு விஷயம் எப்போதுமே வழக்கமாக இருந்ததில்லை.
மாலை ஆறு மணிக்குப் பிறகு, வடக்குப் பக்கம் செல்லும் சாலை வெறிச்சோடிவிடும்.
அந்த வழியில் செல்ல வேண்டிய அவசியம் இருந்தாலும், மக்கள் இரண்டு கிலோமீட்டர் சுற்றிக்கொண்டு வேறு பாதையைத் தேர்ந்தெடுப்பார்கள். சைக்கிளில் போகிறவன்கூட அந்தச் சாலையை அடைந்ததும் வேகத்தை அதிகப்படுத்தி, தலை திருப்பாமல் கடந்து போய்விடுவான். காரணம், அந்தச் சாலையின் முடிவில் நின்றிருந்த பழைய மாளிகை.
அதை யாரும் அதன் உண்மைப் பெயரால் அழைக்கவில்லை.
“பேய்மாளிகை.”
அதுதான் அந்த ஊர் வைத்த பெயர்.
எந்த ஊரிலுமே ஒரு பேய்க் கதை இருக்கும். ஆனால் இந்த ஊரில், அந்தப் பேய்க் கதையே தினமும் புதுசுபுதுசாக வளர்ந்து கொண்டிருந்தது.
“நேத்து ராத்திரி வெள்ளை வேட்டி கட்டிக்கிட்டு ஒருத்தன் மொட்டை மாடில நடந்துட்டு இருந்தானாம்…”
“கதவு தானாகத் திறந்து மூடுதாம்…”
“யாரோ சிரிக்கிற சத்தம் கேட்டுச்சாம்…”
“வீட்டுக்குள்ள விளக்கு எரியுதாம்…”
ஆளுக்கு ஆள் ஒவ்வொரு கதையைச் சேர்த்து சொல்லிக்கொண்டே போனதால், உண்மை எது, பொய் எது என்று யாருக்கும் தெரியவில்லை.
ஆனால் அந்த மாளிகைக்குள் இருந்த ஒருவனுக்கு மட்டும் எல்லாமே தெரியும்.
ஏனென்றால், அந்தக் கதைகளில் வரும் பேய் அவன்தான்.
காசிநாதன்.
ஊர் அவனை “காசி பேய்” என்று அழைத்தது.
அந்தப் பெயர் அவனுக்குப் பிடிக்கவில்லை.
பேயாக மாறிய நாளிலிருந்து இன்றுவரை, “பேய்” என்ற வார்த்தையைவிட “காசிநாதன்” என்ற பெயரை யாராவது சொல்ல வேண்டும் என்று அவன் எத்தனையோ முறை ஆசைப்பட்டிருக்கிறான். ஆனால் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.
அவன் மாளிகையின் பெரிய கூடத்தில் இருந்த பழைய மர நாற்காலியில் அமைதியாக அமர்ந்திருந்தான். கையில் பழுப்பேறிய ஒரு குறிப்பேடு.
அதை மெதுவாகத் திறந்தான்.
முதல் பக்கத்தில் பெரிய எழுத்தில்,
“பயமுறுத்தும் முயற்சிகள் – தோல்விப் பட்டியல்.”
என்று எழுதப்பட்டிருந்தது.
அவன் சலிப்புடன் பக்கத்தைப் புரட்டினான்.
“ஆனி மாதம் – இரவு பன்னிரண்டு மணி.”
“கதவை பலமாக அடித்தேன்.”
“வந்தவன் பயப்படல.”
“கதவுதான் உடைஞ்சுச்சு.”
அடுத்த பக்கம்.
“ஆடி மாதம் – நள்ளிரவு.”
“வெள்ளை வேட்டி கட்டிக்கிட்டு மரத்துக்குப் பின்னால நின்னேன்.”
“வந்தவன், ‘அண்ணே… பால் சொசைட்டி எங்க?’ன்னு கேட்டுட்டுப் போயிட்டான்.”
காசி கண்களை மூடி பெருமூச்சு விட்டான்.
மூன்றாவது பக்கத்தைத் திறந்தான்.
“புரட்டாசி – மழை நாள்.”
“பயங்கரமா சிரிச்சேன்.”
“குடிச்சுட்டு வந்தவன், ‘சிரிக்கிறதுக்கே இவ்வளவு சந்தோஷமா? நானும் சேர்ந்து சிரிக்கட்டுமா?’ன்னு பக்கத்துல உட்கார்ந்துட்டான்.”
குறிப்பேட்டை மெதுவாக மூடிவிட்டு நாற்காலியில் சாய்ந்தான்.
