தூரம் 2
தேனி மாவட்டத்தின் தென் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய அழகிய கிராமம் இலட்சுமிபுரம். வைகை நதியின் ஆற்றாங்கரை பாசனம் எப்போதும் அந்த ஊரை பசுமை போர்த்தியே காட்டும். நெல் விளைச்சலை விட முருங்கை, நெல்லி, தக்காளி, வெண்டை, அவரை, மிளகாய் என காய்கறிகள் விளைச்சலே அதிகம்.
ஆடி பட்டத்தை எதிர்பார்த்து ஏமாந்து போகாமல், காலத்திற்கேற்ப தங்களை புதுப்பித்து, தங்கள் விவசாய முறைகளையும் புதுப்பித்து, விளைச்சலையும் அதிகமாக்கிக்கொண்ட கடவுள் எனும் முதலாளி கண்டெடுத்த விவசாய மக்கள்.
விவசாயத்தை மட்டுமே உயிரென வாழும் மக்களில் கந்தவேலும் ஒருவர். கந்தவேல், சுப்புலட்சுமி தம்பதியருக்கு இரு மகன்கள். மூத்தவன் இளங்கோ, இளையவன் வெங்கடேஷ்.
மூத்தவனுக்கு கந்தவேலின் அக்கா மகளான பூங்கொடியை எடுக்க, இளையவனுக்கு சுப்புலட்சுமியின் அண்ணன் மகளான வனிதாவை மருமகளாக எடுத்ததன் மூலம், தங்கள் உறவையும் புதுப்பித்துக் கொண்டவர்தான் கந்தவேல்.
வெங்கடேஷ் சிறு வயதில் இருந்தே சுப்புலட்சுமியின் அம்மாவிடம் வளர்ந்ததால், வளர்ந்த இடத்திலேயே பாசம் செல்லும் என்ற சொல்லுக்கேற்ற வகையில், அவனுக்கு அவர்கள் பக்கம்தான் ஒட்டுதல் அதிகம். வனிதாவும் ஒரே பெண் என்பதால், திருமணம் முடிந்ததுமே அவர்கள் வீட்டோடு மாப்பிள்ளையாக பேஷாக சென்றுவிட்டான்.
இப்படித்தான் நடக்கும் என எல்லோருக்கும் முன்னமே தெரிந்திருக்க, அதில் யாருக்கும் வருத்தம் இல்லை. சொல்லப் போனால் சுப்புலட்சுமிக்கு தன் இரு பிள்ளைகளுக்கும், தன் இரு அண்ணன் மகள்களையும் கொண்டு வரவே விருப்பம்.
அந்த எண்ணத்தில் இருந்தவரின் நினைவில், பெரிதாக ஒரு இடியை இறக்கினான் பெரிய மகன் இளங்கோ. தன் அத்தை தேவியின் மகளான பூங்கொடியைத்தான் கட்டுவேன் என்று சொல்லிவிட்டான்.
வீட்டில் பெரும் பிரளயமே நடந்தது. ஏன், சுப்புலட்சுமி, தேவியின் வீட்டிற்கே சென்று சண்டையிட்டு வந்தார். அதனால் தேவியின் கணவர் சங்கர், மகளுக்கு வேறு பக்கம் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, இங்கு இளங்கோ தாயிடம் பேசவில்லை, சண்டையிடவில்லை. ஏன், எதற்கென்று கேட்கவுமில்லை. யாரிடமும் சொல்லாமல் ராணுவத்தில் சேருவதற்காக கிளம்பிவிட, மகனின் இந்த புதிய பரிமாணத்தில் அரண்டுவிட்டார் சுப்பு.
அதோடு கந்தவேலுவும் அவர் தாய் பேச்சியும், ‘என் பேத்தியை வேண்டாமென்று சொல்வாயா?’ என சுப்புவை உண்டில்லை என்றாக்கிவிட, வேறு வழியே இல்லாமல் இளங்கோ மற்றும் பூங்கொடியின் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டார் சுப்புலட்சுமி.
அப்போது பூங்கொடி பன்னிரண்டாம் வகுப்பின் தேர்வில் இருந்தாள். தேர்வு முடிந்ததுமே திருமணத்தை முடித்துவிடலாம் என்று பேசி வைத்தனர்.
