தூரம் 3
கொடியை நோக்கி நடந்த சுப்பு, “கொடி!” என்று அழைக்க, “என்னங்கத்த?” என்றவளிடம், தன் கையில் இருக்கும் இரண்டு வளையல்களை கொடுத்து, “இதை நீயே போட்டுவிடு.” என கூற,
“இருக்கட்டும் அத்த, பெரியவங்க நீங்களே போடுங்க. அதுதான் அவளுக்கு ஆசிர்வாதம்.” என்றதும் பெரிதாக அடிவாங்கினார் சுப்பு.
இதே நிவேதாவின் சடங்கு சீருக்கு தன் மகன் ஒரு பவுனில் நகை எடுத்து கொடுத்ததற்கு, மகனை விட்டு மருமகளிடம் அத்தனை பேச்சு.
“என் மகன் சம்பாத்தியத்தை எல்லாம் உங்க வீட்டு ஆளுங்களுக்கு கொண்டு போய் கொட்டிட்டு வர? என்ன, கேட்க ஆளில்லாம ஆடிட்டு இருக்கியா? பத்தாயிரம் ரூபா காசா செஞ்சிட்டு வர்றதுக்கு என்ன? பவுனு விக்கிற விலைக்கு பவுனுல மொய் செய்றீங்க… எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்…” என அவர் பேசிய பேச்சை அன்று சுலபமாக கடந்து வர முடிந்தது.
காரணம், அப்போது கணவனின் துணை இருந்தது. ஆனால் இன்று? அது முடியாது. கணவனே, ‘என் அம்மா சொல்றது உண்மைதானே…’ என்பான். அதை கேட்டால் அவளால் தாங்கமுடியாது.
இத்தனைக்கும் நர்த்தனாவின் சடங்கு சீரில் ஒரு பவுனும் பணமாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் மொய்யாகவும் செய்திருந்தார் நடராஜ். அதற்கு பிறகுதான் சுப்பு வாயை மூடினார்.
இதையெல்லாம் யோசித்து தான் கொடி சொன்னாள். அது சுப்புவிற்கும் புரிய, அமைதியாக அந்த காப்பை நிவேதாவிற்கு போட்டு ஆசிர்வாதம் செய்தார்.
விழா முடிந்து வீட்டாட்கள் சாப்பிட அமரும் நேரம் மணியைப் பார்த்தாள் கொடி. ஒன்றை நெருங்கியிருக்க, ‘சாப்பிட்டு கிளம்பினா சரியா இருக்கும். லேட்டாச்சுன்னா பிள்ளைங்க வந்து வெளியில் நிக்கும்.’ என யோசித்தவள் தன் தந்தையைத் தேடினாள்.
அதற்கு முன்னதாகவே கந்தவேலு மருமகளிடம், “நாங்க முன்னாடி போறோம் கொடி, பிள்ளைங்க வந்தா அத்த பார்த்துக்குவா, நீ பதறாம வா.” என சொல்லிவிட்டு சென்றாலும், கணவன் என்ன சொல்வானோ என்ற பயத்தில் கிளம்பிவிடவே நினைத்தாள்.
தன் தாய் இறந்த பிறகு தனியாக இருக்கும் தன் அப்பாவை, அடிக்கடி வந்து பார்த்து போவாள் கொடி. இளங்கோவே வாரத்தில் ஒருநாள் மறக்காமல் அழைத்து வருவான்.
பிரச்சனை என்றான பின்தான் போக்குவரத்து குறைந்தது. வந்திருக்கும் இப்போதாவது அவருடன் நேரம் செலவளிக்கலாம், அதோடு அவரிடம் பேசவும் வேண்டும் என்பதால் தேட, ஒரு மரத்தின் அடியில் தனியாக அமர்ந்திருந்தார் சங்கர்.
அவரைப் பார்த்ததும் முகம் தானாக மலர, வேகமாக அவரிடம் வந்தவள், “ப்பா…” என்றாள் பாசத்தின் மொத்த குரலாக.