“பேயா வாழ்றதுக்குக் கூட ஒரு யோகம் வேணும் போல…”
அவன் வாய்விட்டு சொன்ன அந்த வார்த்தை, காலியான கூடம் முழுக்க எதிரொலித்தது.
அதே நேரத்தில் மேல்மாடியிலிருந்து ஒரு பெண் குரல் கேட்டது.
“என்ன? மறுபடியும் டைரியா?”
காசி தலைநிமிர்ந்து பார்த்தான்.
மாடிப்படிகளில் மெதுவாக இறங்கி வந்தாள் மல்லிகா.
அவளும் பேய்தான்.
ஆனால் காசிக்கும் மல்லிகாவுக்கும் இருந்த வித்தியாசம் என்னவென்றால், காசி மனிதர்களைப் பார்த்து பயமுறுத்த முயற்சி செய்வான்; மல்லிகா காசியைத்தான் பயமுறுத்துவாள்.
அவள் கீழே இறங்கி வந்து குறிப்பேட்டை அவன் கையிலிருந்து பிடுங்கினாள்.
“இதை இன்னும் தூக்கிப் போடலையா?”
“அது… என் அனுபவம்.”
“அனுபவமா? தோல்வி வரலாறுன்னு சொல்லு.”
காசி அமைதியாக இருந்தான்.
மல்லிகா குறிப்பேட்டைத் திறந்து படிக்க ஆரம்பித்தாள்.
“ஐப்பசி… ‘காற்றுல மிதந்தேன்.'”
அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு அடுத்த வரியைப் படித்தாள்.
“‘வந்தவங்க மேல பாத்து, ட்ரோன் பறக்குதுன்னு கைதட்டினாங்க.'”
அவ்வளவுதான்.
அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
மாளிகையே அதிரும் அளவுக்கு சிரித்தாள்.
காசி முகத்தைத் திருப்பிக்கொண்டான்.
“சிரிச்சு முடிச்சிட்டியா?”
“இல்ல. இன்னும் பாதி புக் பாக்கி இருக்கு.”
“போதும் மல்லிகா.”
“சரி, ஒரு விஷயம் சொல்லு. எழுபத்தைந்து வருஷமா பேயா இருக்க. ஒருத்தரையாவது மயங்கி விழ வச்சிருக்கியா?”
காசி பதில் சொல்லவில்லை.
அந்த அமைதியே அவளுக்குப் பதிலாக இருந்தது.
மல்லிகா குறிப்பேட்டை மூடி அவன் கையில் கொடுத்தாள்.
“உனக்கு ஒரு குறைதான் காசி.”
“என்ன?”
“நீ பேய் மாதிரி யோசிக்கிற.”
காசி புரியாமல் பார்த்தான்.
“அதென்ன அர்த்தம்?”
“மனுஷங்க இப்போ பேயைப் பார்த்து பயப்படுற காலம் போயிடுச்சு. EMI, கடன், மொபைல் பில், குடும்பச் செலவு… இதையெல்லாம் பார்த்துட்டு வாழ்றவனுக்கு, நீ வெள்ளை வேட்டி கட்டிக்கிட்டு முன்னாடி நின்னா அவன் என்ன பயப்படுவான்?”
காசி வாயைத் திறந்தான்.
ஆனால் பதில் வரவில்லை.
அதே நேரத்தில், கிராமத்தின் நுழைவுப் பகுதியில் பழைய மோட்டார் சைக்கிள் ஒன்று நின்றது.
அதிலிருந்து இறங்கிய இளைஞன், எதிரே தெரிந்த டீக்கடையைப் பார்த்து புன்னகைத்தான்.
“முதல்ல ஒரு டீ… அப்புறம் அந்த மாளிகை.”
அவன் யார் என்பது இன்னும் அந்த ஊருக்குத் தெரியாது.
ஆனால் இன்னும் சில மணி நேரங்களில், அந்த ஊரே அவனைப் பற்றித்தான் பேசப் போகிறது.
*
டீக்கடைக்கு எதிரே இருந்த வேப்பமர நிழலில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு, அந்த இளைஞன் மெதுவாக உள்ளே நுழைந்தான். கிராமத்து டீக்கடைகளுக்கே உரிய வாசனை அங்கிருந்தது. கொதிக்கும் பால், இஞ்சி, டீத்தூள், வடை எண்ணெய், ஈரமான மண்—எல்லாமும் கலந்த அந்த மணம், அந்த இடத்தையே தனியாக அடையாளம் காட்டியது.
“ஒரு ஸ்ட்ராங் டீ.”
கடைக்காரன் தலைநிமிர்ந்து பார்த்தான்.
“புதுசா இருக்கீங்களே?”
“ஆமாம்.”
“எந்த ஊரு?”
“மதுரை.”