திருமணம் என்றால் என்னவென்றோ, காதலென்றால் என்னவென்றோ அறியும் முன்னரே, இளங்கோவுடனான அவளின் திருமணம் முடிந்திருந்தது.
படிக்க வேண்டும் என்ற பெண்ணின் நியாய ஆசையை, இளங்கோவின் காதல் என்ற பேராசை வென்ற்றிருந்தது.
***
தேவி, சங்கர் தம்பதிக்கு மூன்று பெண்கள். மூத்தவள் ஆனந்தி, அவளது கணவன் கணேசன். கொஞ்சம் நிலமும் ஒரு ரைஸ் மில்லும் இருக்க, கஷ்ட ஜீவனம் இல்லை. அவர்களுக்கு நித்யா, நிவேதா என இரண்டு பெண்கள். இருவருக்குமே திருமணம் முடித்துவிட்டார்கள்.
இரண்டாவது அமுதா, அவளின் கணவர் நடராஜ். சொந்தமாக ஹோட்டல் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு இரண்டு ஆண்பிள்ளைகள், மூத்தவன் விஷ்ணு. இப்போது மலேசியாவில் வேலையில் இருக்க, சிறியவன் விகாஷோ கல்லூரியின் முதலாமாண்டில் இருக்கிறான்.
மூன்றாவது தான் நம் நாயகி பூங்கொடி. இளங்கோவுக்கு மத்திய ரயில்வேயில் இன்ஜீனியர். இப்போது தேனியில் வேலை. இரண்டு பிள்ளைகள், மூத்தவள் நர்த்தனா பத்தாம் வகுப்பில் இருக்க, இளையவன் நவீன் ஒன்பதில் இருக்கிறான். இருவருக்கும் ஒரு வயதே வித்தியாசம்.
இன்று ஆனந்தியின் இரண்டாவது பெண்ணிற்கு வளைகாப்பு. அந்த விசேஷத்திற்குத்தான் அனைவரும் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.
அரக்கபரக்க வேலையை முடித்து கிளம்பி கதவை அடைக்கும் நேரம், “என்ன கொடி கிளம்பிட்டியா?” என்றபடியே வந்தார் சந்திரா. இளங்கோவிற்கு சித்தி முறை, மிகவும் நல்ல மனுசி.
“ஆமா அத்த, நீங்க வரலையா?” என்றாள் வீட்டைப் பூட்டியபடியே.
“இல்லம்மா… இந்த கிழவிய விட்டுட்டு எங்க வர முடியுது? கொஞ்சம் நேரம் ஆளில்லன்னா ஏலம் போட ஆரம்பிச்சிடும். இந்தா மொய்பணம், மாமா பேர் போட்டு எழுதிட்டு வந்திடு. ஆனந்திகிட்ட நான் போன்ல பேசிக்கிறேன். வரலன்னு வருத்தப்பட்டுக்கப் போகுது.” என்று பேசிக்கொண்டிருக்கும் போதே, கந்தவேலுவும் சுப்புலட்சுமியும் பின்பக்கம் இருந்து வந்தனர்.
“என்ன சந்திரா நீ வரலையா?” என்ற சுப்புவிடம் கொடியிடம் சொன்ன அதே பதிலை சொல்ல,
“அதுவும் சரிதான்…” என்று அவர்கள் கிளம்ப, பேருந்து நிறுத்தத்தை நோக்கி வேகமாக நடக்க ஆரம்பித்தாள் கொடி.
தன்னைக் கடந்து சென்ற இரு பெண்களையும் பார்த்தபடியே நின்றிருந்த சந்திராவின் மனதில் அத்தனை வருத்தம். வயசான காலத்தில் தங்கத்தில் தாலி செயின், கல் வைத்த கம்மல், கழுத்தை ஒட்டிய ஆரம், பட்டுச்சேலை என சுப்புலட்சுமி மின்னிக்கொண்டு போக, கொடியோ கவரிங் நகையில் ஒரு கம்மல், கழுத்தில் மஞ்சள் கயிறு, கையில் கண்ணாடி வளையல் என பரிதாபமாக செல்ல, கொடியை நினைத்து அப்படியொரு வேதனை அவருக்கு.