அந்த குரலுக்கு ஏங்கி போயிருந்தாரோ என்னவோ, “கண்ணு…” என்றவரின் குரலும் கலங்கிப் போய்தான் வந்தது.
“ஏங்கண்ணு சாப்பிடலையா?” என்றவர் மகளின் கைப்பிடித்து அருகில் அமர வைத்துக்கொண்டார்.
“உங்கக்கூடத்தான் சாப்பிடணும்ப்பா. சாப்பிட்டு கிளம்ப நேரம் சரியா இருக்கும். பிள்ளைங்களும் வந்துடுவாங்க.”
“சரி கண்ணு சாப்பிடலாம், அமுதாவும் வரட்டும். வந்ததுமே சொன்னா, அப்பா நாம எல்லாம் ஒன்னா சாப்பிடலாம்னு…”
“ஆமாப்பா… ரொம்ப நாளாச்சுல்ல…” என்ற மகளின் தலையில் கை வைத்தவர், “தம்பி கோபம் கொஞ்சம் கூட குறையலையா கண்ணு?” என்றார் விடை தெரிந்தே.
என்ன சொல்வாள்? பதிலே தெரியாத கேள்வி. நாளுக்கு நாள் அவனின் விலகல் அதிகமாகும் போது என்ன பதில் சொல்வாள்? இந்த இரண்டாண்டில் ஏன் இருக்கிறோம் என்று அவள் எண்ணாத நாட்களே இல்லை. நிமிர்ந்து அவரைப் பார்க்கவே இல்லை.
“நான் செஞ்சதும் தப்பு தானேப்பா…” என்றாள் வழக்கம் போல.
“கண்ணு, உனக்கு நான் பலமுறை சொல்லிட்டேன். உன்மேல எந்த தப்பும் இல்லன்னு. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அப்படி அமைஞ்சி போச்சு. நீ மறுபடியும் அதே சொன்னா என்ன அர்த்தம்? யார் என்ன வேணும்னா சொல்லட்டும், என் பொண்ணை பத்தி எனக்குத் தெரியும். மனசை போட்டு குழப்பாத கண்ணு…” எனவும், பெருங்கேவல் வெடித்தது பெண்ணுக்கு.
அவர் கையில் முகத்தைப் புதைத்து அழுதவளை இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். என்ன இல்லை என் பெண்ணிடம்? இதுதான் அவரது கேள்வி. யார் கண் பட்டதோ, அவள் வாழ்க்கையே வீணாகிவிட்டதே என்று உள்ளுக்குள் நொறுங்கிப் போனார்.
“போதும் கண்ணு… முகத்தை துடை, சாப்பிடலாம்.” என்றதும் முகத்தைத் துடைத்தவள், “ப்பா, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்ப்பா.” என்றாள்.
“என்ன கண்ணு, மேலுக்கு முடியலையா? நம்ம வீட்டுல வந்து இருக்கியா கொஞ்சநாள்…?” எனவும்,
“அதெல்லாம் இல்லப்பா, எனக்கு… எனக்கு… கொஞ்சம் பணம் தர்றீங்களாப்பா?” என்றாள் தயங்கி, தயங்கி.
“என்ன கண்ணு… ஏன் கண்ணு, வேற எதுவும் பிரச்சனையா?” என தந்தைக்கே உரிய பதட்டத்தில் கேட்க,
“இல்லப்பா…” என அவள் காரணம் சொல்ல வருவதற்குள், “ஏன், மறுபடியும் உன் புருசனுக்கு தெரியாம எங்கேயும் கடனை வாங்கி வச்சிட்டியா?” என கோபமாக கேட்டபடி அமுதா வர, அந்த பேச்சின் அதிர்வில் சட்டென்று எழுந்து நின்றுவிட்டாள் கொடி.
“என்ன பேசுற நீ…” என அதட்டிய கணவனை முறைத்தவள், “என்னடி பண்ணி வச்ச? மறுபடியும் ஏதும் பிரச்சனையா? உன் புருஷன் கால்ல விழறது தான் எங்க வேலையா?” என தங்கையைப் பார்த்து கத்த,
சற்றும் யோசிக்கவில்லை கொடி. தன் அதிர்விலிருந்து வெளியில் வந்தவள், யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் விறுவிறுவென வெளியில் நடக்க ஆரம்பித்தாள்.