“எதுக்குங்க இங்க?”
அவன் சிரித்தான்.
“ஒரு வீடு பார்க்க வந்திருக்கேன்.”
“எந்த வீடு?”
“வடக்குப் பக்கத்துல இருக்குற பழைய மாளிகை.”
அந்த ஒரு வாக்கியம் போதும். டீ ஊற்றிக்கொண்டிருந்த கடைக்காரனின் கை நடுவிலேயே நின்றுவிட்டது. டீ குடித்துக்கொண்டிருந்த மூன்று பேரும் மெதுவாகத் திரும்பிப் பார்த்தார்கள். வடை சாப்பிட்டுக்கொண்டிருந்த முதியவர் கூட வாயிலிருந்த துண்டை மென்று முடிக்க மறந்துவிட்டார்.
சில நொடிகள் அந்த டீக்கடையில் ஒரு விதமான அமைதி நிலவியது.
அதற்குப் பிறகு கடைக்காரன் மெதுவாகக் கேட்டான்.
“எந்த மாளிகைன்னு சொன்னீங்க?”
“காசி மாளிகை.”
“அத வாங்கப் போறீங்களா?”
“அதான் யோசனை.”
கடைக்காரன் டீ டம்ளரை அவன் முன்னால் வைத்துவிட்டு, இரண்டு அடிகள் பின்னால் நகர்ந்தான்.
“தம்பி… இந்த டீக்கு காசு வேண்டாம். நீங்க வேற ஏதாவது வீடு பாருங்க.”
அவன் புரியாமல் சிரித்தான்.
“டீ குடிச்சதுக்காக வீட்டை மாத்தணுமா?”
“அது இல்ல.”
“அப்போ?”
“அந்த வீட்டுல பேய் இருக்கு.”
அவன் டம்ளரை எடுத்துப் பருகினான்.
“அப்படியா?”
“அப்படிதான்.”
“நேர்ல பாத்தீங்களா?”
கடைக்காரன் உடனே பதில் சொல்லவில்லை.
அருகில் இருந்த முதியவர் உரையாடலில் சேர்ந்தார்.
“நான் பாத்ததில்லை.”
“அப்போ?”
“பாத்தவங்க சொன்னாங்க.”
அடுத்தவர் சொன்னார்.
“நானும் பாத்ததில்லை.”
“அப்போ?”
“பாத்தவங்களோட மச்சான் சொன்னான்.”
மூன்றாவது ஆள் தொண்டையைச் செருமிக்கொண்டான்.
“நான்…”
அவன் சிரித்துக்கொண்டே பார்த்தான்.
“நீங்களும் பாக்கலையா?”
“இல்ல.”
“அப்போ?”
“எனக்குத் தெரிஞ்ச ஒரு ஆளுக்கு தெரிஞ்ச ஒரு ஆளோட சித்தப்பா…”
“போதும்.”
அவன் கையை உயர்த்திச் சிரித்தான்.
“இப்போவரைக்கும் யாருமே நேர்ல பாக்கல. ஆனா எல்லாருக்கும் தெரியும். அதுதானே?”
மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
அந்தக் கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை.
அவன் டீயை முடித்துவிட்டு டம்ளரை வைத்தான்.
“ஒரு விஷயம் கேக்கட்டுமா?”
“கேளுங்க.”
“அந்த மாளிகை எத்தனை வருஷமா காலியா இருக்கு?”
“எழுபது… எண்பது வருஷம் இருக்கும்.”
“யாருமே வாங்கல?”
“பேய் இருக்கே.”
“அதனால?”
“யாரும் வாங்க மாட்டாங்க.”
அவன் சற்றுநேரம் யோசித்தான்.
“அப்படின்னா விலை ரொம்பக் குறைவா இருக்கும்.”
கடைக்காரன் கண்களை விரித்தான்.
“நீங்க பயப்படவே மாட்டீங்களா?”
“நான் எதுக்குப் பயப்படணும்?”
“பேய்.”
அவன் சிரித்தான்.
“உண்மையாவே பேய் இருந்தா, அதுக்கு வாடகை கேக்க மாட்டேன்ல.”
அந்தப் பதிலைக் கேட்ட டீக்கடையில் இருந்தவர்களுக்கு அவன் புத்திசாலியா, பைத்தியமா என்று புரியவில்லை.
கடைக்காரன் மெதுவாகக் கேட்டான்.
“உங்க பேரு என்ன தம்பி?”
“கபிலன்.”
“என்ன வேலை?”
“வேலைன்னு ஒண்ணும் இல்ல.”
“அப்போ?”
“வாய்ப்பு கிடைச்சா தொழில் பண்ணுவேன்.”
“இந்த மாளிகையில?”