தேவியின் மூன்று பெண்களில் அமுதா மட்டுமே சற்று வாய், கொஞ்சம் சுயநலம் உள்ளவள். மற்ற இரு பெண்களிலும் குறை இருந்ததில்லை. அதிலும் கொடியிடம் குறையை பார்க்கவே முடியாது.
அமைதியும் அடக்கமுமான பெண். யார் கண் பட்டதோ, அவள் வாழ்க்கை இப்படியாகிவிட்டது. சோகமான பெருமூச்சுடன் தன் வீட்டிற்கு வந்தவரை, “என்னம்மா அண்ணி கிளம்பிட்டாங்களா?” என்றாள் நந்தினி, அவரின் மகள்.
“ம்ம்… கிளம்பிட்டாங்க. உங்க பெரியப்பனும் பெரியாத்தாளும் கார்ல போறாங்க. அந்த புள்ளைய கூட்டிட்டு போனா என்ன? உன் பெரியாத்தா இன்னும் மினுக்கிக்கிறத விடல, என்ன பொம்பளையோ போ…” என சந்திரா எரிச்சலாக சொல்ல,
“விடும்மா… அண்ணி நம்மக்கிட்டத்தான் கொஞ்சம் நல்லா பேசுது. நீ இப்படி பேசுறது தெரிஞ்சா அப்புறம் இங்கேயும் வராம போயிடும்.” என்ற மகளின் கூற்று உண்மை என்பது போல் அமைதியாகிவிட்டார்.
சந்திராவிற்கு தேவியை மிகவும் பிடிக்கும். அவர் திருமணமாகி வந்த புதிதில் தேவிதான் எல்லாமே சொல்லிக் கொடுத்து பழக்கியவர்.
அவரின் குணத்தை பிரதிபலிப்பது போலவே கொடி இருக்க, எப்படியாவது தன் மகனுக்கு முடித்துவிட வேண்டும் என்று நினைத்திருந்தார்.
ஆனால் அதற்குள் இளங்கோ பிரச்சனை செய்து கல்யாணத்தை முடித்துவிட்டான். இருவருக்கும் அத்தை மகள்தான் என்றாலும், இளங்கோவிற்குத்தான் உரிமை அதிகம். அதனாலே சந்திரா அமைதியாகிவிட்டார்.
அனைத்தையும் யோசித்தபடியே வேலைகளை செய்ய, இங்கு பேருந்தில் ஏறியிருந்தாள் கொடி. கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு வழியாக தேனிக்கு வந்து, அங்கிருந்து போடி செல்லும் பேருந்திலும் ஏறி விட்டாள்.
அன்றைய காலையில் இருந்த மனநிலை இப்போது இல்லை. பல மாதங்களுக்கு பிறகு தன் சொந்தங்களைப் பார்க்க போகும் ஆர்ப்பரிப்பு. அதிலும் தன் தந்தையைக் காணப் போகும் சந்தோசம். எந்த வயதானலும் பெண்ணை விரும்பும் ஒரே உயிர் அவளின் தந்தை தானே?! அந்த தந்தையைக் காண முப்பது வயதிலும் மூன்று வயது குழந்தை போல் மனம் துள்ளிக் குதித்தது.
பேருந்து நிறுத்தத்தில் இறங்கியதுமே அமுதாவின் கணவர் நடராஜ் வண்டியுடன் காத்திருக்க, இறுக்கமாய் இருந்த இதயம் இதமாய் மாறியது.
பேச்சில்லை இருவரிடமும். புன்னைகையும் சிறு தலையாட்டலுமாக கொடி வண்டியில் ஏறி அமர, வீட்டை நோக்கி பறந்தது அந்த ஸ்ப்லெண்டர்.
கொடியைப் பார்த்ததும் அனைவரும் சுற்றிக்கொள்ள, அந்த நிமிடமே அவள் மனதில் இருந்த கஷ்டமெல்லாம் அடியாழத்திற்கு சென்றுவிட்டது.