“பைத்தியமாடி நீ…?” என நடராஜ் மனைவியைக் கத்த,
“கண்ணு… கண்ணு… நில்லு கண்ணு…” என சங்கர், கொடியின் பின்னே வேகமாக நடந்தார்.
அப்போதுதான் அவர்களை சாப்பிட அழைக்க வந்த ஆனந்தியிடமும் கணேஷிடமும், நடராஜ் அங்கு நடந்த அனைத்தையும் சொல்ல,
“என்ன அம்மு நீ? இங்கதான் அவ கொஞ்சம் நிம்மதியா இருந்தா, அதையும் கெடுத்துட்டியே? பொறுமையா கேட்டுருக்கலாம் இல்ல, சாப்பிடாம கூட போறா. இனி கூப்பிட்டா கூட வரமாட்டா. எதுக்கு உனக்கு இவ்வளவு அவசரம்?” என தங்கையைக் கடிந்து, தந்தைக்குப் பின்னே ஆனந்தியும் ஓட,
“ச்சீ… என்ன பொம்பளடி நீ? அவ்வளவு கஷ்டத்துலயும் அந்த புள்ள யாருகிட்டயும் வந்து நிக்கல. இப்போவும் அவங்க அப்பாகிட்டதான் பணம் கேட்டா. உங்கிட்டயா கேட்டா? எதுக்கு இவ்வளவு கோபம் உனக்கு? நேத்தும் போன் செஞ்சி அவ்வளவு பேசுற? ஆதரவா பேசலன்னாலும் பரவாயில்லை, வருத்தப்படுத்தாம இருக்கலாமில்ல? எவ்வளவு கஷ்டப்படுறா தெரியுமா…? காட்டு வேலைக்கு போய் கடனை கட்டுறா. உன்னை மாதிரி கல்லாவுல உக்காந்து ராஜ்ஜியம் பண்ணல.” என மனைவியை வார்த்தைகளால் சாடினான் நடராஜ்.
“விடு ராஜா, பேசி என்ன பிரயோஜனம் இருக்கு? நீ இங்க எல்லாம் பார்த்துக்க, நான் போய் கொடியை பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன்.” என்ற கணேஷிடம்,
“நானும் வரேன் அண்ணா. அந்த புள்ளக்கிட்ட நல்லதா நாலு வார்த்தை பேசல, அதுக்குள்ள தேளா கொட்டி துரத்தி விட்டுட்டா. நீயே இங்க கட்டிட்டு அழு…” என்ற நடராஜ், மனைவியை விட்டுவிட்டு கொடியிடம் ஓடினான்.
அதற்குள் கொடி கொஞ்சம் தூரமே சென்றிருந்தாள். சங்கரும் ஆனந்தியும் அவளைப் பிடித்து நிறுத்தியிருந்தனர். அழுது ஓய்ந்திருந்தாள் கூட பரவாயில்லை போல? அழுகையை அடக்கி ஒருமாதிரி இறுக்கமாக நின்றிருந்தவளைத்தான் அவர்களால் பார்க்க முடியவில்லை.
சூழ்நிலையின் இறுக்கத்தை உணர்ந்த நடராஜ், இனி என்ன சமாதானம் செய்தாலும் கொடியை நிறுத்த முடியாது என உணர்ந்தவன், “அண்ணா நீங்க போடியில போய் பஸ் ஏற்றிவிட்டுட்டு வாங்க. மாமா நீங்களும் போயிட்டு வாங்க. அண்ணி வாங்க, நாம இங்க எல்லாம் பார்த்துக்கலாம்.” என்றதும் மற்றவர்களுக்கும் அதுவே சரியெனப்பட்டது.
கொடியை மேலும் சங்கடப்படுத்தி, கட்டாயப்படுத்தி சாப்பிட வைக்க சங்கருக்கும் விருப்பமில்லை. அவர் கணேஷை பார்க்க, அவரும் தன் வண்டியை எடுத்துக்கொண்டு வந்தார்.