“ஆமாம்.”
“என்ன தொழில்?”
கபிலன் டம்ளரைத் திருப்பி வைத்துவிட்டு, மிகவும் சாதாரணமாகச் சொன்னான்.
“ரிசார்ட்.”
மூன்று விநாடிகள் யாருமே பேசவில்லை.
அடுத்த நொடியே, டீக்கடையே சிரிப்பால் அதிர்ந்தது.
ஒருத்தர் தொடையைத் தட்டிக்கொண்டு சிரித்தார்.
மற்றொருவர் பெஞ்சிலிருந்து எழுந்து நின்று சிரித்தார்.
கடைக்காரன் கண்களில் கண்ணீர் வரும் அளவுக்கு சிரித்தான்.
“பேய்மாளிகையில ரிசார்ட்டா?”
“ஏன் முடியாதா?”
“யாரு தம்பி தங்க வருவாங்க?”
கபிலன் தோளைக் குலுக்கியான்.
“அதுதான் உங்களோட பிரச்சனை. எல்லாரும் பேய் இருக்குன்னு பயப்படுறாங்க. நான் அதையே business-ஆ பார்க்கிறேன்.”
“எப்படின்னு?”
“போர்டு வைக்கலாம்.”
“என்ன போர்டு?”
“‘ஒரு இரவு தங்குங்க… பேயைப் பார்த்தா பணம் திருப்பித் தரப்படும்.'”
டீக்கடையில் மீண்டும் சிரிப்பு வெடித்தது.
கடைக்காரன் சிரித்துக்கொண்டே, “தம்பி… உங்களுக்கு பயமே இல்ல போல.”
“இருக்கு.”
“எதுக்குப் பயம்?”
“வங்கி லோனுக்கு.”
அந்தப் பதிலைக் கேட்டதும் மீண்டும் சிரிப்பு.
அந்தச் சிரிப்பு அடங்க வெகுநேரம் ஆனது.
டீக்கடைக்கு வெளியே நின்றிருந்த வயதான ஒருவர் மட்டும் சிரிக்கவில்லை.
அவர் மெதுவாகக் கபிலனிடம் வந்தார்.
“தம்பி.”
“சொல்லுங்க.”
“நீங்க அந்த வீட்டுக்குப் போகப் போறது உண்மையா?”
“ஆமாம்.”
“ஒரு வார்த்தை மட்டும் ஞாபகம் வச்சுக்கோ.”
“என்ன?”
“அந்த வீட்டுக்குள்ள போறது சுலபம்.”
கபிலன் அமைதியாகப் பார்த்தான்.
“வெளியே வர்றதும் அதே அளவுக்கு சுலபம்னு யாரும் சொல்லல.”
கபிலன் புன்னகைத்தான்.
“நான் வெளியே வரலன்னா?”
“என்ன?”
“அங்கேயே தங்கிடுவேன்.”
அந்த முதியவர் பெருமூச்சு விட்டார்.
“உன்னை மாதிரி பிடிவாதக்காரனை நான் பார்த்ததே இல்ல.”
“நானும் அந்தப் பேயைப் பார்த்ததே இல்ல.”
என்று சொல்லிவிட்டு, டீக்கான பணத்தை மேசையில் வைத்தான்.
அடுத்த நிமிடம், அவன் மோட்டார் சைக்கிள் வடக்குச் சாலையை நோக்கி நகர்ந்தது.
அதே நேரத்தில், காசி மாளிகையின் மேல்மாடி ஜன்னல் அருகே நின்றிருந்த காசிநாதன், பல நாட்களுக்குப் பிறகு அந்தச் சாலையில் தூசி எழுவதைக் கவனித்தான்.
“மல்லிகா…”
“என்ன?”
“யாரோ நம்ம வீட்டுப் பக்கம் வர்ற மாதிரி தெரியுது.”
மல்லிகா ஜன்னலருகே வந்து எட்டிப் பார்த்தாள்.
தொலைவில் ஒரு மோட்டார் சைக்கிள் நிதானமாக மாளிகையை நோக்கி வந்துகொண்டிருந்தது.
அவள் அமைதியாகச் சொன்னாள்.
“பாவம்…”
காசி குழப்பமாக அவளைப் பார்த்தான்.
“யாரைப் பார்த்து?”
“வர்றவனைப் பார்த்து இல்ல…”
ஒரு நொடி நிறுத்திவிட்டு அவள் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னாள்.
“உன்னைப் பார்த்துதான்.”
தொடரும்….
1 comment
அதாவது… நம்ம ஆளு பேய்க்கே டஃப் கொடுக்கப் போறான் அப்படித்தானே..?
😀😀😀
CRVS (or) CRVS 2797