நித்யாவும் நிவேதாவும் அவளைக் கட்டிக்கொள்ள, “ஹேய்… ஹேய்… வயிறு இடிக்கப்போகுது நிவிமா…” என சொன்னாலும், இருவரையும் இறுக்கிக் கொண்டாள் கொடி.
“சித்தி ஏன் நவீனும் நதியும் வரல?” என்றபடியே வந்த விகாஷ் கொடியின் தலையில் முட்ட, பதில் சொல்லாமல் சிரித்தபடியே அவன் தலையைக் கோதிவிட்டாள்.
“சரி, சரி எல்லாரும் போங்க. கொடி, பாப்பாவுக்கு நகையை மட்டும் போட்டுவிடு. நீதான் போடணும்னு மாமா நேத்தே சொல்லிட்டார்.” என கூறியபடியே பெரியக்கா ஆனந்தி வர,
“சரிக்கா…” என அக்காவிற்கு பதில் சொன்னவள், “வா நிவிம்மா.” என பெண்ணை அழைத்துக் கொண்டு சென்றாள். கொடியின் முகத்தில் பட்டொளி மலர்ச்சி.
சுப்பு ரொம்ப நேரமாகவே கொடியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த பார்வையில், இந்த வீட்டில் ராணி போல் வலம் வரும் தன் மருமகள், தன் வீட்டில் வேலைக்காரியை விட மோசமாக நடத்தப்படுகிறாளே… அதற்கு தானும் ஒரு காரணமாகிட்டோமே என்ற குற்ற உணர்வு குறுகுறுத்தது.
அப்படியே மெல்ல பார்வையை சுழலவிட்டார். இப்போதும் கொடியைச் சுற்றி அத்தனை பேர் இருந்தனர். அவள் நகையைப் பார்க்கவில்லை, உடையைப் பார்க்கவில்லை. அவள் மனதை மட்டுமே புரிந்த உறவுகள். இதெல்லாம் கிடைப்பது அரிதிலும் அரிது. கொடிக்கு கிடைத்திருந்தது.
தன் வீட்டு சொந்தங்களை நினைத்துப் பார்த்தார். “கழுத்துல ஒன்னுமில்லாம வந்து நிக்க போறா உன் மருமக. அப்புறம் நம்ம சாதி சனமெல்லாம் உன்னைத்தான் ஏளனமா பேசுவாங்க. அதனால பார்த்து கூப்பிட்டு வா, இல்ல விட்டுட்டு வந்துடு.” என தன் பெரிய மதினி பேசியது காதுக்குள் இன்னும் ஒலித்தது.
“அத்தை ஆரம்பிச்சிடலாமா?” என அமுதா வர,
“சம்பந்தி வீட்டுல ஒரு வார்த்தை சொல்லிட்டு, புள்ளைய மனையில உக்கார வைக்க சொல்லு அமுதா. நல்ல நேரம் ஆரம்பிச்சிடுச்சு.”
“சரிங்கத்த, நீங்களும் வாங்க. அங்கேயே சேர் போட சொல்றேன்.” என அவரை அழைத்துச் சென்றவள், சொன்னபடியே மனைக்கு எதிரில் சேரை போட்டு சுப்புவை அமர வைத்துவிட்டாள்.
இதெல்லாம் கொடி சொல்லி அமுதா செய்வது என அவருக்குத் தெரியும். உள்ளே வேலையாக இருந்தாலும் தங்கள் இருவர் மீதும் அடிக்கடி பார்வையை செலுத்திக்கொண்டே இருப்பாள்.
அடுத்து விழா ஆரம்பிக்க, அவர்கள் வீட்டு வழக்கப்படி கொடியே முதல் வளையலைப் போட்டு ஆரம்பிக்க, என்ன முயன்றும் சங்கரின் கண்கள் கலங்குவதைத் தடுக்க முடியவில்லை.
சீரும் சிறப்புமாய் வளர்த்த தன் பெண், இன்று வெயிலிலும் மழையிலும் காட்டு வேலைக்குச் செல்கிறாள் என்று தெரிந்த அந்த தந்தையின் மனம், எத்தனை பாடுபடும்?