மூவரும் கிளம்ப ஆனந்திக்கு மனதே சரியில்லை. “ஏன் மதினி, உங்க தங்கச்சி இப்படி இருக்கா? எவ்வளவு சந்தோசமா இருந்த பொண்ணு? அவ வாழ்க்கை இப்படியாகிடுச்சுன்னு கொஞ்சமும் வருத்தப்படாம, எப்படி பேசுறா பாருங்க. போன வாரத்துல உடம்புக்கு முடியலன்னு பெரியாஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துருக்கு மதினி. அங்க வேலை செய்ற பொண்ணு, நம்ம ஊர்ல இருந்த பொண்ணு, தேனி பஸ் ஸ்டாண்ட்ல பார்த்துட்டு சொல்லுச்சி.
உடம்புக்கு எதுவும் பிரச்சினையானு இங்க வந்ததும் உங்களை வச்சு கேட்கலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். அதுக்குள்ள எல்லாத்தையும் கெடுத்துட்டா…” என்று ஆதங்கமாக கூற,
“என்ன… என்ன சொல்றீங்க…? ஏன், நீங்க இதை முன்னமே சொல்லல?” என ஆனந்தி வேகமாக கேட்க,
“ஆமா, உங்ககிட்ட சொல்லிட்டாலும்…” என சலித்த நடராஜ், “நீங்க ரெண்டு நாள் கழிச்சு போய் பார்த்துட்டு வாங்க மதினி.” என்று முடித்துவிட, அதைக் கேட்ட அமுதாவிற்கும் பயம் வந்துவிட்டது.
பொதுவாகவே கொடி யாரிடமும் எதுவும் பகிர்ந்து கொள்ளமாட்டாள். பிரச்சனை ஆனபிறகு பேசுவதே அரிது. இதில் எப்படி தன் பிரச்சனை அனைத்தையும் கூறுவாள்?
“அக்கா இந்த வாரம் நாம போயிட்டு வரலாம் க்கா. நாம இப்படி போக, வர இருந்தாதான் அவளுக்கும் கொஞ்சம் தெம்பு வரும். மனசுக்குள்ள எதையும் யோசிக்க மாட்டா.” என்ற அமுதாவை எரிச்சலாக பார்த்தான் நடராஜ்.
“இத முன்னாடியே செஞ்சிருந்தா அந்த புள்ள நிம்மதியா சாப்பிட்டு போயிருக்கும்.” என்றவன் உள்ளே சென்றுவிட, ஆனந்தியின் முகம் தெளியவே இல்லை.
“நாம அவளை விட்டுட்டோமோ அம்மு?” என்ற ஆனந்தியிடம், ‘ஆம்’ என்று எப்படி சொல்வாள் அமுதா? அமைதியாகிவிட்டாள். அந்த அமைதியே அதற்கான பதிலை சொல்ல, தன் பெண்ணின் விசேஷம் கூட பின்னுக்கு போய்விட்டது ஆனந்திக்கு.
இங்கு கணேசன் ஒரு பெரிய ஹோட்டலின் முன்னே வண்டியை நிறுத்த, அமைதியாக இறங்கிக்கொண்டாள்.
“மாமா கொடியை சாப்பிட வைங்க. நான் கொஞ்சம் சந்தைக்குள்ள போயிட்டு வரேன்.” என இருவருக்கும் தனிமை கொடுத்துவிட்டு சென்றுவிட,
“அப்பா மேல கோபமா கண்ணு? வேற எதுவும் பிரச்சனையா? அவன் வந்து உன்னை மிரட்டி பணம் கேட்குறானோனு பயந்துட்டேன் கண்ணு. அதனாலத்தான் அப்படி கேட்டேன். அப்பாவை மன்னிச்சிடு சாமி…” என்றவரின் கையைப் பிடித்தவளின் இறுக்கமே, உள்ளுக்குள் எவ்வளவு தூரம் வேதனைப்படுகிறாள் என்று அவருக்கு உணர்த்தியது.
“நான் நாளைக்கு பணத்தை எடுத்துட்டு வரேன் கண்ணு, நாம போய் பேசி கொடுத்துட்டு வரலாம். உன் புருசன் இனி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்ல. பார்த்துக்கலாம் விடு… நான் உசுரோட இருக்குறவரை நான் பார்த்துக்குவேன். அதுக்குள்ள உனக்கு ஒருவழி பண்ணிடுவேன் கண்ணு. உன்னை அப்படியே விட்டுட்டு போயிடமாட்டேன்.” என்றவர், இடம் கருதி அழுகையை அடக்கிக் கொண்டார்.
தந்தையின் எந்த பேச்சுக்கும் பதில் கொடுக்கவில்லை கொடி. ஏனோ வார்த்தைகளுக்கு பஞ்சமாகிப் போனது போல் ஒரு எண்ணம்.
“கண்ணு…” என மீண்டும் அழைக்க,
“பஸ் இருக்குப்பா, கிளம்பட்டுமா?” என்றாள்.
“போகலாம் பாப்பா… வா, சாப்பிடாம உன்னை அனுப்பமாட்டேன். சாப்பிட்டு கிளம்பலாம். நானும் தேனி வரைக்கும் வரேன்.” என்றதும் மறுத்து எல்லாம் சொல்லவில்லை.
பெண் சரியென்றதும் அங்குள்ள உயர்தர ஹோட்டலில், அவளுக்குப் பிடித்ததை எல்லாம் வாங்கி சாப்பிட வைத்து தானும் சாப்பிட்டார்.
கணேசன் ஒரு பெரிய பை நிறைய திண்பண்டங்கள் வாங்கி வர, பிள்ளைகள் இதை தொடுவது கூட இல்லை என்று சொல்ல முடியாமல் வாங்கிக் கொண்டாள்.
“பஸ்ல உக்காரு கண்ணு, வரேன்.” என்றவர் மருமகனிடம் வர,
“மாமா, இன்னைக்கு நீங்க கொடி கூட ஊருக்கு போங்க. நான் நாளைக்கு பணத்தோட வரேன். அந்த வட்டிக்காரனுக்கு கொடுத்துட்டு இன்னும் எவ்வளவு மிச்சம் இருக்குன்னு பார்த்துட்டு வந்துடலாம். எதாச்சும் ஏடாகூடமா பேசினா போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணிட்டு வந்துடலாம்.” என்றதும்,
“சரி தம்பி, நீங்க போங்க. அதுங்களும் என்னமோ ஏதோனு பயந்துட்டு இருக்கும்.” எனவும்,
“சரி மாமா.” என்றவன் கொடியிடமும் சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான்.
ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த கொடி, பஸ் கிளம்பிய சில நிமிடங்களிலேயே தந்தையின் தோளில் சாய்ந்து அப்படியொரு தூக்கம்.
பார்ப்பவர்களுக்கு அது சிறுபிள்ளை செய்கை என தோன்றும். ஆனால் அவருக்கும் அவளுக்கும் மட்டும் தானே தெரியும், அதனுடைய மகத்துவமும் வலியும் வேதனையும்.
மகளின் தலையைக் கோதியவரின் கண்களில் வேதனையின் சாயல். தன் மனைவி இருந்திருந்தால் மகளை இந்த வேதனையிலிருந்து சீக்கிரமே வெளிக்கொண்டு வந்திருப்பாளோ? எனக்கு அந்த பக்குவம் இல்லையோ? என் மகளின் இந்த வேதனை எப்போது தீரும்? அய்யா பாண்டி முனி, என் பொண்ணுங்க மூனுக்கும் சேர்த்து மூனு கெடா வெட்டுறேன். என் புள்ள வாழ்க்கைய காப்பாத்தி கொடுத்துடுயா…” என்றவரின் அவசர வேண்டுதல், அந்த முனீஸ்வரனின் காதில் விழுகாமல் போனதோ? போயிடுமோ?
கொடியின் வேதனைகள் தீர்ந்தபாடில்லை. அவளின் தூரங்கள் துயரங்களாகவே போகுமோ…?
***