அருகில் நின்றிருந்த கந்தவேலுதான், “எல்லாம் சரியாகிடும் மாமா, கொடி எல்லாத்தையும் சரி பண்ணிடுவா. இவ்வளவு நாள் பொறுத்தோம், இன்னும் கொஞ்ச நாள்தானே மாமா…” என்று சமாதானம் செய்ய,
“அதுவரைக்கும் என் பொண்ணு உயிரோட இருக்கணுமே மச்சான்…” என்றவர் மகளை நோக்கி நடையைப் போட்டார்.
சங்கரின் இந்த வார்த்தையும் அவரது உதாசீனமும், கந்தவேலை வெகுவாக தாக்கியது. அவர்கள் சொல்வதும் சரிதானே? அனைத்தும் சரியாகும் வரை கொடி நன்றாக இருக்க வேண்டுமே? இப்போதே பாதியாளாக இருக்கிறாள். இனி எல்லாம் சரியாகும்வரை என்றால்? யோசனையோடே சென்று மனைவியின் அருகில் அமர்ந்தார்.
கணவரின் அரவம் உணர்ந்து, “என்னங்க? அண்ணே என்ன சொன்னார்? உங்க முகம் வாடிப்போச்சு…” என்க,
“அவர் பொண்ணை உயிரோடவாவது கொடுப்போமானு என்னைப் பார்த்து கேட்குறார். என்ன பதில் சொல்றது நான்? ஆத்தாளும் மகனும் அன்னைக்கு என்ன ஆட்டம் போட்டீங்க? இன்னைக்கு யார் இதுக்கெல்லாம் பதில் சொல்றது? சொல்லு… நீ சொல்றியா, இல்ல உன் மகன் வந்து சொல்ல போறானா? மத்த மருமகனுங்கள பாரு, அவங்க பிள்ளைங்கள பாரு. இத பார்த்து அந்த மனுசனுக்கும் கொடிக்கும் எவ்வளவு வருத்தம் வரும்.
நல்லவேளை என் அக்கா இல்ல. இருந்திருந்தா என்னை கொன்னுருப்பா?” என வார்த்தைகளில் அழுத்தம் கொடுத்து மனைவியை முறைத்தபடியே பேச, சுப்புவால் இதற்கு பதில் சொல்ல முடியவில்லை.
அவர் நினைத்திருந்தால் அப்படி ஒரு பிரச்சனையே மகனுக்கும் மருமகளுக்கும் வந்தே இருந்திருக்காது. மகன் தன் பேச்சை கேட்காமல் திருமணம் செய்து கொண்டான் என்ற கோபம், தன் அண்ணன் மகள் வாழ வேண்டிய வாழ்க்கை இவள் வாழ்கிறாளே என்ற அகங்காரமும் சேர்ந்துதான், அன்று அவர் புத்தியை மழுங்க செய்தது.
அதன்பிறகு எத்தனையோ நாள் கொடியோடு பிரச்சனை வேண்டாம் என்று, மருமகளுக்காக மகனிடம் கெஞ்சி பார்த்திருக்கிறார், கொஞ்சி பார்த்திருக்கிறார். அழுது, ஏன் செத்துவிடுவேன் என மிரட்டி கூட பார்த்துவிட்டார். அதையெல்லாம் அவன் கண்டுகொண்டதே இல்லை.
‘எங்க வாழ்க்கைல நீங்க தலையிடாதீங்க.’ என்று ஒரே வார்த்தையில் முடித்து விடுவான்.
அன்றிரவே, “என்ன, எங்கம்மாவை பேசி மயக்கிட்டியா? ஆகவே ஆகாத மருமக மேல கரிசனம் ததும்பி வழியுது…?” என நக்கலாக கூறி அவளை வருத்தப்பட செய்துவிட்டு செல்வான்.
அதனால் தங்கள் வாழ்க்கையைப் பற்றி யாரும் பேச வேண்டாம் என்று எல்லோரிடமும் சொல்லிவிட்டாள் கொடி.
கணவரின் பேச்சில் துளிர்த்த கண்ணீரை துடைத்தபடியே எழுந்த சுப்பு, கொடியை நெருங்கினார். ஆனால் காதலாடும் தூரங்கள் தூரங்களாகவே இருக்கே…?
***